Skip to main content
பிரவினிடம் உன் ராசி என்னவென்று கேட்டால், கொஞ்சமும் தயக்கமில்லாமல் "எங்கப்பாவிடம் திட்டும் வாங்கும் ராசி" என்று சொல்லுவான். நல்லதோ கெட்டதோ எதோ ஒரு விஷயத்திற்காக அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அவன் வழக்கம். காலையோ மாலையோ அவனை திட்டிக் கொண்டே இருப்பது அவன் அப்பாவின் வழக்கம்.

சிறு வயதில் இருந்தே அப்பாவுக்கு பயந்த பிள்ளையாகவே வளர்ந்தான் பிரவின். அப்பா திட்டும் போது, அவன் அழுததோ எதிர்த்து பேசியதோ இல்லை. ஆனாலும் அவனுடைய அம்மாவைத் திட்டினால் மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.. அப்பாவை எதிர்த்து பேச வேண்டும் போலிருக்கும். ஆனால் அப்பாவின் மீது கொண்ட பயத்தின் காரணத்தினால் அழுதுக் கொண்டே தூங்கிவிடுவான். இந்த விசயத்தில் அவன் அம்மாவிற்கே ஒரு வருத்தம் உண்டு. அவர் அப்படி திட்டும் போது, வீட்டிற்கு பெரிய மகன் நீ தான். நீயே கேட்கவில்லையென்றால் வேறு யார் கேட்பார்கள் என்று அவன் மீது வருத்தப்பட்டுக் கொள்வாள். பிரவினுக்கும் திருப்பி கேட்க வேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும் ஆனால் அப்பாவின் மீதான பயம், அந்த எண்ணத்தை முழுதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்... இப்படியே தான் அவனுடைய பள்ளி, கல்லூரி காலங்கள் கடந்தன.

வேலைக்காக வீட்டை விட்டு வந்தான் பிரவின். தினமும் அம்மாவிடம் அவன் பேசிவிடுவான். அவனிடம் அப்பா பேசிவிடுவார். போனில் அவ்வப்போது அப்பா திட்டியதாக அம்மா சொன்னால் பிரவினுக்கு கோபம் தலைக்கேறும். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அம்மாவை எதற்காகவும் திட்ட வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டுக் கொள்வான். அவரும் சரி என்பது போல் தலையாட்டி விடுவார்.

ஆனால் அவரால் திட்டாமல் இருக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயம், முன் கோபத்தினால்தான் அவர் அப்படி திட்டுகிறார் மற்றபடி அவருக்கு தன் மீதும், அம்மா மீதும் அதிக பாசம் என்பதை வேலைக்காக வீட்டை விட்டு வந்திருக்கும் இந்த இடைவெளியில் அவன் நன்கு உணர்ந்திருந்தான்.

அன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அம்மாவைத் திட்டி இருக்கிறார். அவன் அம்மா, அதை அழுதுக் கொண்டே பிரவினிடம் போனில் சொல்லிவிட்டார். பிரவின் உடனே அப்பாவிற்கு போன் செய்துவிட்டான். அதில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து சண்டை பெரிதாகிவிட்டது. கடைசியில் அவன் அப்பா, "வேண்டுமென்றால் உன் அம்மாவை உன்னுடனே கூட்டிக் கொண்டு போய்விடு" என்று சொல்லி போனை அணைத்துவிட்டார்.

பிரவினுக்கு "திக்"கென்று ஆகிவிட்டது. அப்பாச் சொன்ன அந்த வார்த்தையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவன் அம்மா உடனே தன்னை வந்து கூட்டிச் செல்லும்படி போன் செய்தார். பிரவின் சிறிது நேரம் இருவருடனும் பேசாமல் போன் செய்யாமல் இருந்தான்.

பிறகு முதலில் அம்மாவிற்கு போன் செய்தான். அப்பா எப்பொழுதுமே இப்படித்தானே அம்மா..! அவர் கோபத்தில் பேசுவதற்கெல்லாம் வருத்தமும் படாதே, பெரிதாகவும் எடுத்து கொள்ளாதே..! என்று சமதானப்படுத்தினான். அடுத்து அப்பாவிடம் பேசி அவரையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான்...

அடுத்து முறை போன் செய்யும் போது,  என்னம்மா, என்கூட சென்னைக்கே வந்து விடுகிறாயா என்று விளையாட்டாக கேட்டான் பிரவின். உடனே அவன் அம்மா, நான் வந்துவிட்டால் உன் அப்பா சாப்பாட்டுக்கு என்னடா செய்வார். அவர் அப்படித் தான் எப்பொழுதும் திட்டிக் கொண்டு இருப்பார். அதற்காக உன்னுடன் வந்து இருந்து விட முடியுமா.? நான் எங்கேயும் வரமாட்டேன் என்றாள்.. அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இணைப்பில் அவன் அப்பா வந்தார். அம்மாவிடம் போன் வைக்கச் சொல்லிவிட்டு அப்பாவிடம் பேசினான்..

நான் போனப் பின்பு உன் அம்மாவை யார் பார்த்து கொள்வார் எப்படி பார்த்து கொள்வார் என்று அடிக்கடி கவலைப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் நேற்றுடன் அந்த கவலை தீர்ந்துவிட்டது.. நீ என்னைப் பற்றி யோசிக்கவே யோசிக்காதே... உனக்கு உன் அம்மாதான் முக்கியம். உன் அம்மாவிற்கே எப்பொழுதும் ஆதரவாகப் பேசு... என்று கலங்கிய குரலில் சொல்லி போனை வைத்துவிட்டார்..

அப்பா திட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்று அவனுக்கு புரியவில்லை. அதேப் போல் இப்பொழுது அழ வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா என்றும் பிரவினுக்கு தெரியவில்லை...

கார்த்திக் பிரகாசம்..

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...