Skip to main content

Posts

Showing posts from September, 2022

ஆழம்

ஆழமானவொன்றைத் தேடி  அருகிலிருந்ததைத் தொலைத்துவிட்டேன்  மனம் தவிர்த்து யாவும் அழுகி சீழ் வடியும் கட்டத்தில்  காலம் கனிந்திருக்கிறது அருகிலிருந்ததன்  ஆழம் அறிய

அவர்களே

அழுது தீர்த்துவிட்டேன் சொற்கள் தேயுமளவு புலம்பிவிட்டேன் மனமின்னும் மீளவில்லை  மரணப் படுக்கையில் உயிரைச் சீராக வெளியேற்றும் சுகமற்ற ஜீவனாய்  பேயறைந்து நின்றிருந்தேன் ஆறுதல் சொல்லவோ அரவணைக்கவோ ஆட்கள் இருந்தனர் ஆனால் முகங்களில்லை அவர்களுக்கு கண்முன்னே  உயிர் கசிய இறந்து கொண்டிருந்தது நானல்ல மனிதமும் அவர்களும் தான்
என்றோ கண் சிமிட்டிவிட்டுத் திக்குத் தெரியாமல்  தொலைந்த பறவையை தினந்தினம் தேடிச் சலிக்கும்  பஞ்சிதத்திற்கு பறவையிடம்  புகார்களில்லை

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலத்தைப் போலத் துரித நேரத்தில் உருவானதில்லை ஷோபனாவின் அன்பு நெடுங்கால பாசி போலக் கண்டுணரப் படாமல்  கூடவே படர்ந்து கிடந்தது மழலையின் கரங்களில் அகப்பட்ட விலையுயர்ந்த பொருள்  போன்றது அது இருப்பினும்  ஷோபனாவின் அன்பை உணர்ந்து கொள்ள தன் அன்பை துட்சமென கருதும் ஓர் உறவில் வீழ்ந்து நோக வேண்டியிருக்கிறது என்னவாயினும்  ஒரு கட்டத்தில்  தன்னைத் தேடித் திரும்பி வரும் அன்பை ஷோபனா வீம்புக்கேனும்  வெறுத்து ஒதுக்குவதில்லை யாராலும்  புரிந்து கொள்ளக்கூடிய  ஆனால் எல்லோராலும்  விளங்கிக்க முடியாத அன்பு ஷோபனாவின் பலவீனமல்ல தூய அன்பின் பலவீனம்

மகளதிகாரம்

நிலமும் மழையும்  மத்தளம் கொட்டி ஆர்ப்பரிக்கின்றன பெரும் பண்டிகைக்கான உற்சாகத்தில் மஞ்சள் குளித்து தயாராகிறது  மாநகரம் சோர்ந்து போன சோலையில்  புதிதாய் ஓர் வாசனை சுதந்திர உலகின் புது அத்தியாயம் எழுதிட வேர்களின் சாயலில் மலரொன்று பூத்திருக்கிறது

கவிதை

பசியானால் காம்பைத் தேடிப் பசியாறிடும் மழலை தனக்கான சொற்களைத் தானே நிறைத்துக் கொள்ளும்  கவிதை

தீட்டு

பெண்‌ மகவு ஈன்ற  ஈத்துக்காரிக்கு  தீட்டு கழிக்க வேண்டுமாம்.? தீவிரமாகத் தீட்டற்ற ஓர் உயிரைத்  தேடிக் கொண்டிருக்கிறேன் ஏனெனில் ஈன்றவள் தீட்டென்றால் ஈன்றதனைத்தும் தீட்டே இவ்வுலகில்