வகைமை: நாவல்
எழுதியவர்: கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
கிருஷ்ணமூர்த்தியின் "புனைசுருட்டு" என்று சிறுகதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். "பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" , "பாகன்" என மூன்று நாவல்களும், "சாத்தானின் சதைத் துணுக்கு" , "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. இவருடைய நான்காவது நாவல் "தழல்".
"பலவீனமானவர்களால் என்றும் மன்னிக்கவே இயலாது. மன்னிப்பது என்பது பலமுள்ளவர்களுக்கான நற்குணம்" என்ற காந்தியின் கூற்றோடு துவங்குகிறது நாவல்.
செய்யாத குற்றத்திற்காக ஊரார் முன்பு பெற்ற அப்பாவே தன்னை திருடன் எனப் பழி சுமத்தி அடித்துத் தண்டிக்கும் இரக்கமற்ற செயலால் மனம் உடைந்து போகிறான் சிறுவன். இத்தனைக்கும் யார் திருடன் (!) எனத் தெரிந்திருந்தும் [அவருக்கு மட்டுமே], ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கடக்கும் பொறுப்பற்ற அப்பாவைக் கடுமையாக வெறுக்கத் துவங்குகிறான். தினமும் இரவில், சிறுவயதில் திருடன் என்ற பட்டத்தோடு தலைகுனிந்து நின்ற அவமானம் வெவ்வேறு விதமாகக் கனவுகளில் வாட்டுகிறது. அதனைக் கடக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே தவிக்கிறான். அவர் மன்னிப்பு கேட்பதற்காகக் காத்திருக்கிறான். அப்பாவிற்கும், மகனுக்கும் பேச்சுவார்த்தை அற்றுப் போகிறது. தன் மீது சுமத்தப்பட்ட பழியின் சாயல் தினந்தோறும் பின்தொடருகிறது. அதனாலேயே அன்றாட வாழ்வில் கடும் ஒழுக்கத்தையும், கூடுதல் நேர்மையையும் கடைப்பிடிக்க எல்லா சந்தர்ப்பங்களிலும் முயல்கிறான்
காலப் போக்கில் மனைவி, குழந்தை ஆன பிறகு , "நீ அவரை மன்னித்துவிடு" என அப்பாவும், மனைவியும் வற்புறுத்துகிறார்கள். அவனிடம் மன்னிக்கும் மனோபலம் கைகூட மறுக்கிறது. ஒருகட்டத்தில் அப்பாவின் மரணப்படுக்கையில் அவர்கூடவே இருந்து கவனித்துக் கொள்கிறான். கடைசி மூச்சுக்குள், "நீ திருடவில்லை. நீ குற்றவாளி இல்லை. என்னை மன்னித்துவிடு" என்று உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் தோன்றக் காத்திருக்கிறான். ஆனால் அவர் இறக்கிறார். தனக்கு மட்டும் தெரிந்த உண்மையை தன்னோடு புதைத்துக் கொண்டு உயிரை விட்ட அப்பாவின் மேல் இன்னும் ஆத்திரம் கூடுகிறது
கடைசிவரை அப்பாவும் மன்னிப்பு கேட்கவில்லை. இவனாலும் தானாக மன்னிக்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்க இந்த சுழலுக்குள்ளேயே கிடந்து தன்னை இழக்கிறான்.மன்னிப்பு என்ற விடுதலையைக் கண்டு உணராமலேயே மாய்ந்துவிடும் வாழ்க்கையை கண்முன் பிரதிபலிக்கிறது நாவல். சமீபத்தில் வாசித்ததாலோ என்னவோ இமையத்தின் "ஆறுமுகம்" நாவலின் மைய கதாபாத்திரமான ஆறுமுகத்தின் நினைவுகள், இந்நாவலில் மையமான "மார்ட்டின்" வாசிக்கும் போது தோன்றியது. ஒரு விதத்தில் ஆறுமுகமும், மார்ட்டின் என இருவரின் வாழ்வும் "மன்னிப்பு" என்னும் ஒற்றை புள்ளியில் முடிச்சிட்டிருப்பதாகக் கருதுகிறேன்.
ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகளும், வாக்கியங்களில் ஒருமை/பன்மை பொருத்தமற்றும் அமைந்திருக்கின்றன. அடுத்த பதிப்பில் இவற்றைக்
களைந்தால் நன்று.
நாவல் பயணிக்கும் களமான செவ்வாய் பேட்டை, நெத்திமேடு, குகை, பிரபாத், பில்லுக்கடை, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, அடிவாரம், எருமாபாளையம், ஜங்ஷன் என்பது நான் பிறந்து வளர்ந்த "சேலம்" என்பதாலும், மேலும் எழுத்தாளரின் சக ஊர்க்காரன் என்ற வகையிலும் கூடுதல் மகிழ்ச்சி..
Comments
Post a Comment