Skip to main content

ராஜீவ் காந்தி நினைவகம்..!

வெகுநாட்களாகச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடம். ஆனால் என்னவோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று கண்டிப்பாகச் சென்றுவிடுவது என்று காலையிலேயே கிளம்பிவிட்டேன். ஒருநாள் பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டு திருப்பெரும்புதூர் பேருந்தில் ஏறினேன்.பள்ளிக்கு ஆசிரியர் வராத நாளில் பிள்ளைகள் குதூகலத்தில் மிதப்பது போல சூரியன் விடுமுறை எடுத்துக் கொண்டதனால் எந்தக் கட்டுப்பாடுமின்றி மேகங்கள் உறங்குவதும் தூறலைச் சிந்துவதும் நிறுத்துவதுமாக வானில் விளையாடி ரம்மியமான சீதோஷ்ணநிலையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்திற்கு மேலாக இருந்த பயணம்.

பயணத்தின் போது இருந்த மனநிலை நினைவகத்தை அடைந்த போது இருக்கவில்லை. கற்களில் பொறிக்கப்பட்ட "ராஜிவ் காந்தி நினைவகம்" என்ற வாசகத்தைப் பார்த்ததும் மனதளவில் ஒரு தாக்கம். பின்னே வெறுமனே ஒரு தலைவரின் நினைவகம் என்றளவில் ராஜீவ் காந்தியின் நினைவகத்தைக் கடந்து விடமுடியாதே..! அதற்கு பின்னால் ஓர் இனம் அனுபவித்தக் கொடுமைகளும், அரசியல் துரோகத்திற்கு அவர்கள் கொடுத்த விலைமதிப்பில்லாத உயிர்களும், ரத்தத் துளிகளும் கட்டுப்படுத்தயியலா கோபமும் அழிக்கமுடியா அடையாளமாக வரலாற்று காயமாக அந்த இருந்த இடத்தில் பொதிந்துள்ளதே...! சாந்தன் முருகன் பேரறிவாளன் நளினி ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ் உள்ளிட்ட எழுவரின் கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்தைச் சிறைச்சாலையில் இருத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறதே...! விடை தெரியா பல கேள்விகளை இன்னும் தன்னுள் புதைத்து வைத்துள்ளதே...!

மே 21, 1991 அன்றிரவு நடந்ததைக் கண்முன்னே காட்சிகளாய் விரிக்கும்பொருட்டு கல்வெட்டுகளும் குறியீடுகளும் அமைக்கப் பெற்றுள்ளன. அன்றைய நாளில் தன் தாயாரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மேடைநோக்கி நடந்துச் சென்ற பாதையை இறுதிப் பயணமாகக் குறிக்கும் பொருட்டு அப்பாதை விரிந்து தொடங்கி கடைசியாக மேடையில் நின்ற இடத்தை நோக்கிச் செல்ல செல்ல குறுகி முடிகிறது. ரத்தம் சிந்திய இடத்தில் அவரது திருவுருவத்தைச் சுற்றிலும் அறம்,வாய்மை,நீதி,அறிவு, தியாகம், அமைதி மற்றும் வளம் என ஏழு லட்சியங்களைக் குறிக்கும் வகையில் ஏழு தூண்கள் சூழ்ந்திருக்கின்றன..தூண்கள் சூழ்ந்திருக்கும் பகுதி மட்டுமில்லாமல் மொத்த நினைவகமுமே புற்களால் குளித்து பசுமையாக புன்னகைக்கிறது..

அவை ரத்தத்தில் முளைத்த புற்கள். ஆனால் அந்த ரத்தம் ராஜீவ் காந்தியினுடையது மட்டுமல்ல...!


கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...