"உனக்கு எவ்வளவோ பரவால்ல கார்த்தி. சென்னைக்குப் போய் அஞ்சாறு வருஷத்துக்கு மேல ஆச்சு ஆனாலும் உன் தலைல இன்னும் "முடி" நெறைய கெடக்கு. என் பையனுக்கெல்லாம் சென்னைக்குப் போன ஒரு வருஷத்துலேயே தலைலயிருந்த மொத்தமும் கொட்டிப் போயிடுச்சு. என் பையனுக்கு மட்டும் இல்ல அவன்கூட இருந்த எல்லாத்துக்குமே கொட்டிப் போச்சு. கல்யாணத்தப்ப வெறும் தலையோட தான் நின்னானுங்க. நீயாவது கவனமா முடி'ய பாத்துக்க இல்லன்னா ரொம்ப கஷ்டம். 'முடி'யிருந்தா தான் சீக்கிரம் கல்யாணம் முடியும்'..." கையில் டீயைக் கொடுத்துவிட்டு கடகடவென்று பேசி முடித்தார் அந்தப் பெரியம்மா. டீக் குடிக்கத் தொடங்கினேன். டீ உள்ளிறங்க இறங்க சிந்தனைகள் மெள்ள மெள்ள வெளிவந்தன. பையனின் பழக்க வழக்கம், குணம், வேலை, சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவற்றுடன் "தலையில் முடியிருக்க வேண்டும்" என்பதும் கல்யாணத்திற்கான மிக முக்கியமானதாகக் கருதப்படும் அடிப்படை எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போலிருக்கிறது. அதே போல, "சென்னைக்குப் போனால் ஏதாவது ஒரு வேலைச் செய்து வயிற்றைக் கழுவிக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்...