Skip to main content

மெய்யுறக்கம்

வலதுபுற மேல்படுக்கையில் படுத்திருக்கிறேன். பக்கவாட்டின் கீழ்ப்படுக்கையில் ஒரு வயதானப் பாட்டி படுத்திருக்கிறாள். வழக்கம்போல தன் தடதட இசையை ஒலிக்கவிட்டு இருளைக் கிழித்துச் செல்கிறது ரயில். உறக்கம் கருணைக் காட்டாததால் படுக்கையில் புரண்டிருந்தேன். அனைவரும் உறக்கத்தின் புதைக்குழிக்குள் விழுந்துவிட்டதால் வெகுநேரமாக பேச்சுச் சத்தம் இல்லாமல் இருந்த அவ்விடத்தில் இப்பொழுது ஒரு குரல் கேட்டது. அது அந்தப் பாட்டியினியுடையது.

உறக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறாள்.

இல்லை...

"உரையாடிக் கொண்டிருக்கிறாள்"

கண்களைத் திறக்காமல் கையை நீட்டி பேசுகிறாள். வார்த்தைகள் ஒன்றும் தெளிவாக இல்லை. ஆனால் அந்த ஆக்ரோஷம் மட்டும் இருளில் தெரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றை ஒளிக்கீற்றின் தெளிவோடிருந்தது.

யாருடன் கடைசியாகப் பேசினாளோ; எப்போதோ தன் இஷ்டத்தைச் சொல்ல நினைத்து அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நின்றுவிட்டதோ; இவளின் பேச்சை உதாசீனப்படுத்திருப்பார்களோ; யாருக்கோ சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாளோ.?

இப்பொழுது உறக்கத்தில் இவள் உரையாடியிருக்கும் அந்த நபரும் இந்நேரம் தன் உறக்கத்தில் இவளோடு உளறிக் கொண்டிருப்பாரா இல்லை கூதக் காற்றின் சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாரா.? இவளே கிழவியாக இருக்கிறாள், இவள் உரையாடியிருக்கும் அந்த நபர் முதலில் உயிருடன் இருப்பாரா.?

விட்டு விட்டு வரும் தூரலைப் போல மனதைத் தொட்டுத் தொட்டு சிந்தனைகள் நனைத்தன. உறக்கம் வராததால் சிந்தனைகள் ஆக்ரமித்தனவா.? சிந்தனைகள் இருந்ததால்தான் உறக்கம் விழிக் கூடவில்லையா.!

மழையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கனமான காற்று வேகமாக அடித்தது. குளிர்வது போல் இருந்தது. இடதுகையைத் தலைக்குக் கொடுத்து, கால்களைக் குறுக்கி அதன் இடையில் வலதுகையை இறுக்கியழுத்தித் திரும்பிப் படுத்தேன். பாட்டியின் முகம் தெரிந்தது.

உரையாடல் முடிந்து விட்டது போலிருக்கிறது. அவள் உறங்கிவிட்டாள்.

மழை வெளுத்து வாங்குகிறது.

மனதில் தேங்கியிருந்த சிந்தனைகள் மழைத்துளிகளின் சீண்டுதல்களால் சிதறிச் சிதறித் தேங்க முற்பட்டன.

ஆனால் அதற்குள் நான் உறங்கிவிட்டேன்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...