Skip to main content

தோழன் தோழி...!!!


   இந்த மண்ணில் ஒவ்வொரு உயிரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறாம் புலன். ஐம்புலன்கள் உடம்பில் இருக்கு ஆறாவது புலன் உணர்வில் இருக்கு.. பெற்றோர்கள் இல்லாமல் வாழ்வது கூட சாத்தியம்.. ஆனால் நட்பு இல்லாமல் வாழ்க்கையை  வழி நடத்துவது என்பது அசாத்தியம். வாழ்க்கை என்னும் காலச் சக்கரத்தின் அச்சாணி "நட்பு"..

  அதிலும் ஆண் பெண் நட்பு என்றால் ஒரு தனி புனிதம். அதில் காதலை தாண்டிய கர்வம் கலந்திருக்கும். அதில் காமத்தை மறந்த ஒரு கண்ணியம் நிறைந்திருக்கும். ஒவ்வொரு தோழனுக்கும் அவனுடைய தோழி ஈன்றெடுக்காத தாயாகிறாள். ஒவ்வொரு தோழிக்கும் அவளுடைய தோழன் பெற்றெடுக்காத தந்தையாகிறான்..

  அப்படிப்பட்ட ஒரு தோழன் தோழியின் கதை...

   ஏழாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்த அவன் எட்டாம் வகுப்பிற்காக அருகாமையில் இருந்த அரசு உதவி பெரும் பள்ளியில் தஞ்சம் புகுந்தான். பள்ளி கரும்பலகையில் இருந்து பக்கத்தில் அமர்ந்திருந்த பையன் வரை அனைத்தும்  விநோதமாகவும் விபரீதமாகவும் இருந்தது அவனுக்கு.. அதுவும் வகுப்பு தலைவர் ஒரு பெண்.. கையில் பிரம்புடன் பார்க்க பயங்கரமாக இருந்தாள்..

   பிரம்பால் அவனது முகத்தை நோக்கி, "என்ன.. புதுசா..?" என்று கேட்டாள்.. அவனும் "ஆம்" என்று குறிக்கும் விதமாக தலையை ஆட்டினான்.. அவனின் மனதிற்குள், அவளின் இந்த செயலால் இவளுக்கு ரொம்ப திமிரு என்ற எண்ணமே அதிகம் காணப்பட்டது  அதற்கு காரணமும் இருந்தது. ஏனென்றால் அவள் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுபவள். ஆசிரியர்களின் செல்ல பிள்ளை. முதல் மதிப்பெண் எடுக்கும் பெண்களுக்கு எப்பவுமே கொஞ்சம் திமிரு அதிகம் என்ற அரிய தகவல், அவன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பையன் வாயிலாக முன் மொழியப்பட்டது.. அதனால் அவளை பார்த்த முதல் தருணத்திலேயே அவனுக்கு அவளின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை.. ஆனால் அப்பொழுது அவர்களுக்கு தெரியாது அவர்கள் இருவரும் தோழன் தோழியாக, வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க விதியின் வசத்தால் வந்தவர்கள் என்று...!!!

  நாட்கள் அசுர வேகத்தில் நகர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவனும் அவளும் பேச ஆரம்பித்தனர்.. நட்பென்னும் மொட்டு எட்டி பார்க்க ஆசைப்பட்டது அவர்களுக்குள்.

   திடீரென்று ஒரு நாள், ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வெளியில் இருந்த வந்த மூன்றாம் நபர் ஒருவர்,  ஆசிரியரை தனியாக கூப்பிட்டு படபடப்பாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.. அந்த நபர் சொல்லி முடித்தவுடன் ஆசிரியர் வகுப்பறைக்குள்ளே வந்து அவளை அழைத்தார்.. அவளிடம் உனக்கு இவரை தெரியுமா என்று கேட்டார். அவளும் தெரியும் என்று சொன்னாள். உடனே அந்த நபர் அவளை அவசரமாக அழைத்துக் கொண்டு விரைந்து விட்டார்..

  மதிய உணவு வேளையில் விசாரித்த போது அவனுக்கு தெரிய வந்தது ஒரு அதிர்ச்சியான தகவல்.. அது அவளின் தந்தை இறந்துவிட்டார் என்பது.. கேட்ட தருணத்தில் இருந்து அவனுக்குள் அவளை பற்றிய பதபதைப்பு தொற்றிக் கொண்டது.. மதிய பள்ளி நேரம் முழுவதும் அவளது நினைவாகவே இருந்தது. அன்று பள்ளி முடிந்தவுடன் அவசர அவசரமாக அவளது வீட்டை கண்டுபிடித்து தனியாக சென்றுவிட்டான்.. எதற்காக செல்கிறான் என்று தெரியவில்லை.. அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை இருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக சென்றுவிட்டான்.. அவன் அவள் வீட்டை அடையும் தருணத்தில் அவள் தலை துவட்டிக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.. சில நொடிகள் மட்டுமே அவளை  பார்த்திருப்பான்.. அவள் கண்களை பார்த்த உடனே அங்கே இருந்து கிளம்பி விட்டான்..

   சில நாட்கள் கழித்து அவள் பள்ளிக்கு வந்தாள்.. மெல்ல மெல்ல சகஜமானாள்.. இருவரிடையே நட்பு அதிகரித்தது; தவிர்க்க முடியாதானாது. மெல்ல அரும்பிய நட்பு அதன் பிறகு பூக்களாய் பூத்தது; சக்கரையாய் இனித்தது.. நொடிகளும், நிமிடங்களும் நட்பால் நினைந்தது. வாரங்களும், வருடங்களும் நட்பால் வாழ்ந்தது.

  சில வருடங்கள் கழித்து அவள் வீடு மாற்றி செல்கிறாள் என்பதற்காக உதவி செய்ய அவன் அவளது வீட்டிற்கு சென்றிருந்தான். அவன் உள் அறையிலுள்ள பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அவள் ஹாலில் இருந்தாள்.

   எதிர்பாராதவிதமாக அவன் கண்களில் அவளுடைய டைரி கிடைத்தது. மிகுந்த ஆவலுடன் எடுத்து அதன் பக்கங்களில் பறந்தான். சில பக்கங்களுக்கு மட்டுமே அவளது கையெழுத்தை தாங்கும் பாக்கியம் கிடைத்திருந்தது.. அதனால் அவன் நேராக அவனது பிறந்த நாள் பக்கத்திற்கு சென்றான்.

   அவள் எழுதி இருந்தாள்,"அப்பா. நீங்க இன்னும் என்கூட தான் இருக்கீங்க என் நண்பன் மூலமாக" "பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா, அனைத்துக்கும் நன்றி". இந்த வரிகளை படித்து முடித்த தருணத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவன் இதயத்தை நனைத்துக் கொண்டிருந்தன.

   ஹாலில் இருந்த அவளை அழைத்து, அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டான். மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமல்ல, உயிர் தோழியைப் பெற்ற தோழனுக்கும் தெரியும் "முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று"...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...