Skip to main content

Posts

Showing posts from August, 2018

அடிநாதம்

அதிலொன்றும் ஆச்சரியமில்லை. உலகம் புரிந்திடாத, உறவுமுறைகளின் புதிர்கள் தெரிந்திடாத பருவத்திலேயே அழகானத் தோழமையுடன், ஆழமான அன்புணர்வுடன் ஒரு சிநேகிதி கிடைக்கப் பெற்றிருந்தால் இச்சமயம் நீங்களும் ஒரு கவிஞனாக இருந்திருப்பீர்கள். கலையை ரசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அது உண்டாக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஆழ்ந்து நேசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அதனை உடலெங்கும் பரவவிட்டு, ஒவ்வொரு நொடியிலும் இருத்தலின் சுகத்தை அனுபவித்திருப்பீர்கள். இருத்தலின் சுகத்தில் இல்லாமல் போகும் வழியையும் கண்டடைந்திருப்பீர்கள். அது சொர்க்கத்திற்குச் செல்லும் வழியல்ல. நம் சொர்க்கத்தை நாமே கட்டமைத்துக் கொள்ளும் வழியென்று அறிந்திருப்பீர்கள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் புரிதல் மற்றவர்களுக்கு புரியாது. வேறாரும் அவ்விடைவெளிக்குள் புகுந்திடவும் முடியாது. அது எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நிரந்தர புகலிடம். உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிணற்றில் நீர் இறைப்பது போல நெஞ்சில் உணர்வுகளைத் தொடர்ந்து இறைத்துக் கொண்டேயிருப்பாள். எழுத முயற்சித்தால் காகிதத்தில் அவளது முகமே தெரியும். கொட்டித் தணியும் உணர்வுகளுக்கும், ...

அப்பா இறந்துவிட்டார்

அறுபது வருடத்துக்கும் கூடுதலாக ஓய்வின்றி ஓடியாடி உழைத்த ஓர் உடல், இன்று தன் ஜீவனை இழந்து வீட்டின் மத்தியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறது. கொஞ்ச நஞ்ச உழைப்பா.? செருப்பை மறந்த கால்கள் வீங்கிப் போய் தன் அசல் அமைப்பையே தொலைத்திருந்தன. சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் மனுஷன் வீட்டில் தங்கிப் பார்த்ததில்லை. 'காய்ச்சல் தலைவலி' என்று ஒரு தடவையேனும் மருத்துவமனைக்குச் சென்றதாக நினைவில் இல்லை. எந்த நோயாக இருந்தாலும், "அம்மா வைத்து தரும் ஒரு டீ போதும். உடம்பை விட்டு தலைத்தெறிக்க ஓடிவிடும்' என்பார் சிரித்துக் கொண்டே. ' குருகிய கால இலக்கு, வாழ்நாள் இலக்கு' என்று இலக்கைத் திடமாக நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி சளைக்காமல் உழைப்பதையும், பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டுவதையும் உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். ஏன் சிலசமயம் பொண்டாட்டியை எப்படி நடத்தக் கூடாது என்பதையும் கூட உங்களிடமிருந்து தானே கற்றுக் கொண்டேன். 'சொந்தபந்தம் விதிக்கும் நிர்பந்தங்கள், ஊர் உலகம் பேசும் நாலு வார்த்தைகளைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்திரமாக காட்டாற்று வெள்ளம் போன்ற உங்களுடையச் செய...

நான் நிரந்தரமானவன்

அது என் உலகம் நானே கட்டமைத்த உலகம் அங்கு நான் கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் உரைப்பதை ஊரே முழங்கும் எவராவது அவ்வப்போது புதிதாக வருவார்கள் சில காலம் இருப்பார்கள் சிலர் சொல்லிக் கொண்டு போவார்கள் சிலர் சொல்லாமலே செல்வார்கள் சென்றவர்களின் நினைவுகள் எங்கும் செல்லாது என்னுடனே இருக்கும் பெரும்பாலும் நானும் நானாகிய நானும் மட்டும் தனித்திருப்போம் அந்நினைவுலகத்தில் என்றும் நான் நிரந்தரமானவனாக இருப்பேன் அங்கு நான் கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் உரைப்பதை ஊரே முழங்கும் கார்த்திக் பிரகாசம்.. .

உருவமற்ற நிழல்

கடந்த கால புகைப்படங்களைப் பார்க்கையில், வாழ்க்கை வலுக்கட்டாயமாக எங்கோ என்னை கடத்தி வந்துள்ளதைப் போன்றதோர் மாய உணர்வு உள்ளத்தில் உண்டாகும். உடனே தாடியைத் தடவியவாறு அந்தரத்தை வெறித்துப் பார்ப்பேன். இப்போதைக்கு தேவையில்லை என்று அலமாரியில் அடைக்கப்பட்ட பாத்திரங்களில் ஒட்டி விரிந்திருக்கும் ஒட்டடை, காற்றின் சுழற்சிக்கு ஏற்ப அறுந்துவிடாமல் ஆடுவது போல் அந்த பழைய நினைவுகள் மனதிற்குள் நிர்வாணமாய் ஓடும். மறுபடியும் தூக்கிக் கொண்டு போய் இறந்த காலத்தில் இறக்கிவிடும். இது ஓரிரு முறையல்ல ஒவ்வொரு முறையும் நிகழும். "இன்றும் நிகந்தது" கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம். எடுத்தாக வேண்டும் என்றுத் திட்டமிட்ட முன் தயாரிப்புடன், "நேராக நின்று, பல் தெரியாமல் சிரித்து, இடது கையை அவளின் தோள் மீது போட்டு, இடது கையின் முடிவில் அவள் தன் வலதுகையை பிணைத்து என் தோளில் தலைச் சாய்த்தெல்லாம்" எடுக்கவில்லை. நான்காமாண்டு மாணவர்களுக்கானப் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாட்டின் போது நானும் அவளும் ஆளுக்கொரு வேலையாய் சுற்றிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் ய...

ஆத்திரம்

காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பொன்மஞ்சள் வெயில் வேளையில் பென்சும் ஆடியும் வோக்ஸ்வேகனும் பல்சரும் டியூக்கும் ராயல் என்ஃபீல்டும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கிவிட ஆத்திரத்தில் அந் நெரிசலில் சிக்கியிருந்த மீன்பாடி வண்டியைத் திட்டித் தீர்த்தார் போக்குவரத்துக் காவலர்...!!! கார்த்திக் பிரகாசம்...

என் செய்வேன் நான்

கண் திறக்கும் முன்னே இமை மூடிக் கொண்டாயே...! சுயமாய் சுவாசிக்கும் முன்னே சுகத்தை இழந்தாயே...! மண்ணை மிதிக்கும் முன்னே மாண்டு போனாயே...! புறவுலகைக் காணும் முன்னே புதைக்கப்பட்டாயே...! பிறவியெடுக்கும் முன்னே பிணமானாயே...! உன் பிஞ்சு பாதங்களை நெற்றியில் ஒற்றிக் கொள்ளும் பாக்கியத்தை எனக்கு தராமல் ஏன் போனாயோ...! நூறு வருடங்கள் வாழ ஆசையில்லையா உனக்கு...? நூறு நாட்கள் மட்டும் கருவறையில் தங்கி விட்டு சென்றுவிட்டாயே...? என்னைத் தண்டித்துவிட்டு ஏன் சென்றாய்.? வாங்கி வைத்திருக்கும் விளையாட்டு பொம்மைகளிடம் எப்படிச் சொல்லுவேன் கருவிலேயே நீ மறைந்துவிட்டாயென்று...? மார்புக் கூட்டில் உனக்காக ஊறியிருக்கும் பாலமுதை என் செய்வேன் நான்...? கார்த்திக் பிரகாசம்...

மெய்யுறக்கம்

வலதுபுற மேல்படுக்கையில் படுத்திருக்கிறேன். பக்கவாட்டின் கீழ்ப்படுக்கையில் ஒரு வயதானப் பாட்டி படுத்திருக்கிறாள். வழக்கம்போல தன் தடதட இசையை ஒலிக்கவிட்டு இருளைக் கிழித்துச் செல்கிறது ரயில். உறக்கம் கருணைக் காட்டாததால் படுக்கையில் புரண்டிருந்தேன். அனைவரும் உறக்கத்தின் புதைக்குழிக்குள் விழுந்துவிட்டதால் வெகுநேரமாக பேச்சுச் சத்தம் இல்லாமல் இருந்த அவ்விடத்தில் இப்பொழுது ஒரு குரல் கேட்டது. அது அந்தப் பாட்டியினியுடையது. உறக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறாள். இல்லை... "உரையாடிக் கொண்டிருக்கிறாள்" கண்களைத் திறக்காமல் கையை நீட்டி பேசுகிறாள். வார்த்தைகள் ஒன்றும் தெளிவாக இல்லை. ஆனால் அந்த ஆக்ரோஷம் மட்டும் இருளில் தெரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றை ஒளிக்கீற்றின் தெளிவோடிருந்தது. யாருடன் கடைசியாகப் பேசினாளோ; எப்போதோ தன் இஷ்டத்தைச் சொல்ல நினைத்து அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நின்றுவிட்டதோ; இவளின் பேச்சை உதாசீனப்படுத்திருப்பார்களோ; யாருக்கோ சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாளோ.? இப்பொழுது உறக்கத்தில் இவள் உரையாடியிருக்கும் அந்த நபரும் இந்நேர...

வைஷ்ணவி

வியாழன் வந்தாலே, வைஷ்ணவி சாய்பாபாவிற்காக உண்ணாமல் விரதம் இருந்துக் கொண்டிருந்த நாட்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.எப்போழுதோ அவள் சிறுவயதில் விரதமிருந்து வேண்டிக் கொண்டது, வேண்டியவாறே நிகழ்ந்து விட்டதாம். அதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய்பாபாவிற்காக விரதமிருப்பதை நிரந்தர பழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். அதுவும் வேண்டுதல் இருக்கிறதோ இல்லையோ,வேண்டியது நிகழ்கிறதோ இல்லையோ விரதம் மட்டும் விடாப்பிடியாக நிகழ்ந்தேறியது. அதுவும் நீண்டகால வேண்டுதல் என்றால் விரதத்தின் தீவிரமும் வீரியமும் கூடிவிடும். ஆனால் அதெல்லாம் "இந்த கருப்புச் சட்டைக்காரனைக் கரம் பிடிக்கும் வரையில் தானே". மனம் மறந்து, மௌனம் அணிந்து மழலையைப் போல் கண்ணயர்ந்து கொண்டிருக்கும் வைஷ்ணவியை அவளது தலைமுடியைக் கோதியவாறே புன்னகையை துளித்துளியாக உதிர்த்துக் கொண்டிருந்தான் முத்து. காதலிக்கத் தொடங்கிய காலத்தில், விரதமிருப்பதைப் பற்றி ஏதாவது பேசத் தொடங்கினாலே "உன் பகுத்தறிவுப் போதனையெல்லாம் உன்னோட வச்சிக்க. நான் காதலிக்கிறவனான நீ கருப்புச் சட்டக்காரனா இருக்குறதால என்னுடைய இத்தன வருஷ நம்பிக்கையெல்லாம் ஒரு நிமிஷத்துல தூக்கி...