Skip to main content

சாவுக்குச் சமர்ப்பணம்...

ஒரு மனிதன் வாழும் வரையில் அவனது குறைகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து கொண்டாடித் தீர்க்கும் இந்த சமூகம், அதே மனிதன் இறந்த பிறகு அவனது நிறைகளையும் கொஞ்சம் சல்லடையிட்டு கண் திறந்துப் பார்க்கிறது...

இந்த உலகில் அனைவருமே குறையுள்ளவர்கள் தான்...  ஆனால் குறையின் மிகப் பெரிய பலமே ஒருவனின் மற்ற நிறைகளை மறக்க வைப்பதும் மறைத்து வைப்பதும் தான்... அந்த குறைகளையே மறக்க வைத்து ஒருவனின் நிறைகளை வெளியே கொண்டு வருகிறது என்றால் "சாவு" எவ்வளவு உயர்வானது... அந்த வகையில் சாவுக்கு ஒரு பெரிய சலாம் இடலாம் என்று தோன்றுகிறது...

ஆனால் ஒருவனின் நிறைகளை இந்த சமூகம் போற்றுவதற்கு அல்லது மனதார பாராட்டுவதற்கு அவனின் சாவு வரையில் காத்திருக்க  வேண்டுமா என்ன...?

ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் வீட்டில் இருக்கும் போது அவருடைய மனைவி சாரதா  தேவி சமையலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொண்டிருந்தார்... அப்பொழுது சிலவற்றை சல்லடையிலும், சிலவற்றை முறத்திலும் சுத்தபடுத்திக் கொண்டிருந்தார்...
அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாவிடம், வாழ்க்கையில் நாம் சல்லடையாக இருப்பதை விட முறமாக இருப்பதே உயர்வானது என்றார்..

எவ்வாறு என்று தன் கேள்விப் பார்வையை இராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது தெளித்தார் சாரதா தேவி அவர்கள்.. அதற்கு அவர் சொன்னார்...

சல்லடை எப்பொழுதுமே கெட்டவற்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நல்லவற்றை வெளியேத் தள்ளுகிறது... ஆனால் முறமோ கெட்டவற்றை நீக்கி விட்டு நல்லவற்றை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொள்கிறது...

முறத்தைப் போல நாமும் பிறரின் குறைகளை விட்டுவிட்டு நிறைகளை மட்டும் போற்றுவோம்... வாழும் போதே சகமனிதனைப் பாராட்டுவோம்...      

கார்த்திக் பிரகாசம்...

Comments