ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் அவர் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடிக் கொண்டிருந்தன ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டார். வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்கொன்று தலைகுனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் தினக்கூலிகளைப் போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் கலையத் தொடங்கின மேகங்கள். யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் அவரும் நிலவும் தனியானார்கள். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கிறது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கிறது. சங்கிலித் தொடராய் நீளும் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு உற...