Skip to main content

அந்த அழகானத் தக்காளிச் சட்னி

மிஞ்சிப் போனால் அதிகபட்சமாக மூன்று தோசைகளைச் சாப்பிடலாம். அவ்வளவுக்கு தான் சட்னி இருந்தது.

அது ஒரு அழகானத் தக்காளிச் சட்னி. சாப்பிட சாப்பிட நிறைந்தும் நிறையாமலும் வயிற்றைப் பார்த்துக் கொள்ளும் மாயாஜால சட்னி. நான்கைந்து தக்காளி பழங்களை நன்கு வதக்கி, தேங்காயைச் சில்லு சில்லுகளாகத் துருவி, மிளகாய் மற்றும் கல் உப்பை தூவி அம்மியில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து எடுத்தால், வாசம் அதற்குள் வயிற்றின் வாசலில் நின்று பசியின் கதவைத் தட்ட துவங்கியிருக்கும். பின் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்யில் ஐந்து கிராம் கடுகை மிதமான வெப்பத்தில் குளிக்க வைத்து அதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டி கலக்கி முடிப்பதற்குள் மொத்தக் குடும்பமும் தட்டுடன் சாப்பிட தயாராயிருக்கும். அந்த அழகானத் தக்காளிச் சட்னிக்குத் திருஷ்டிக் கழிப்பது போல் ஆங்காங்கு எண்ணெயில் குளித்தக் கடுகுக் கூட்டம் மிதந்திருக்கும்.

ருசியைக் குறிக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாமல் "அழகு" எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். சாதாரணமான தொட்டுக் கொள்ளும் பதார்த்தமாக மட்டும் இருந்திருந்ததால் அதன் சுவையைப் பற்றிய விவரணைகளோடு கடந்திருக்கலாம். ஆனால் அவ்வீட்டை பொறுத்தவரையில் தக்காளிச் சட்னி அச்சிந்தனை வரம்புக்கு அப்பாற்பட்டது. காரணம் அவர்கள் தக்காளிச் சட்னியை விரும்புபவர்கள் அல்ல கொண்டாடுபவர்கள்.

மூன்று தோசை சாப்பிடும் அளவுக்கே தக்காளிச் சட்னி இருந்தது அன்று. அதை மகளுக்காக எடுத்து வைத்திருந்தார் அம்மா. திடுமென கணவர் வருவார் என எதிர்பார்க்கவில்லை அவர். சிடுசிடுவென கடுமையான பசியுடன் வந்த கணவருக்கு எதுவும் சொல்லாமல், இருந்த தக்காளிச் சட்னியைக் கொடுத்து தோசை போட்டுக் கொடுத்தார் அம்மா. மகளுக்குச் சாப்பிட வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மகளும் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளும் பசியுடன் தான் வந்திருக்கிறாள் போலும். வந்த உடனே தட்டை தூக்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்துவிட்டாள்.

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ" என்று சமயலறையிலிருந்து மகளுக்குச் சைகை காட்டியபடியிருந்தார் அம்மா. அவரின் முகம் அப்போது கெஞ்சுவது போலிருந்தது.

ஆனால் மகள் கவனிக்கும் முன் கணவர் அதைக் கவனித்துவிட்டார்.

"புள்ளைக்குத் தோச கொண்டு வா" கணவர் குரலை உயர்த்தினார்.

"இல்ல.. நீங்க சாப்பிட்டு எழுந்திரிங்க. ரெண்டு நிமிஷத்துல பொட்டுக் கடல சட்னி அரைச்சிட்டு அவளுக்குத் தோச ஊத்திக் கொடுக்குறேன்". குரல் நடுங்கியவாறு அம்மா சொன்னார்.

"அதெல்லாம் ஒண்ணும் அரைக்க வேணாம். இன்னும் இதுல தக்காளிச் சட்னி இருக்கு".

"அதுவே கொஞ்சம் தான் இருந்தது. எப்பிடி மீதி இருக்கும்".

பொறுமையிழந்துக் கேட்டார் அம்மா. அவருடைய முகம் இப்போது பரபரப்பாய் இருந்தது.

அப்பா சொன்னார்..

"இன்னைக்குத் தக்காளிச் சட்னி பேரழகு. பாத்துக்கிட்டே இருக்குலாம் போல இருந்திச்சி. அதனால பாத்திரத்தோட ஓரத்துல ஒட்டி இருக்கிற சட்னிய தான் கொஞ்சம் கொஞ்சமா தொட்டு சாப்டேன். இதுல அழகா இன்னும் மீதி இருக்கு. இத வச்சி இன்னும் மூணு தோசை சாப்புடுலாம். நீ புள்ளைக்கு தோசை ஊத்திக் கொடு. எனக்குப் போதும்."

"இல்லப்பா. பரவால்ல. நீங்க சாப்புடுங்க." மகள் கொஞ்சினாள்.

"கண்ணு...! இங்க பாரு...! தக்காளிச் சட்னி எவளோ அழகா இருக்கு. சந்தோசமா சாப்புடு".

அந்த அழகானத் தக்காளிச் சட்னியை மகள் பார்த்தாள். அவளுக்குப் பசி இன்னும் அதிகரித்தது.

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...