Skip to main content

காற்றில் ஆடும் பக்கம்

வாழ்க்கையில் இனி யார் கண்ணில் முழித்து விடக்கூடாது என்று நினைத்திருந்தானோ அவரை பல வருடங்களுக்குப் பிறகு இன்று பார்த்துத் தொலைத்துவிட்டான் மித்ரன். அவரும் அவனைக் கவனித்துவிட்டார். இவன் கண்டுக்காதது போல் சென்றுவிடலாம் என்றுதான் இருந்தான். ஆனால் அவரே அவனருகில் வந்தார். 

"என்னப்பா. ரவுண்டா அம்பது வருதா"

'இல்லீங்க. "நாப்பத்தி நாலு நாப்பதஞ்சு தான் வருது'

"நீ வேலைக்குப் போய் அஞ்சு வருஷம் இருக்கும்ல".

'ஆமாங்க'

"என்னப்பா அஞ்சு வருஷமாச்சுங்குற இன்னும் அம்பதுக் கூட வரலயா...?"

"இதோ இந்த ஏப்ரல்ல அம்பத தொட்டுடும்னு நினைக்கிறேன்...!" மித்ரனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் மனதுக்குள் பொங்கி வந்தன. அவற்றை மனக் கண்ணீராய் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மரியாதையோடு பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினான். 

இவ்வளவு நேரம் அவர் கேட்டதெல்லாம் அவனின் சம்பளத்தைப் பற்றி தான். மித்ரனுக்கு இருப்பதைந்தாயிரம்கூட கைக்கு வருவதில்லை இருந்தாலும் வெறுப்புடன் வாய்க்கு வந்தததை அடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், 'சாப்பிட்டாயா' என்ற கேள்விக்குமுன் "சம்பளம் எவ்வளவு" என்ற கேள்விதான் இவர் வாயிலிருந்து முதலில் வரும். மூச்சிலும் பேச்சிலும் அந்தஸ்தை மட்டும் சல்லடையிட்டு சற்று அதிகமாகச் சுவாசித்து வெளியிடுபவர்.

எவராவது சம்பளத்தைப் பற்றிக் கேட்டாலே அவனுக்கு எரிச்சலாய் இருக்கும் அதிலும் இவர் கேட்டால் 'அடிக்கிற வெயிலில் உடல் முழுவதும் அம்ருதாஜனைத் தடவியது போன்றதோரு எரிச்சல் வந்துவிடும்.

ஏனென்றால் "சொந்த வீடு இல்லை, நல்ல வேலை இல்லை, சம்பளம் குறைவு" என்று தன் பெண்ணை வேறொரு பெரிய இடத்து பையனுக்கு மணமுடித்துக் கொடுத்தவர் இந்த மாமாதான். பெண்ணும் அவனைக் காதலிக்கிறாளென்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஆரம்பத்தில் அவளும் அவனைத் தான் கட்டிக் கொள்வேனென்று உறுதியாக இருந்தாள். ஆனால் கௌரவ பந்துக்கள் மூலம் கட்டாயப்படுத்தி அவளது மனதை மாற்றினார். அம்மாவும் தம்பி பெண்ணைத் தன் மருமகளாக்கிக் கொள்ள வேண்டுமென்று வெகுவாக ஆசைப்பட்டாள். சொந்தம் விட்டு போய்விடக் கூடாது; பிள்ளைகள் ஒருவர் மீது ஒருவர் ஆசையாக இருக்கிறார்கள். 'பணம் காசு என்றுச் சொல்லி அதைக் கெடுத்துவிடாதே' என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சிப் பார்த்தாள். அதையெல்லாம் அவர் காதில்கூட வாங்கவில்லை. அடுத்த நாளே முகூர்த்ததத்திற்கு தேதியையும் குறித்துவிட்டார்.

"கண்டிப்பா நீங்க நேர்ல வந்து வாழ்த்தணும் அத்த. ஒங்க ஆசீர்வாதம் கெடைச்ச தான் என்னால நிம்மதியா வாழ முடியும் இல்லனா ஆயுசுக்கும் குற்றவுணர்ச்சியோடயே வாழ்ந்து செத்துருவேன்" என்று திருமணத்திற்கு முந்தைய நாள் அம்மாவின் மடியில் சாய்ந்து அவள் கதறியழுதாள். அப்பொழுது மித்ரன் உள்அறையில் தான் இருந்தான். ஆனால் அவளுக்குத் தெரியாது.

தம்பி மகள் மீதான பாசத்தினால் அம்மா மட்டும் கனத்த நெஞ்சோடு அந்தத் திருமணத்திற்குப் போய் வந்தாள்.

"சொத்துபத்து இருந்தா தான் சொந்தபந்தத்துக்கெல்லாம் கண்ணுத் தெரியும்" அப்பா அடிக்கடி சொல்வார். உண்மை தான்.! இப்போது நினைத்தாலும் எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. கால் போனப் போக்கில் மனதில் புலம்பிக் கொண்டே நடந்தான் மித்ரன்.

வீட்டை அடைந்ததும் நேராக அறைக்குச் சென்று இரண்டு ஆண்டுக்கு முந்தைய தன் டைரியைத் துலாவினான். அதில் அவளுக்கு திருமணம் நடந்த நாளான ஜனவரி பத்தாம் தேதிக்குப் பக்கங்களில் பறந்தான்.

"சொத்துபத்தும், நல்ல வேலையும் அதில் அதிக சம்பளமும் இருந்துவிட்டால் காதல் மன்னித்து ஏற்றுக் கொள்ளப்படும் இதில் ஏதோவொன்று குறைந்தாலும் காதல் ஒரு தகுதியற்ற கீழ்த்தரமானச் செயலாகவும் பாவச் செயலாகவும் கொள்ளப்படும்" என்று எழுதியிருந்த வரிகளின் இறுதியில் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக அவனின் கண்ணீர்த் துளிகள் அந்தப் பக்கத்தை முடித்திருந்தன...!

இப்போது அந்தப் பக்கம் அலையைப் போல காற்றில் முன்னும் பின்னும் பறந்தடித்துக் கொண்டிருந்தது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...