தற்காலிக பணியின் சொற்ப சம்பளத்தில் தான் உண்டு, தன் வேலையுண்டு என முடிந்தமட்டும் மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளோடு இல்லறத்தைச் சந்தோசமாகப் போக்கிக் கொண்டிருக்கிறான் நடராஜி.
வருடத்திற்கொரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறை எனச் சீரற்ற இடைவெளியில் காலங்காலமாக நடுத்தர வர்க்கத்தின் தலை மேல் தொங்கும் "வீட்டு வாடகை" எனும் வாள் மற்றுமொரு முறை கழுத்தைப் பதமாய் வெட்ட, வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்கிறான். எதிரே அரசியல், ரவுடியிசம், பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடும் "ஜி.ஏ" என்ற முக்கிய புள்ளியின் வீடு.
குடிபெயர்ந்த அடுத்த நாளிலிருந்தே, "ஜி.ஏ" வின் அடாவடித்தனங்களால் அச்சமும், பதற்றமும் அடையும் நடராஜி, வேறு வீட்டிற்கு மாறி உடனடியாக தலைவலியிலிருந்து விடுபட முயல்கிறான். "விருப்பமில்லை. வேற ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனத் துணிந்து சொல்லும் தைரியமின்றி, எதிர்ப்பும் காட்டாமல் , மறுப்பும் சொல்லாமல் தனக்குள்ளேயே அல்லல்வுறுகிறான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மனைவி பிரேமாவிற்கு வீடும், சுற்றமும் பிடித்துவிடுகிறது. ஆதலால் "ஜி.ஏ" மீதான நடராஜின் அதிருப்தியைக் கனிவாய் உதாசீனப்படுத்துகிறாள். இன்னும் சொல்லப்போனால் நடராஜிக்கு "ஜி.ஏ" மீது ஏற்படும் அத்தனை ஒவ்வாமைகளையும், ஏதோவொரு விதத்தில் தொடர்ந்து உடைத்துக் கொண்டே இருக்கிறாள். "ஜி.ஏ" வினால் உண்டாகும் கணிசமான பொருளாதார உதவி ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் நடராஜிமே கூட, "ஜி.ஏ" வை நல்லவன் தானோ என எண்ணத் தொடங்கும் வேளையில் வேறொரு முடிவுடன் நாவலும் முடிகிறது.
அதீத பயமானது துணிச்சலை விழுங்கி சூதானத்தை முனை மழுக்கும் போது மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் ஆயுட்கைதியாகி விடுகிறான் என்பதைப் போகிற போக்கி நாவல் உணர்த்துகிறது.
அலங்கார பூச்சுகள் இல்லாத, வாசிப்பதற்கு எளிய சுவாரசியமான நாவல்
கார்த்திக் பிரகாசம்…
Comments
Post a Comment