Skip to main content

Posts

அக்கரையில் ஓர் தேசம்

"இந்த மாசம் இருவதாம் தேதிக்குள்ள புள்ளைக்கு ஆர்டர் வருதான்னு பாப்பேன் இல்லன்னாலும் வேல வேணாம்னு எழுதிக் குடுத்துருவேன்.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கண்டவன் கிட்டலாம் ஏச்சு பேச்சு வாங்கிட்டு இந்த வேலையச் செய்யறது..." கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட எரிச்சலில் பேருந்தின் பிரேக்கை மிதித்தபடியே சலித்துக் கொண்டான் கோவிந்தன். எந்த வேலைல இருக்கறவன்தான் அவனுக்கு மேல இருக்கவன்கிட்ட திட்டு வாங்காம இருக்கான். "தோ...! சட்டையை பேண்ட்க்குள்ள விட்டுட்டு, அடிக்கிற வெயிலுக்கு ஷூக்குள்ள கால சொருகிகிட்டு, ஏதோ இங்கிலீஷு எழுத்து போட்ட ஐடி போட்டுக்கிட்டு உனக்கு சைடுல ஒரு தம்பி உக்காந்துருக்கானே அவனா இருக்கட்டும், இல்ல இதா தலைக்கு உருமா கட்டிக்கிட்டு கையில மம்பட்டியோட உக்காந்துருக்கானே இவனா இருக்கட்டும்" யார்தான் அடுத்தவன் வாயில விழாம வேல செய்றான். இல்ல செஞ்சிடத்தான் முடியும். சொல்லு பாப்போம்.. டிக்கெட் கிழித்துக் கொண்டே பேருந்தின் பின்னிருந்து குரல் கொடுத்தான் ராஜன். அது எவ்வளவோ பரவாயில்லையே. ஒரு ரூம்குள்ள முடிஞ்சுரும். நாலு பேத்துக்குள்ள இருக்கும் ஆனா தலையெழு...

உரையாடல் #8

நாளுக்கு நாள் வதனபுத்தகத்தில் "தோழமைக்கான அழைப்புகள்" அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என் நட்புப் பட்டியலில் இணைய ஏராளமானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். எனக்கே அது வியப்பாக இருக்கிறது. நண்பா...! வதனபுத்தகத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலுமே கூட எத்தனைப் பேர் நம் நட்புப் பட்டியலில் இணைகின்றனர் என்பதா விஷேஷம். இணைந்தவர்களில் எத்தனைப் பேர் ஒத்தக் கருத்துக்களுடன் இன்னும் தொடர்ந்து நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதானே முக்கியம். ??? கார்த்திக் பிரகாசம்...

நவநாகரீக கொத்தடிமை

சிந்தனைகள் சிதைக்கப்பட்டு கவிதைகள் கொல்லப்பட்டு எழுத்துகள் தொலைவாக்கப்பட்டு ஓவியங்கள் நசுக்கப்பட்டு இலக்கியங்கள் மறைக்கப்பட்டு மற்றதெல்லாம் மறுக்கப்பட்டு பணம் ஈட்டுவதற்காக படிப்பறிவு மட்டுமே புகுத்தப்பட்டு படிப்பறிவு மட்டுமே திணிக்கப்பட்டு படிப்பறிவு மட்டுமே சாத்தியப்பட்டு நானொரு பட்டதாரியானேன் யாருக்காக வேலைச் செய்கிறேன் எதற்காக வேலைச் செய்கிறேன் ஏன் வேலைச் செய்கிறேன் என்றெல்லாம் யோசித்து அலட்டிக் கொள்ளாமல் நானும் மற்றுமொரு நவநாகரீக கொத்தடிமையானேன்...! கார்த்திக் பிரகாசம்...

அடுத்த தலைமுறை

முந்தைய தலைமுறையிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைக்க முயல்வது அசாதாரணமானது. வாழ்நாள் முழுவதும் அடிப்படைவாத சிந்தனைகளில் மூழ்கித் திளைத்த அவர்களை அதிலிருந்து வெளிக் கொணர்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதே சமயம் சமகால சக தலைமுறையிடம் முற்போக்குச் சிந்தனைகளைப் பற்றி ஓரளவுக்காணும் விவாதிக்கலாம். அதில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த தலைமுறையினரை முற்போக்குச் சிந்தனையாளர்களாக வளர்த்தெடுப்பதும், அவர்களிடத்தில் சமத்துவத்தை, சமூக அக்கறையை விதைப்பதும் முழுக்க முழுக்க நம் கையில் தான் உள்ளது. கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #7

"நினைக்கும் போது எனக்கே சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் கேட்டுவிட வேண்டுமென்று மனது கிடையாய் கிடந்து துடிக்கிறதே. கேட்கட்டுமா.?" கேளடி கண்மணி...! "என்னை எக்கணத்திலிருந்து அதிகம் காதலிக்கத் தொடங்கினாய்.?" ம்ம்ம்ம்...??????? சொல்ல விருப்பமில்லையென்றால் வேண்டாம்... "சொல்ல கூடாதென்றெல்லாம் இல்லையடி...!" "ஒவ்வொரு முறை நாம் உறவாடி முடித்த பின்பும், நீ என் கைகளுக்குள் சுருங்கி, மார்புக்குள் முகம் புதைந்து, சுழலும் உலகை மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாயே..! அப்போது நான் உறங்காமல் முழுமதியான உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். சில மணித் துளிகளில் என்னையறியாமல் என் கண்கள் கண்ணீரைக் கசக்கிக் கொண்டிருக்கும். அக்கண்ணீரைத் துடைக்க என் கைகள் எழாது. அதை என் கன்னங்களும் விரும்பாது. உருண்டோடும் அந்த ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் உலரும் முன், நான் முன்பை விட உன்னை அதிகமாகக் காதலிக்கத் தொடங்கியிருப்பேன்" கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #6

சாப்புட்டியா..? இல்ல.. இன்னைக்குச் சனிக்கெழம பெருமாளுக்கு விரதம்... நீயீ..? நமக்கு சாமியாவுது கடவுளாவுது...! உனக்கு வாயி ரொம்ப அதிகமாயிடுச்சு.. ஏற்கனவே நாம அப்டியே சௌகரியமா இருக்கோம் பாரு. இதுல கடவுளயே வேற நீ கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க..! ஏன் நம்மள படைச்சவனுக்காக ஒரு நாள் சாப்புடாம இருந்தா உசுரா போய்ட போவுது.? "நான் செய்ற வேலைக்குச் சாப்புடாம இருந்தா சாவ தான் வேணும் . வெயில்ல மூட்டத் தூக்கி பொழைக்குறேன். இதுல சாப்புடாம இருந்தா என்னையத் தூக்கிட்டுப் போக நாலு பேரு வரணும்..! அப்றம் என் குடும்பத்த யாரு காப்பத்தறது..! என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு நான்தான் சாமி...! என் மனசுதான் கோயில்...!" கார்த்திக் பிரகாசம்...

உரையாடல் #5

அண்ணோய்..! இன்னைக்கு ஃபுல் ஷிப்டா இல்ல சிங்கிள் ஷிப்டா.? ஃபுல் தான்பா எத்தன மணிக்கு பஸ்ஸ டிப்போல விடனும்.? 11.10 க்கு பா..! நானும் இன்னைக்கு ஃபுல் ஷிப்ட்டு தாண்ணா.! ம்ம்ம... நீயெந்த வண்டி.? 59சி ண்ணா.! எங்க வூடு உனக்கு.? திருமங்கலம் பக்கத்துல. அடேயப்பா..! இந்த டிராஃபிக்'ல வூடு போய்ச் சேரதுக்குள்ள கிழிஞ்சிரும்மே.! "இல்லண்ணா. ஆலந்தூர்'ல இருந்து மெட்ரோல போய்டுவேன்". மெட்ரோவா.? நெறைய செலவாகுமே தம்பி..! "காசுப் போன போய்த் தொலையிதுண்ணா. சம்பாதிச்சிக்கிலாம். நேரத்த எங்கத்தப் போய் சம்பாதிக்கிறது. அடிச்சி புடிச்சி இப்படி போன தான் புள்ளைங்கத் தூங்கறதுக்குள்ள வூடுப் போய்ச் சேர முடியிது. அதுங்ககிட்ட ரெண்டு வார்த்த பேச முடியிது." கார்த்திக் பிரகாசம்...