Skip to main content

Posts

Showing posts from December, 2022

யானை பொம்மை

அந்த  சிவப்பு கலர் யானை பொம்மை‌ தான் உனைக் குதூகலித்து உன் அழுகையை நிறுத்தியது எனக்குத் தெரியும் மற்றவர்கள் பெருமை பீற்றுகிறார்கள் நானே அழுகையை நிறுத்தினேன் என்னிடம் வந்ததும் அழுகை நின்றது எந்தக் குழந்தையும் என்னிடம்‌ வந்தால் அழுகையை முழுங்கிவிடும் மகளே! மன்னித்துவிடு பாவம் அவர்கள் குழந்தைகள்!

வழிப்போக்கன்

சத்திரத்தில்  தோதான ஓரமாய் பார்த்து உடலை சாய்த்தான்  எட்டி விடும் தூரத்தில் தான் இருந்தது  நட்சத்திரம் நிலவு உறக்கம் 

அழியாத முத்தம்

ஏதோ  அவசரத்தில்  மகளுக்கு முத்தமிட மறந்து  அலுவலகம் சென்றுவிட்டேன்  நாள் முழுவதும் காற்றில் எதையோ துழாவிக் கொண்டிருந்ததாக‌  இணைவி சொன்னாள் வீடு திரும்பியதும் கரங்களில் ஏந்தி கன்னத்தில் அழுந்த பதித்தேன்  எக்காலத்திற்கும் அழியாத  ஓர் முத்தம்

இடைவெளி

இணைபிரியாத எங்களுக்கிடையில் தவிர்க்க முடியாத ஓர் இடைவெளி கட்டிலின்  ஒரு புறத்திற்கும் மற்றொரு புறத்திற்குமான ஒரு மைல் தூரம் சுருங்கச் சொன்னால் ஓர் உயிரின்  தூரம் மத்தியில்  உறங்குகிறாள் மகள் 

என் கதை

அமிர்தம் தோற்கும் சொற்சுவையில் ஓலைக் குடிசையில் ஒழுகும் மழை நீராய் பலவித உணர்ச்சிகளும் சீரான‌ பாங்கில் சொட்டச் சொட்ட உடல் நரம்புகளைக் கிளர்த்தி  மனதை மிருக‌ வேட்டையாடும் மெல்லிய கித்தார் கம்பியின் அதிர்வலை போல்  கேட்ட மாத்திரத்தில் கண்ணீரைக் கீறும் உப்பு பரல் சொற்களைச் சேர்த்து உருக உருக ஓர் கதையைத் தயாரித்துவிட்டேன் கதை சொல்லும் முன்னேற்பாட்டின் தீவிர முனைப்பில் மற்றவர் கதையைக் கேட்கவில்லை அடுத்தது என் முறை வாசிக்கிறேன் சிற்சிறு முணுமுணுப்புகளின்  பெருங்கூச்சலில் கூர் பார்வை முகங்களின் அனாதரவான  கிழட்டுச் செவிகளில் மழையில் நனைந்த காகிதமாய் நசநசக்கிறது  என் கதை 

அழுகல்

பேருந்திலிருந்து இறங்குவதற்குள் செல் போனில் சேமித்துள்ள அனைத்து எண்களால் ஆகிய முகங்களிடமும் கேட்டுவிட்டேன் கடனாய் ஆயிரம் ரூபாய் இனி துழாவுவதற்கு எண்கள் இல்லை முகங்களும் இல்லை நெரிசலில் மூச்சு முட்ட ஊரைச் சுற்றிக் காட்டிய பேருந்தும் விருப்பமில்லா புழுக்கத்தில் கிடத்திவிட்டுக் கடந்துவிட்டது  கடன் போர்த்திய இருளுடன் மெல்லக் கவிகிறது இரவு சிறுக சிறுக அழுகிக்கொண்டிருக்கிறது நாளை

நெட்.........டி

உறக்கத்தில் பிஞ்சு கரங்களை  நீட்டி மடக்கி கால்களை  முடுக்கி நெட்டி முறிக்கிறாள் மகள் நிமிர்ந்த வானில்  நட்சத்திரங்கள் அரண்டு புரண்டு கடலில் வீழ்கின்றன எழுந்து நின்ற கடல்  அருவியாய் கொட்ட திமிலங்கள் காற்றில் பறக்கின்றன உருண்டு வரும் திமிலங்களை உருட்டி விளையாடும் பூனைகள்  நெளிந்த நிலவு அறுங்கோணமாகி    வாலறுந்த குரங்காய் திகைத்து  அந்தரத்தில் மிதக்கிறது  பிடிப்பின்றி அதுதது  அதனதன் இடத்தில் திகைத்து நிற்க இரவென்பதை மறந்து  இருள் உறியும் நேரம் மலர்ந்த முகத்துடன்  மறுபடியும் உறங்கிவிட்டாள் மகள் நீள்கிறது இரவு

நிஜக்கதை

காலம் தின்று மிச்சமான தளர்ந்த உடலில்  சிதையாத ஓர் சதை துணுக்கென மினுங்கிடும் மூப்பின் கரம் கோர்த்து  நிஜக்கதையைத் தொடங்குகின்றன யாவும்