Skip to main content

ஷர்மிளாவும் கலையரசியும்

யாராவது என்னைப் பார்த்து "எந்தப் பள்ளியில் படிக்கிற" என்றுக் கேட்டால், "மாநகராட்சி நடுநிலைப் பள்ளி" என்றுச் சொல்லுவேன். பின்பு அவர்கள்,

மாநகராட்சி நடுநிலைப் பள்ளியா..? அது எங்க இருக்கு..

"லாரி மார்க்கெட்டுகிட்ட காந்தி செல இருக்குல்ல".. அங்க.

"ஓ.. அந்த ஓட்ட பள்ளிக்கூடமா.. ஏன்டா ஓட்ட பள்ளிக்கூடத்துல படிக்கிறேன்னு சொல்லவேண்டியது தானா. அதவிட்டுட்டு மாநகராட்சியாம் நடுநிலை பள்ளியாம்"

ஓட்ட பள்ளிக்கூடம். அப்படித்தான் ஊரில் எல்லோரும் சொல்வார்கள். செவ்வாய் பேட்டை ரோட்டில் நேராகப் போனால் நடுவில் ஒரு லாரி மார்கெட் வரும். லாரி மார்க்கெட்டிலிருந்து சாலை மூன்றாகப் பிரியும். அதில் எந்தப் பக்கத்தை நோக்கி நடப்பது போல் காந்தி கையில் தடியோடு நிற்கிறாரோ அந்தச் சாலையில் நடந்தால் நூறு மீட்டரில் இடதுபுறத்தில் அரசுப் பள்ளிக்கான அத்தனை அடையாளங்களோடும் எங்கள் பள்ளி இருக்கும்.

அப்பாவைத் திட்டியவாறே விண்ணப்ப படிவம் நிரப்பி, கட்டணமாக இருபத்தி ஐந்து ரூபாய் செலுத்தி அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் அம்மா என்னைச் சேர்த்துவிட்டதை நினைவுக் கறைகள் இன்னும் ஞாபகம் வைத்துள்ளன.

அப்போது தலைமையாசிரியராய் இருந்தவர் ராதா மிஸ். பழைய நாலணா சைஸில் நெற்றியில் பொட்டு வைத்திருப்பார். பார்க்க பயமாய் இருக்கும் ஆனால் குணமானவர். சிவகாமி டீச்சர் ஆரம்பத்தில் இருந்தே என்னைப் பற்றி நல்லவிதமாக சொல்லியிருந்ததால் ராதா மிஸ்க்கு எப்போதுமே என்மேல் தனிப் பாசம். அம்மாவையோ அப்பாவையோ எப்போதாவது ரோட்டில் பார்க்க நேர்ந்தால்,"நல்லா படிக்க வைங்க. பாதியில நிறுத்திட்டு ஒங்கக்கூட கட வேலைக்குச் சேர்த்துராதீங்க. அருமையா படிக்கிற பையன். பின்னாடி பெரிய ஆளா வருவான்" என்றுச் சொல்வார். சந்தோஷத்தில் பள்ளியின் வாசலில் பெட்டிக் கடை வைத்திருக்கும் பாட்டியிடம் ஒரு ருபாயோ இரண்டு ருபாயோ கொடுத்துவிட்டு "பையன் வெளிய வரப்ப ஏதாவது தீனிக் கொடுங்க" என்றுச் சொல்லிவிட்டு போவார் அப்பா. ராதா மிஸ், சிவகாமி டீச்சர் தையல் நாயகி டீச்சர், தனபால் வாத்தியார் மற்றும் ஜெயபால் சார். ஜெயபால் சார் துணைத் தலைமையாசிரியர். இவர்கள் தான் பள்ளியின் முகங்கள். அதென்ன அவங்க மட்டும் "மிஸ்" மத்தவங்களாம் "டீச்சர்". அது அப்படித்தான். வகுப்பெடுத்தால் "டீச்சர்" இல்லையென்றால் "வாத்தியார்". தலைமை ஆசிரியராக இருந்தால் "மிஸ்" அல்லது "சார்". யார் இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்தது என்றுத் தெரியவில்லை ஆனால் அப்படித்தான் எங்கள் மனதில் பதிந்திருந்தது அல்லது பதிய வைக்கப்பட்டிருந்தது.

நான் நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ இருக்கும் போது ஷர்மிளாவும் கலையரசியும் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். இரட்டையர்களைப் போல எப்போதும் இணைந்தே இருப்பார்கள். ஆனால் அவர்கள் உடன் பிறந்தவர்கள் அல்லர். அருகருகே தம் வீடுகள் அமையப் பெற்ற ஆசிர்வதிக்கப்பட்ட தோழிகள். ஷர்மிளா கருப்பு நிறம். அந்த பொன்னிற மூக்குத்தி அவளுக்கு அவ்வளவு வசீகரமாய் இருக்கும். அரைத்த கோதுமை நிறம் கலையரசிக்கு. சிரிக்கையில் தர்பூசணி கன்னங்களில் குழி விழும். உடலும் சேர்ந்து சிரிக்கும். தூரத்தில் இருக்கும் ஏதோவொரு கரடு அடிவாரத்திலிருந்து இருவரும் பள்ளிக்கு நடந்தே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

"எப்படி உண்டானது என்று தெரியவில்லை".. இருவருமே என்மீது பெரும் அன்பாய் இருந்தார்கள். ஆளுக்கொரு கையைப் பிடித்துக் கொண்டு என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு ரொம்ப சுற்றாக இருந்தாலும் என்னை வீட்டில் பத்திரமாய் விட்டுவிட்டுச் செல்வதற்காக அந்த வழியில் வருவார்கள். அம்மாவிடம், "அக்கா. உங்கப் பையனப் பத்தரமா கூட்டியந்துட்டோம்" என்றுக் குரல் கொடுத்துவிட்டு மறுகுரல் எதிர்பார்க்காமல் நடையைக் கட்டுவார்கள். பள்ளிக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் கடை வைத்திருக்கும் பாட்டியிடமிருந்து நெல்லிக்காய், இலந்த வடை, வெடங்கா, புளியங்கா, பப்பாளி என்று தினமும் ஏதாவது வாங்கித் தருவார்கள். அவர்கள் அந்தப் பாட்டியிடம் அக்கௌன்ட் வைத்திருக்கிறார்கள் என்பது பின்பு தான் தெரிந்தது. அவர்கள் அக்கௌன்ட் வைத்திருந்த அந்த ஐந்து ரூபாயை எப்படியாவது அவர்களுக்கு முன்னால் நான் கொடுத்துவிட முயன்றுக் கொண்டிருந்தேன். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது.

மனம் தன் வளர்ச்சியைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்ட தேவி என்று பெண்ணொருத்தி எங்கள் வகுப்பில்
புதிதாக வந்து சேர்ந்திருந்தாள். அவளின் வீடும் எங்கள் தெருவிலேயே இருந்தது. ஆதலால் அவளின் அம்மா பள்ளிக்கு அவளை வந்து விடும்போதெல்லாம், "புள்ளைய அப்டியே கொஞ்சம் பாத்துக்கோப்பா" என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போவார். தெரிந்த பையன் என்பதால் அவளும் என்னைப் பின் தொடர்ந்தவாறும் , பார்க்கும் போதெல்லாம் சிரித்தவாறும் இருப்பாள். யாராவது அவளைத் திட்டிவிட்டால் என்னிடம் வந்து புகார் செய்வாள். ஒருகட்டம் வரைக்கும் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பையன்கள் எல்லோரும் ஒன்றுச் சேர்ந்து என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

"டேய். பைத்தியம் தான்டா அவன்கூட பேசும்" "பைத்தியத்துக் கூட பேசிப் பேசி அவனும் பைத்தியம் ஆயிடுவான்டா". " அவனும் அந்தப் பைத்தியமும் காதலிக்குறாங்க டா" "அவனும் அந்தப் பைத்தியமும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கடா" என்று பள்ளி முழுவதும் பரப்பினர். பள்ளிக்குச் செல்லவே எனக்கு வெட்கமாக இருந்தது. பையன்கள் கிண்டல் செய்யும் போதல்லாம் அவமானத்தால் அழுதுவிடுவேன். ஒவ்வொரு நாளும் எப்போடா பள்ளி முடியுமென்று காத்திருப்பேன். இதெல்லாம் எதுவுமே அறியாத அவள் வெள்ளந்தியாய் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருப்பாள். பதிலுக்கு நானும் சிரித்து வைப்பேன். பாவம் அவள் என்னச் செய்வாள்..

ஒருநாள் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்கையில் ஷர்மிளாவும் கலையரசியும் பார்த்துவிட்டனர். நான் எப்போது வேண்டுமானாலும் கண்ணீர் வந்துவிடும் நிலையில் இருந்தேன். அவர்கள் நேராக என்னை நோக்கி வந்தனர். கேலிச் செய்திருந்தவர்களையெல்லாம் திட்டுத் தீர்த்துவிட்டு என் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றனர்.

அதன்பின் யாரும் என்னைக் கிண்டல் செய்யத் துணியவில்லை. ஏனென்றால் எப்போதும் தங்கள் பார்வையில் படும்படியே ஷர்மிளாவும் கலையரசியும் என்னைப் பார்த்துக் கொண்டனர்.

இப்போது எண்ணிப் பார்த்தால் அவர்கள் என்னைத் தங்கள் குழந்தையாகவே பாவித்திருக்கிறார்கள் என்றுத் தோன்றுகிறது.

நினைவடுக்குகளில் நிறமற்றவர்களாய் இன்னும் நிறைந்திருக்கும் ஷர்மிளாவும், கலையரசியும் இப்போது எங்கே என்ன செய்துக் கொண்டிருப்பார்கள்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...