Skip to main content

வாடகை சைக்கிள்..

  சிறு வயது நினைவுகளை அவ்வப்போது மனதில் அசைப்போடுவது எப்போதுமே ஒரு இனம் புரியாத சந்தோஷம் தான். பசுமரத்தாணிப் போல நெஞ்சில் பதிந்த பதிக்கப்பட்ட தருணங்கள். அதில் ஒரு தருணத்தை நினைவுக் கூரும் வாய்ப்பு "தி ஹிந்து" நாளிதழில் திரைப்பட இயக்குனர் திரு.பாண்டிராஜ் அவர்கள் எழுதிய "பிளாஷ் பாக்" கட்டூரையைப் படிக்கும் போது ஏற்பட்டது.

  ஆறாவது ஏழாவது படிக்கும் காலக்கட்டங்களில் விடுமுறையின் போது பாட்டி வீட்டிற்குச் செல்வதற்காக காத்திருக்கும் நாட்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நாட்கள். தாத்தா பாட்டியை பார்க்க  வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு செல்ல வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது என்னவோ அங்கு கிடைக்கும் ""வாடகை சைக்கிள்""க்காக தான்.

  முழு ஆண்டுத் தேர்வு முடிந்த இரண்டு மூன்று நாட்களில் அம்மாவிடம் அடம் பிடித்து பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவேன். விடுமுறை என்றாலே பாட்டி வீடு தான். எங்கள் வீட்டில் இருந்து கிளம்பிய நொடியில் இருந்தே அந்த சின்ன கம்பி இல்லாத வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றும் எண்ணங்கள் மட்டுமே மனதில் சிறகடித்துக் கொண்டு இருக்கும்.

  பாட்டி வீட்டை அடைந்தவுடன் சாப்பிட்டு விட்டு  நல்ல பையன் போல சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு தாத்தாவிடம் வாடகை சைக்கிள் ஓட்ட காசு கேட்பேன். அவரும் நான் வெகு நாட்கள் கழித்து வந்துள்ளதால் உடனே தந்து விடுவார்.

  காசினை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக பக்கத்துத் தெருவில் வாடகைக்கு சைக்கிள் கொடுக்கும் அந்த அக்கா வீட்டிற்கு சென்று "அக்கா, 5ம் நம்பர் சைக்கிள் 1 மணி நேரம் வாடகைக்கு" என்று குரலிடுவேன். வாடகை ஒரு மணி நேரத்திற்கு 3 ரூபாய் அரை மணி நேரத்திற்கு 2 ரூபாய். உடனே அந்த அக்கா திண்ணையில் இருந்து அந்த சைக்கிளை இறக்கி "சரியா இத்தன மணிக்கெல்லாம் வந்தரனும் என்ன" என்று சொல்லி சைக்கிளைக் கொடுப்பார். சரி என்று தலையை  ஆட்டிவிட்டு அந்த சைக்கிளை ஓட்ட ஆரம்பிக்கும் போது "ஏதோ இந்த ஜில்லாவிற்கே நான் தான் ராஜா" என்பது போன்ற உணர்வு ஏற்படும்.

      நான் ராஜாவாக அந்த ஊரில் மொத்தமாக இருக்கும் நான்கைந்து தெருக்களையும் ஆறேழு முறை சுற்றிவிட்டு அந்த அக்கா வீட்டிற்குச் சென்று "அக்கா, இன்னும் எவளோ நேரம் இருக்கு" என்பேன். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு என்று மறுகுரல் வரும். மறுபடியும் அந்த தெருக்களை ஒரு முறை சுற்றிவிட்டு அந்த வீட்டிற்கு சென்று வாடகை சைக்கிளை விட்டுவிட்டு எதையோ சாதித்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி விட்டு மீண்டும் மறுநாள் இதே போல சுற்றுவதற்கு காத்திருப்பேன்.

     நான் எப்போதுமே அந்த 5ம் நம்பர் சைக்கிளை மட்டும் தான் எடுப்பேன். ஏனென்றால் அந்த ஒரு சைக்கிள் மட்டும் தான் என் உயரத்திற்கு சரியாக இருக்கும். என்னை  முதன் முதலாக ""ராஜாவாக"" உணர வைத்த அந்த 5ம் நம்பர் சைக்கிளையும் விடுமுறை நாட்களையும் என்றுமே மனதை விட்டு விரட்ட முடியாது.

   இது போன்ற ஒரு சில நினைவுகளை நினைத்து பார்க்கும் போது இன்னும் சில வருடங்கள் சிறு வயதிலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அதிகமாகிறது..

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...