எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள்
இலங்கை - இந்திய ராணுவத்தினராலும், தமிழ்ப் போராளிக் குழுக்களாலும் ஏற்பட்ட கொடுமைகளினால் மனம் சிதைந்துபோன யாக்கப்பு அந்தோனிதாசன், தொடர்ந்து தாய்நாட்டில் அச்சமின்றி உயிரோடு வாழ்வதற்கான உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில், பயண முகவர்களின் உதவியோடு வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மார்க்கம் வழியாகப் பிரான்ஸை அடைந்து, ஏற்கனவே மூன்று முறை நிராகரிக்கப்பட்ட அரசியல் தஞ்சம் கோரும் அந்நாட்டில் தங்குவதற்கான அகதி விண்ணப்பத்தோடு தொடங்குகிறது நாவல்.தமிழீழத்திற்குத் தன்னால் இயன்ற ஏதாவது செய்திட வேண்டும் என்ற தீவிர முனைப்பின் உந்துதலால், புலிகள் இயக்கத்தில் இணைந்து, உடலையும் மனதையும் கடுமையான சிரமத்திற்கு உட்படுத்திப் பயிற்சி பெற்றுக் களத்தில் இறங்குகிறான் ரொக்கி ராஜ்.
நாவலின் புனை கதாபாத்திரங்களோடு வாழ்வின் நிஜப் பாத்திரங்களும், போர் நடவடிக்கைகளும் அதன் பேரிலான படுகொலைகளும் கதையின் போக்கிலேயே பெரும் வலியோடும் வேதனையோடும் பதிவாகியுள்ளன.
எதிர்பாராதவிதமாக, இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவரை ரொக்கி ராஜ் தாக்கிவிடுகிறான். தன்மீது எந்தத் தவறும் இல்லை என்ற தன்னிலை விளக்கத்தோடு மேலிடத்திற்குக் கடிதமும் எழுதுகிறான். ஆனால் பலனில்லை; இயக்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் கண்காணிப்பிலிருந்த பகுதியில் ஒரு விசயம் காணாமல் போகிறது. இயக்கத்தினர் கூட்டிச் சென்று விசாரிக்கிறார்கள். "தலைவர் மீது சத்தியமாக, எனக்குத் தெரியாது" என்ற உண்மையைச் சொல்கிறான். நம்ப மறுக்கின்றனர். "கடைசியாக இயக்கம் எனக்கும் கள்ளத்தனம் கட்டிப்போட்டுது" என்ற மனக்கசப்பில் கொழும்பிற்குச் சென்றுவிடுகிறான்.
நாவலின் கடைசிப் பகுதி, அகதிகள் அரசியல் தஞ்சத்திற்காகக் காத்திருப்பதையும், அவர்களுக்கு இடையேயான கருத்தியல் முரண்பாடுகளையும் முன்வைக்கிறது. மேலும், யாக்கப்பு அந்தோனிதாசன் யார், ரொக்கி ராஜ் யார் என்பதற்கான விடையோடு முடிகிறது.
விசுவாசமாக இருந்த ரொக்கி ராஜின் மீது இயக்கம் ஒருவேளை அவனை நம்பிச் சுமுகச் சூழலை ஏற்படுத்தியிருந்தாலும், அவன் இறுதிவரை இருந்திருக்கமாட்டான். இதற்கு ஓர் உதாரணம் நாவலில் இருந்து...
//
"எல்லாமா எத்தின நேவி முடிஞ்சிருப்பாங்கள்?" எண்டு ரொக்கி ராஜ் கேட்கவும் ஓஷீலா ஒரு செக்கன் கண்ணை மூடித் திறந்து போட்டு "கிட்டத்தட்ட கணக்குச் சரியா வந்திருக்கும் " எண்டான்.
"அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை" எண்டு சடாரென்று ரொக்கி ராஜின்ர வாயில வந்திற்றுது.
//
அவர்கள் நம்மில் நூறு பேரைக் கொன்றார்கள்; அவர்களில் நான் இருநூறு பேரைக் கொல்லுவேன் என ரொக்கி ராஜால் ஒருபோதும் பயணித்திருக்க முடியாது என்பதையே மேற்கண்ட உரையாடல் சுட்டுகிறது.
பின்னே, மரணத்தின் கணக்கைப் பதிலுக்கொரு மரணத்தால் கழித்திட முடியுமா?
யார் யாரைக் கொன்றாலும், எதன் பொருட்டு அழித்தாலும் இறுதியில் ஒரு தாய் அழுவாள் என்பதே சுட்டெரிக்கும் உண்மை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment