Skip to main content
மணி சரியாக மதியம் 1.30. உச்சி வெயில் உடலெங்கும் வெப்பத்தை பரப்பிக் கொண்டிருந்தது. வியர்வையால் தன் அடையாள நிறத்தை இழந்திருந்தது அவனுடைய சட்டை. வேட்டியில் அங்கங்கு கிழிசல்கள். செருப்புகள் தேய்ந்து போய் தன் உயிரை ஈன்றுவிடும் நிலையில் இருந்தன.

காலை சாப்பாடே ஆகாத நிலையில் மதிய வெயிலில் அவனுடைய பசி,
உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தது. கால்கள் நடுங்க தொடங்கின. மரத்தில் சாய்ந்தவாறே ரோட்டில் உட்கார்ந்துவிட்டான் சேகர்.

ஒரு மாதம் முன்பு வரை சேகரின் நிலைமையே வேறு. அன்பான மனைவி. பாசமாக வளர்த்து ஊரே மெச்சும் அளவிற்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து வைக்கப்பட்ட இரு மகன்கள் என மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்த நாட்கள், அவன் மனைவியின் திடீர் மரணத்தால் எல்லாம் மாறியது.

மகன்களுக்குள் தந்தையை யார் பார்த்து கொள்வது என்ற பிரச்சனை. "அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு மொத்த செலவையும் நான் தானே செய்தேன். ஆதலால், இவரை நீ கடைசி வரை பார்த்துக் கொள்.. நான் என் குடும்பத்தையும் இனிமேல் பார்க்க வேண்டும்" என்றான் பெரியவன். "உன்னை பல லட்சங்களை செலவு செய்து படிக்க வைத்தார். எனக்கென்று என்ன செய்தார். எதாவது செய்திருந்தால் நானும் உன்னைப் போல் பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து நாலு பணம் காசு சேர்த்திருப்பேன். இப்பொழுது என் கையில் என்ன இருக்கிறது. என் குடும்ப செலவையே என்னால் ஈடு செய்ய முடியவில்லை. இதில் இவரின் மருந்து மாத்திரை செலவெல்லாம் யாரால் முடியும். ஆதலால் நீயே பார்த்துக் கொள்" என்றான் சிறியவன்..

தன் காதுப்படவே மகன்கள் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் தர்ம சங்கடம் அடைந்த சேகர், அடுத்த நாளே யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார்..

இந்த நிமிடம் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. இத்தனை நாள் அப்படி இப்படி என்று எப்படியோ சமாளித்து விட்டான். ஆனால் இன்று முடியவில்லை. பசி வாட்டி வதைத்தது.. பசி அவனை பிச்சை எடுக்கவும் தூண்டியது.

கண்ணீரைத் துடைத்து கொண்டு, நடுங்கிய கால்களுடன் எழுந்து யாரிடமாவுது பிச்சை கேட்கலாம் என்று இரண்டு மூன்று நடை எடுத்து வைத்தான். நடக்க முடியாமல் தடுமாறி விழுந்தான்.. மூக்குக் கண்ணாடி
சிறிது தூரம் கடந்து விழுந்தது.

உட்கார்ந்துக் கொண்டே கண்ணாடியை எடுக்க நீட்டிய அவனுடைய கையில் ஐம்பது ருபாய் தாள் ஒன்று கிடைத்தது.

சுற்றும் முற்றும் பார்த்தான். சேகரின் அருகில் ஒருவரும் இல்லை...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...