ரயில் பயணம் எப்பொழுதுமே சில சுவாரசியமான அனுபவங்களை ஏற்படுத்தும்.. அதனாலேயே ரயில் பயணம் என்பது இதுவரையில் சுகமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட ரயில் பயணம் கூட பல விதமான அனுபவங்களை ஏற்படுத்தியது.. கூடவே சில தாக்கங்களையும் ஏற்படுத்தியது..
பொதுவாக ரயில் பயணத்தின் போது பல புது மனிதர்களையும், சில வயதான அல்லது சில மாற்றுத்திறனாளிகள் பிச்சைக் கேட்டு வருபவர்களையும் காண நேரிடும்..
ஆனால் அன்று சற்று வித்தியாசனமான முறையில் இருவர் உதவிக் கேட்டு வருவதைக் காண முடிந்தது..
முதலில் ஒரு கர்ப்பமான பெண் தன் இடது கையை வயிற்றில் வைத்தவாறே உதவிக் கேட்டு வந்தார். பயணித்தவர்களில் சிலர் தங்களது சட்டைப் பையில் தீவிர தேடுதல் வேட்டை நிகழ்த்தி சில சில்லறை நாணயங்களைக் கொடுத்தனர். ஒரு சிலர் ஒன்னும் இல்லை என்று பிரக்ஞை செய்து அனுப்பினர்.
அந்த கர்ப்பிணிப் பெண் சென்ற சில மணி நேரங்கள் கழித்து வேறொரு பெண்மணி ஒரு இளம்பெண்ணுடன் உதவிக் கேட்டு வந்தார்.
தன் மகள் ஒரு ஏழைப் பெண் என்றும், அவளின் திருமணத்திற்கு உதவுமாறும் கேட்டு வந்தார்.. பின்னால் இருந்து வயதானப் பெண் பேசிக் கொண்டிருக்க, நன்கு அலங்கரித்து கொண்டிருந்த அந்த இளம் பெண் ஒவ்வொரிடமும் கையேந்திக் கொண்டிருந்தாள். காசு கொடுத்தவர்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடுத்தவரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்..
அவர்கள் கடந்து சென்ற பிறகு வெகு நேரம் ஒரு குழப்பம் மனதில் நச்சரித்துக் கொண்டே இருந்தது..
உண்மையிலேயே அந்த பெண் கர்ப்பிணித் தானா.? ஒரு வேளை அந்தப் பெண் உண்மையில் கர்ப்பிணியாக இருந்தால் இங்கு வந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பாளா.?
அதே போல, திருமணம் செய்து வைக்க வேண்டி உதவி கேட்டது அந்த இளம்பெண்ணின் தாய் தானா.? அப்படியே தாயாக இருந்தாலும் பிச்சை எடுத்து பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன.?
இப்படி பலவித கேள்விகள் மனதில் எழுந்து கொண்டிருந்தன.. இறுதியில் ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது..
தெரிந்தோ தெரியாமலோ, பல பெண்களின் புனிதமான கருவறைகள் குப்பை கூடங்களாக்க பட்டுக் கொண்டிருக்கின்றன.. அந்த கருவறையில் உருவான/உருவாகும் பல குழந்தைகள் சமுகத்தில் குப்பைகளாகத் தெருவில் தூக்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
யாரோ செய்த தவறினால் ஒன்றும் அறியாத குழந்தைகள் சமுகத்தில் கொடுமையான தீவிரவாதியாகவும், தெருவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனாகவும், ஆதரவற்ற அனாதையாகவும் வளர்ந்து ஆளாகின்றனர்..
ஜெயகாந்தன் "சில நேரங்களில் சில மனிதர்கள்" புத்தகத்தில் குறிப்பிட்டதைப் போல காமத்திற்கும்,ஒரு உயிர் உலகில் உருவாவதற்கும் எந்த சம்மந்தம் இல்லாமல் இருந்திருந்தால் பல குழந்தைகள் இன்று சமுகத்தில் குப்பைகள் ஆகாமல் இருந்திருப்பார்கள்.
தம்மால் ஒரு உயிரைப் பெற்றால் இந்த உலகில் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் குழந்தைப் பெற்று கொள்வதைப் பற்றி யோசிக்கலாம். அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு குழந்தை பெறாமல் இருப்பதே நல்லது..
குழந்தை பெற்றுவிட்டு நடுத் தெருவில் விடுவதற்கு அல்லது ஏதோ ஒரு தெருவில் அல்லது சிக்னலில் பிச்சை எடுக்க வைப்பதற்கு பெறாமலே இருந்துவிடலாம்.
தவறில்லை...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment