Skip to main content

மூத்த அகதி - வாசு முருகவேல்

நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கிக் கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில்தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில்.

முன்னுரையில் வாசு முருகவேல் மேற்குறிப்பிட்டுள்ள இவ்வரிகளே நாவலின் அடிநாதம்.

எந்த இடத்திலும் துவக்கைகளின் சப்தம் இல்லை. எத்தரப்பை முன்வைத்தும் போர்க் குறித்தான நியாய தர்க்கங்களோ, எதிர்ப்புகளோ முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்நாவல் அறிமுகப்படுத்தும் களம் வேறொன்று. போர் குடித்த மரணங்களைக் காட்டிலும், போர்ச்சூழலினால் சொந்த மண்ணையும், நாட்டையும் இழந்து வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த / இடம்பெயர்ந்திட முயற்சிக்கும் அகதியாய் ஆக்கப்பட்டவர்களுக்கு இச்சமூகம் கைமாறாகத் தந்திடும் இரக்கமும், கருணையுமற்ற வாழ்க்கையின் கொடுமையைப் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்கிறது நாவல். பேசும் மொழி புரிந்திடாத, கலாச்சாரம் அறியாத அந்நிய நாடாய் இருந்தால்கூட பரவாயில்லை என மனதை ஆற்றுப்படுத்த முயலலாம். ஆனால் காலங்காலமாக எம் இரத்தம், எம் சகோதர சகோதரிகள், எம் தொப்புள் கொடி உறவுகள் என மார்புயர்த்தி முழங்குமொரு நாட்டில் தொடுக்கப்படும் அநீதியை, சிதைந்த வாழ்வைச் சுமந்து திரியும் மனிதர்களுக்கு இழைத்திடும் அக்கிரமத்தின் உச்சமாகவே கருத வேண்டியிருக்கிறது.

இதில் ஒற்றை கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையோட்டம் கிடையாது. பல முகங்கள். பல நண்பர்கள். சதா 'அகதி', 'அகதி'யென துடிக்கும் இருதயத்திற்குப் பிறந்தவர்கள். இராணுவ மற்றும் காவல் உடை அணிந்தவர்களைக் கண்டதும் அனிச்சையாய் பெருக்கெடுக்கும் மரண பயம், வீடு கிடைப்பதிலும், மாற்றிச் செல்வதிலும் உள்ள சிக்கல்கள், ஒவ்வொருமுறை மாறும்போதும் வீட்டின் உரிமையாளரிடம் ஒப்புதல் கையொப்பம் பெற்று, அந்த பகுதிக்கான காவல் நிலையத்தில் அகதிக்கான அடையாளத்தைப் பதிவு பண்ணிக் கொள்ள அதிகாரத்தின் முன் காத்து நிற்கும் - சொந்தமாக ஏடிஎம் அட்டை கூட வைத்துக் கொள்ள முடியாத உதிரிகளே கதையின் மாந்தர்கள். 'இலங்கைத் தமிழர்கள்' என முழங்கும் அரசியல்வாதிகளுக்கு, 'இலங்கைத் தமிழர்' இல்லை "ஈழத் தமிழர்" என்றும், அது "இலங்கை இனப்படுகொலை" அல்ல "ஈழ இனப்படுகொலை" என உரக்கச் சொல்ல எத்தனிக்கும் குரல், நசிந்து போன வாழ்வின் களைத்து ஓய்ந்த தொனியிலே நாவலில் விரவியிருக்கிறது. 'உங்க தமிழ் வித்தியாசமா இருக்கு.. நீங்கள் சிலோனா?' என்பது போன்ற இளப்பான கேள்விகள் உண்டாக்கும் வலி. கடக்க முடியாத அந்த வலி ஏற்படுத்திடும் ஆற்றாமையே பல இடங்களில் பகடியாக வெளிப்படுகிறது எனத் தோன்றுகிறது.

முக்கிய கதாபாத்திரமான வாசன். நோய்வாய்ப்பட்ட வயோதிக தந்தையைக் கவனிக்கும், தினமும் காலையில் தேவாரம் பாடும் தனது தாயைப் பற்றியதான குறிப்பில் வரும் "பழகி விட்ட எந்த பாரமும் மனதை அழுத்துவதில்லை. அம்மாவின் முகத்தில் நீண்ட தூக்கம் ஒன்று ஆழப் புதைந்து கிடந்தது. அதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருட ஆயுள் இருக்கும்" வரிகள் மனதில் அறைகின்றன. வாசனின் தந்தையை படிப்படியாக ஆக்கிரமிக்கும் மரணம் கண்முன்னே காட்சியாய் விரிகிறது. நாவலின் இறுதியில் காலாவதியான அரசியல் குடும்பத்தின் வாரிசான சிவசிதம்பரத்தின் கொலை, சமீபத்தில் நிகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை நினைவூட்டுகிறது.

எழுத்துப்பிழையா, பெயர் மாறிவிட்டதா எனத் தெரியவில்லை. சில இடங்களில் பெயர் மாறி வந்து, அதே கதாபாத்திரமா அல்லது புதியதா என ஒருகணம் குழப்புகிறது.

அகதி வாழ்வில் நிகழும் அக்கிரமம், வயிற்றுப்பாடு, திருமணம், காதல், காமம், ஆற்றாமை, குடி, மரணம் போன்றவற்றை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.


கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...