Skip to main content
"நான் கிளம்புகிறேன்" என்றுச் சொல்லும் அந்தவொரு நிமிடத்திற்காக இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்தே மனதளவில் தயாராகிக் கொண்டிருப்பேன். வீட்டை விட்டு வெளியூருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டாலும்கூட அவர்கள் கண் கலங்காமல் என்னை ஒருபோதும் வழியனுப்பியதில்லை. அதற்காகவே கிளம்பும் போது பெரும்பாலும் அம்மா அப்பாவின் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கப் போராடுவேன். ஒருவேளை கண்களைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். மனது பலவீனப்பட்டு உடைந்து போகும். இமைகள் நனையும். கண்ணீரை மறைக்க முடியாமல் கண்கள் தவிக்கும்.

"பாத்து போ.. ஒழுங்கா சாப்பிடு.. டீ குடிச்சிகிட்டே சாப்பாட்ட மறந்துட்டு சுத்தாத.. நைட் ரொம்ப நேரம் முழிச்சிகிட்டு இருக்காத.. சாப்புட்டு சீக்கிரம் தூங்கிப் பழகு.. போய்ட்டு போன் பண்ணு" என்று இதழ்களுக்கு ஓய்வளிக்காமல் கன்னங்கள் நனைய பாசவார்த்தைகளால் அணைத்துக் கொண்டே இருப்பாள் அம்மா.

மறுபுறம் அப்பா, "கண்ணு, கைல காசு இல்லனா போன் பண்ணு. அக்கௌன்ட்'ல உடனே போட்டுவுடறேன். எப்படிடா அப்பாகிட்ட கேக்கிறதுனு பட்டினியோட கெடக்காத.. என்ன சரியா..?" என்பார்.

சரிப்பா..! கிளம்பலாம்.. மணி ஆச்சு என்பேன்.

வீட்டிலிருந்து ரயில் நிலையத்தை அடையும் அந்த பத்து பதினைந்து நிமிடங்களில் தன் முக்கால்வாசி வாழ்க்கையைச் சொல்லி முடித்திருப்பார் அப்பா.எத்தனையோ முறை கேட்டதும் பார்த்ததும் தான். இருந்தாலும் காரணமில்லாமல் மனது படபடக்கும். இதயம் இயல்பை மீறி துடிக்கும். பனிக்கட்டியைப் போல உள்ளங்கை விறைக்கும். ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு கையில் இருக்கும் சில்லறை நோட்டுக்களை எடுத்து, "இந்தா, வழி'ல செலவுக்கு வச்சுக்கோ" என்று கையில் திணித்துவிட்டு கைலியில் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வார்.

"நான் பெரிய மனுசனாகிவிட்டேன்" என்ற எண்ணம், என் கண்ணீரை மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் போது பெரியவர்களான அவர்கள் என்னை பிரியப் போவதற்காக குழந்தைகளாக மாறிக் கண்முன்னே கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.

அதுவரையில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அந்தவொரு நிமிடத்தில் அலைகடலென ஆர்ப்பரிக்கும். கால்கள் நடுங்கும். கண்ணீரைக்கூட துடைக்க முடியாமல் கைகள் திராணியற்றுப் போகும். திரும்பிப் பார்த்தால், " அப்பா வெகுதூரம் சென்றிருப்பார்".

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...