Skip to main content

இரவு

நிலவொளியில் நிழல் குடிக்கும் நிலம்
குனிந்த தலை நிமிரா‌த பார்வையற்ற 
தெரு விளக்கு 
மென்று துப்பிய சக்கையாய் வீதி
மாடுகள் ஓய்வெடுக்கும் ஆடுகளம்
பதுங்கு குழியை விட்டு
பயமின்றி வெளிவரும் எலி
தன் நிழலைக் கண்டு
அச்சத்தில் குரைக்கும் நாய்
நிறமற்ற கோடுகளாய் நெடிந்துயர்ந்த 
கட்டடங்கள் 
காலத்துக்கும் அசதியின்றி  
பூதாகரமாய் நிற்கும் ஆலமரம்
காற்றோடு கிசுகிசுக்கும் இலைகள் 
கசக்கியெறிந்த காகிதமாய் மேகங்கள் 
பகல் மென்று துப்பிய எச்சமாய்  
யாருமற்ற 
ஏதுமற்ற
சிந்தையற்ற
மரணத்தின் நிம்மதியைத்
தற்காலிகமாய் சுமந்து வரும்
இரவு 

Comments