Skip to main content

Posts

Showing posts from June, 2023

ஈடு

கடல் தந்த அன்பை மழையாய் பொழிகிறது வானம் விதை தந்த அன்பைப் பூவாய் பூக்கிறது செடி மண் தந்த அன்பைக் கனியாய் துளிர்க்கிறது மரம் ஈன்ற அன்பை இறையாய் வேண்டுகிறது மனம் எதுவொன்றையும் அன்பால் ஈடுகட்ட முடியும் ஆனால் அன்பை ? அன்பை பேரன்பால் ஈடுகட்டுவதே அறம்

பிரதி பிம்பம்

சீரற்ற வேகத்தில்  கோணல் மாணலான வரிசையில் தெளிவற்ற இலக்கைத் தேடி சலனமின்றி நகரும் சாதுவான கருப்பு எறும்பு கூட்டத்தினூடே திக்கற்று அலைவுறுகிறது ஆன்மாவின் பிரதி பிம்பம்
எல்லாமும் புரிந்திட முயன்று எளிதில் ஏமார்ந்துவிடும் சுதந்திரமான அன்புடன் ஆழமான புரிதலும் நுண்ணறிவும் கொண்ட உறவு உணர்ந்த தவறைக் கூச்சமில்லாமல் ஒப்புக் கொள்ளும் இயலாமையை அப்பட்டமாய் வெளிக்காட்டும் புகையும் நெஞ்சை முத்தமிட்டவாறே கம்பறு கத்தியால் கீறும்

கடலோடு

குழந்தைகள் நிறைந்த கடற்கரை  குழந்தையாகவே மாறிவிட்டது கடல் **** சமோசா சுண்டல் விற்பவனின்   வறுமை பருவத்தை எல்லோருக்குமாக  வாசிக்கிறது கடல் **** பல பாதங்கள் பதிந்த பின்னும் பழைய பாதங்களை மறப்பதில்லை கடல் **** ஊரை விட்டு ஓடி வந்தவனை வாழ்விற்கு அறிமுகப்படுத்துகிறது கடல் **** ஞாயிற்றுக் கிழமைகளில் உழைப்பாளர் சிலையை பொலிவுக்கூட்டி காட்டுகிறது கடல் **** கால் நனைக்காமல் போனவர்களின் வருகையைக் கணக்கில் வைப்பதில்லை கடல் **** கடலே கண்ணயர்ந்த பின்னும் உழைப்பாளர் சிலையின் முன் மாங்காய் கீற்றுகள் அரிந்து கெண்டிருக்கிறாள் பார்வை மங்கிய கிழவி