Skip to main content

சென்னை வந்தது முதலான ஐந்து வருடக் காலத்தில் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறையை முழுமையாக அனுபவித்தது இந்தமுறை தான். ஆர்ப்பாட்டமில்லாத, கழுத்தை நெரிக்காத அமைதியான நாட்கள். மூன்று வேளை திருப்தியான உணவு, தின்றுத் தீர்க்க முடியாத திண்பண்டங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக முழு இரவு உறக்கம் மற்றும் பொழுதை மறக்கடித்த மதிய உறக்கம்.

ஆனால் வழக்கம்போல விடுமுறை நாட்களை யாரோ ஃபாஸ்ட் பார்வெடு செய்தது போன்றதொரு உணர்வு. ஐந்து நாட்கள் போன வேகமே புலப்படவில்லை

பண்டிகையென்றால் சிலருக்கு கொண்டாட்டம், சிலருக்கோ வீண் செலவு, சிலருக்கு சொந்த ஊருக்குச் செல்ல ஓர் காரணம். 

பண்டிகை மற்றும் விழாக் காலங்களின் மொத்த ஜீவனும் ஒளிந்திருப்பது என்னவோ குழந்தைகளிடமும், புதுமணத் தம்பதிகளிடமும் தான். அவர்கள் இல்லையென்றால் பண்டிகைகளும் வெறுமனே வந்துச் செல்லும் வார நாட்களைப் போலாகிவிடும்.

நண்பகல் வரை வெறுமனே இருந்த தீபாவளி நாள், தங்கை மருமகன் மாமா என மூவரும் வீட்டிற்கு வந்தவுடன் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.அவர்களின் இருப்பு தீபாவளியை ஒளிமயமாக்கியது.மருமகனின் சேட்டைகள் மாலைப் பொழுதை வண்ணமயமாக்கியது. அவர்கள் கொளுத்திப் போட்ட பட்டாசுகளில் உற்சாகம் உரக்க ஒலித்தது. அந்த உற்சாகம் வீட்டுச் சுவரின் ஒவ்வொரு பகுதியிலும் எதிரொலித்தது.

சுவர்களில் எதிரொலிக்கும் இந்த உற்சாசம்தான் அப்பா அம்மாவை சில காலங்கள் நிம்மதியாக உறங்க வைக்கப் போகிறதென்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஐந்து நாட்களிலுமே ஓய்வில்லாமல் வேலைச் செய்து கொண்டிருந்த ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். காலை உணவு முடிந்து நாங்கள் கைக் கழுவிக் கொண்டிருக்கும் வேளையில், அவள் சாப்பிடாமல் மதிய உணவிற்கு வேண்டியதை தயார் செய்து கொண்டிருக்கிறாள். மதிய உணவு முடிந்து நாங்கள் சற்று ஓய்வெடுக்க முற்படுகையில், அவள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது முடிந்தவரை சில வேலைகளை பகிர்ந்து கொண்டாலும் முழுமையாக முடியவில்லை.  ஆதலால் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி துரத்திக் கொண்டே இருக்கிறது. அம்மாக்களுக்கு வேலை வைக்காத பண்டிகைகள் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

விடுமுறை முடிந்து வீட்டிலிருந்து கிளம்பியதும், "மீண்டும் அடுத்த விடுமுறை வரும் வரை இந்த நினைவுகளைக் கொண்டு தான் காலத்தை கடத்த வேண்டும்" என்று யாரோ காதில் சொன்னது போல் இருந்தது.

விழித்துப் பார்த்தால் "சென்னை அன்புடன் மீண்டும் வரவேற்றது"...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...