Skip to main content

Posts

Showing posts from July, 2023

முந்தைய நொடி வரை

மனம் கவரும் நிறம் என்றேன் “நிறமல்ல. உறைந்து போன சாயம்” என்றது ஆளை மயக்கும் நறுமணம் என்றேன் “நறுமணமல்ல. உதிர்ந்து உரமான இலைகளின் வியர்வை” என்றது நீ மலர் தானே என்றேன் “ஆம். நீ பறிப்பதற்கு முந்தைய நொடி வரை” என்றது

லீதல்

லீதல் ஆற்றின் நீரைப் பருகிவிட்டேன் இன்னும் சில நிமிடங்களில் முழு மறதியுண்டாகும் இந்த வாழ்வை மறந்திடுவேன் எவ்வித சலனமுமின்றி உலகமும் என்னை மறக்கும் சந்தேகமில்லை மறதிக்குப் பழக்கிவிட்டால் இறப்பொன்றும் அத்துணை துயரமுமில்லை மறத்தலையும் இறத்தலையும் மயிலிறகால் பிணைத்து வைத்திருக்கும் உன்னைத் தான் முதலில் மறதிக்குப் பழக்குவேன் இறத்தல் என்னைப் பழக்கட்டும்

மழையானேன்

பட்டாம்பூச்சியைப் போல்  படபடத்து திரிந்த  மழலை  அழுவதை பார்த்துவிட்டது  எத்தனையோ முறை அழுதிருக்கிறேன்  கனமான கண்ணீர்த்துளிகளை  இதுவரைக்கும்  யாருக்கும் காட்டியதில்லை  தனிமையில்  ஓ’வென கதறியழுவதை காட்டிலும்  நெடுந்தூரம் பயணித்து  பெருங்கூட்டத்திற்குள் தொலைந்து  மனதை அவிழ்த்தெறிந்து  மௌனமாய் அழுதிடுவேன்  மழலையின்  பிஞ்சு விரல்களில் பதிந்து  றெக்கை முளைத்த  ஓர் கண்ணீர்த் துளி  தூக்கிப் பறந்தது  தூரத் தேசத்தின் காட்டில் மழையானேன்