Skip to main content
விவரம் தெரிந்த நாள் முதல் நித்யா, தன் நிறத்தை நினைத்து வருந்தி அழாத நாள் இல்லை.. அவளது சகோதரிகள் மூவரும் சிவப்பாய் இருக்க, இவள் மட்டும் கருப்பாய் பிறந்து கருப்பாய் வளர்ந்தாள். அவளது சகோதரிகளுக்கு நிறைய நண்பர்கள்.. எப்பொழுதும் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.ஆனால், நித்யா தனித்தே இருந்தாள். அவளுக்கு உண்மையான நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவள் கருப்பு நிறத்தில் இருந்ததனால், அவளிடம் பேசவோ பழகவோ யாரும் அண்டியதில்லை. அதற்கு அவளது சகோதரிகளுமே ஒரு முக்கிய காரணம்.

சகோதரிகளே அவளை பாகுபாட்டோடு தான் பார்த்தனர். தங்கள் நண்பர்களின் முன் வந்தால், தன் தங்கையென சொல்ல நேர்ந்தால் தங்களுக்கு அகௌரவமாகப் போய்விடும் என்று அவளை ஒதுக்கினர். ஒதுக்கியது மட்டுமில்லாமல் அவளின் காதுபடவே பலமுறை கூறி இருந்தனர். அதனால் நித்யாவும் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனித்தே வளர்ந்தாள்.

தனித்தே வளர்ந்ததால் நண்பர்கள் இல்லை. அந்த வருத்தத்தை புத்தங்களின் மூலம் தீர்த்துக் கொண்டாள் நித்யா. புத்தகங்களையே தன் நண்பர்களாக்கி கொண்டாள். அவள் பேசுவதும் பழகுவதும் புத்தகங்களுடன் மட்டும்தான். பகிர்ந்துக் கொள்ள நண்பர்கள் இல்லாததால் தனது உணர்வுகளை கவிதைகளாக்கி மகிழ்ச்சி பெற்றாள். தனது எண்ணங்களை கட்டுரைகளாக்கி மனநிறைவு பெற்றாள். ஆனால் அதற்கு தன்னை அடையாளமாக காட்டி கொள்ளவில்லை. தான் நிராகரிக்கப்படுவது போல தனது எழுத்துக்களும் தன் நிறத்தினால் நிராகரிக்கப்பட கூடாது என்பதற்காக தனது படைப்புகளை "கருவாச்சி" என்ற புனைப் பெயரில் எழுதினாள். அவற்றிற்கு கல்லூரியில் நல்ல வரவேற்பும் இருந்தது.. ஆனால் ஒருபோதும் அதை எழுதியது நான் தான் என்று பாராட்டிய யாரிடமும் அவள் சொல்லியதில்லை. சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என்றே அவள் கருதினாள்.

இரண்டாம் வருடத்தில் தான் பிரவின் அந்தக் கல்லூரியில் சேர்ந்தான். நித்யாவின் வகுப்பு தான் பிரவினும். மாநிறம் தான் என்றாலும் எளிதில் அனைவரையும் கவரும் வசிகரமானவன். அப்பாவிற்கு அரசு வேலை மாற்றுதல் என்பதால் அந்தக் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு எழுத்துக்களின் மீது அதீத காதல் இருந்தது. அவன் அவ்வப்போது எழுதவும் செய்வான். இதனால் கல்லூரிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே "கருவாச்சியின்" படைப்புகளை கவனிக்கவும் படிக்கவும் ஆரம்பித்துவிட்டான். தனது நண்பர்களிடத்தில் கருவாச்சியை பற்றியும் அவளின் எழுத்துத் திறமை பற்றியும் புகழ்ந்து பேசுவான். ஒருமுறையாவது கருவாச்சியை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று வகுப்பில் அனைவரின் முன்பும் அடிக்கடி கூறுவான். அப்பொழுதெல்லாம் நித்யாவிற்கு தான்தான் அந்த கருவாச்சி என்று உரக்க கத்த வேண்டும் போலிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் கருப்பு என்ற அந்தத் தாழ்வு மனப்பான்மை அவளை தடுத்துவிடும். தான்தான் என்று சொல்லாவிட்டாலும் தனது படைப்பிற்கு கிடைக்கும் அங்கிகாரம் அவளுக்கு பெருமையாக இருந்தது.

ஒரு விடுமுறை நாளில், "கல்லூரி நாள்" விழாவிற்கு திட்டமிடுவதற்காக பிரவினும் அவனுடைய நண்பர்களும் கல்லூரிக்கு சென்றனர். திட்டம் மற்றும் செயல்பாடு குறித்த சந்திப்பு முடிந்தவுடன் பிரவினும் அவனுடைய நண்பர்களும் வகுப்பறையில் அமர்ந்தனர். வகுப்பறையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கடைசி பெஞ்சில் ஒரு நோட்டின் பக்கங்கள் காற்றின் வேகத்தில் பறந்து கொண்டிருப்பதை பார்த்தான் பிரவின். அருகில் சென்று அந்த நோட்டு புத்தகத்தை விரித்து பார்த்ததில், "நித்யா இரண்டாம் ஆண்டு" என்று எழுதி இருந்தது. தொடர்ந்து அடுத்த பக்கங்களை படித்ததில் பிரவினுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரே சேர வந்தது. கருவாச்சியின் கவிதைகளும் கட்டுரைகளும் கொட்டிக் கிடந்தன. யாரிடமும் பேசாமல் எப்போதும் தனியாகவே இருக்கும் "நித்யாவா அந்தக் கருவாச்சி". ஆச்சரியத்தில் இருந்து விடுபட பிரவினுக்கு நீண்ட நேரம் எடுத்தது. இவ்வளவு பெரிய திறமையை வைத்துக் கொண்டு இவன் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நண்பர்களுடன் விசாரித்ததில், நித்யாவை சகோதரிகளே ஒதுக்கியது, நண்பர்கள் கிடைக்காதது அதனால் தனிமையை தேடிக் கொண்டது என நித்யாவின் நினைவலைகளை நீரலைகள் கசிய தெரிந்து கொண்டான். நித்யாவின் மீது அன்பும் அனுதாபமும் பிரவினின் கண்களோரத்தில் கரைகண்டன.

பிரவின் ரகசிய திட்டமிட்டான். அதன்படி "கல்லூரி நாள்" விழாவிற்கு அனைவரும் கட்டாயம் வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பபட்டது. நித்யாவிற்கு அதில் கலந்து கொள்ள விருப்பமில்லை. ஆனாலும் கட்டாய சுற்றறிக்கை அவளை வர வைத்தது. பிரவினின் திட்டமும் அதான்.

"கல்லூரி நாள்" விழா ஆடல் பாடல் என்று கலைக்கட்டி கொண்டிருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரவின் இருந்தான். நம் விழாவிற்கு ஒரு சிறப்பு விருந்தாளி வந்துள்ளதாக அறிவித்தான். அனைவரும் யார் யாரென்று கூச்சலிட்டனர். அந்த விருந்தாளி வேறு யாரும் இல்லை, வெகு நாட்களாக நம்மில் பலரும் வியந்து படித்துக் கொண்டிருக்கும்,தேடிக் கொண்டிருக்கும் கருவாச்சி. பலத்த கரகோஷம் விழா நடக்கும் இடத்தை ஆக்கிரமித்தது.

நித்யாவிற்கு தூக்கிவாரிப் போட்டது. இருதயம் துடிக்கும் துடிப்பில் இன்னும் சில வினாடிகளில் வெளியே வந்து விழுந்துவிடும் போலிருந்தது.

கரகோஷம் குறைந்த பிறகு, நம்முடன் இரண்டாம் ஆண்டு படிக்கும் தோழி நித்யா தான், "கருவாச்சி" என்ற புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி கொண்டிருக்கிறார். அவரை அன்போடு மேடைக்கு அழைக்கிறோம். கரகோஷம் மீண்டும் ஆக்கிரமித்தது.

நித்யா தயக்கத்தோடு தன் இருக்கையில் இருந்து எழுந்து மேடையை நோக்கி நடந்தாள். அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். ஒவ்வொரு கைத்தட்டலும் அவளுடைய கண்ணீரின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. நித்யா கலங்கிய கண்களுடன் சிறப்பு பரிசைப் பெற்றுக் கொண்டாள்.

அடுத்த நாள் வகுப்பில், அனைவரும் நித்யாவிடம் சென்று பேசினர். நித்யாவிடம் தத்தம் போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு, தங்கள் பக்கத்திலேயே அமர வைத்துக் கொண்டனர். அவளின் எழுத்து திறமையை புகழ்ந்தனர்.

நித்யா எல்லாம் மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள். பிரவின் பின்னால் அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...