Skip to main content

என் பால்யகால சகி

பஷீரின் "பால்யகால சகி"யை வாசிக்கிறேன்.

எப்போதுமே புறவெளியில் பறந்திடும் மனப் பறவை புத்தகம் வாசிக்கையில் மட்டும் அகவெளியில் பறக்கத் தொடங்கி விடுகிறது. அதுவும் பின்னோக்கி.

நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டு தான் நாம் கல்லூரித் தடாகத்தில் முதலடி பதித்திருந்தோம். பள்ளி வாழ்க்கையில் நமக்குள் ஆழமாய் வேரூன்றியிருந்த நட்பு விஸ்தாரமாய் விரிந்து மோன நிழலைச் சுகமாய் பரப்பிக் கொண்டிருந்தது. அந்நிழலில் இளைப்பாறி நம் பள்ளிப்படிப்பு முடிந்தது. பின் இருவரும் வெவ்வேறு கல்லூரி..! வேறு வேறு பாடப்பிரிவு..! ஆனால் இவ்விரண்டும் நம் நட்பை முறிக்கவோ, இடைவெளியை ஏற்படுத்தவோ இல்லை. மாறாக அது நம் பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. தொலைவைத் தொலைந்து போகச் செய்தது.

வழக்கம் போல அன்றைய சாயந்தரமும் எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தேன்.

நான் கேட்டேன், " நாம் திருமணம் செய்து கொள்ளலாமா.? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்.?. எனக்குத் தெரியும் இதற்குமுன் நாம் காதலைப் பற்றிக் கூட பேசியதில்லை.

ஆனால் உன் விழிகளில் எவ்வித பரபரப்பும் பதற்றமும் இல்லை. அவை நிதானமாக என் கண்களை உற்று நோக்கின.

"பெற்றோர் நம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, நம் நட்பின் மீது வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கை. அதன் வெளிப்பாடு தான் நீயும் நானும் இப்படி காலம் நேரம் பாராமல் இணைந்தே பயணிக்கிறோம். நீ என் வீட்டிலேயே இரவு உறங்குகிறாய். என் அம்மா ஏனென்று கேட்பதில்லை. அதே போல், நான் உன் வீடே கதியென்று கிடக்கிறேன். உன் அப்பா என்னைச் சந்தேகிக்கவில்லை.என் அம்மா என்னைத் திட்டியதும் இல்லை. இது நம் நட்பின் மேல் கொண்ட நம்பிக்கையால் அவர்கள் நமக்குக் அளித்திருக்கும் சுதந்திரம். அவர்கள்முன் "நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம்" என்று போய் நிற்பது நம் நட்பின் மீதான அவர்களின் நம்பிக்கையை உடைப்பது போலாகிவிடும். அது அவர்களுக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய துரோகம். அதை ஒருபோதும் நாம் செய்திட வேண்டாம். மேலும் முக்கியமாக

உன்னில் ஆத்மார்த்தமான அன்பு வைத்திருக்கிறேன். அது அட்சயம் போன்றது. தீராதது. அதைக் கட்டி வைக்க கல்யாணம் என்ற கட்டுப்பாட்டுக் கயிறு அவசியமில்லை. எதுவொன்று இல்லாமல் போனாலும் உன் மீதான என் அன்பு இருக்கும். என் பாசம் இருக்கும். நம் நட்பு இருக்கும். மூச்சுள்ளவரை அது நம்மை இணைத்திருக்கும்." என்றாய்..

நான் ஆச்சரியத்தில் உன்னையே பார்த்து கொண்டிருந்தேன்.

"இவளுக்கு இப்படியொரு தீர்க்கமானப் பார்வையா.? உந்தன் ஞானம் என்னைச் சிலிர்க்கச் செய்தது. நமக்குள் கல்யாணம் என்ற ஒன்று இல்லாமல் போனாலும், என் அன்பை எல்லாமுறைகளிலும் உனக்கு வெளிப்படுத்த முடியும் காமத்தின் வழியை மட்டும் தவிர்த்து. உன் மீதான எந்தன் அன்பு காமத்தை முன்னிறுத்தியது அல்ல. ஆக உன் பதில் எனக்குச் சற்றும் ஏமாற்றமாக இருக்கவில்லை."

அன்று எவ்வித ஏமாற்றமும், மனக் குழப்பமமுமின்றி நாம் வீட்டை அடைந்தோம்.

உனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்றும் எவ்வித ஏமாற்றமும், மனக் குழப்பமமுமின்றி நட்பென்னும் படகில் நாம் பாரமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மேகங்கள் இல்லாத வானிலிருந்து எங்கிருந்தோ விழுந்த மழைத் துளியினால் புதிதாகச் சிறகு முளைத்த பறவையை போல நினைவுகள் மனதுக்குள் சிறகடிக்கின்றன...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...