Skip to main content

Posts

Showing posts from 2025

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_21

"ரச விகாரம்" என்ற சிறுகதையில், “கதவைத் திறடா, அயோக்கியப் பயலே” என்று ஒரு தடவை உரத்துக் கூவியதோடு நிறுத்திக் கொண்டார். ஒழுக்கக் குறைவைவிட ஒழுக்கக்குறைவின் பகிரங்கமே மனிதனுக்கு எமன் என்ற ரகசியம் பட்டென்னு நெஞ்சில் பட்டது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_20

"மீனா" என்ற சிறுகதையில், அபூர்வமான தன் இசை ஞானத்தைக் காட்ட அந்தப் பெண் அந்த ஒரு ராகத்தை ஆலாபனை செய்ததே போதும். ஆனால், இயற்கை தன் வனப்பைக் காட்ட தாமரைப்பூ ஒன்று மட்டுமே போதும் என்று திருப்தி அடைந்தது உண்டா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_19

"ஏமாற்றம்" என்ற சிறுகதையில், லக்ஷ்மி! உண்மையில் அன்புக்கு எதிர்காலம் என்றும் கடந்த காலம் என்றும் காலவேறுபாடுகள் கிடையாதுதான்! இங்கே, கடந்த காலத்தை நிகழ்காலமாக்குவதும் நிகழ்காலத்தை கடந்த காலமாக்குவதும் சர்வ சகஜம். எத்தனை தடவைகள் நாம், பிரிந்திருந்த நாளின் பழைய அனுபவங்களை நினைத்துப் பார்த்துப் பூரிப்பும், புளகமும் எய்தி இருக்கிறோம்? பழைய அனுபவம் நிகழ்கால சம்பவமாக அப்போது மாறிக்கொள்ளும். இதேபோல எதிர்காலத்தில், குறிப்பிட்ட நாளில் பிரிந்து செல்லவேண்டியதை நினைத்து, இரண்டு பேரும் ஓரிடத்தில் இருக்கும்போதே மனம் வருந்துவோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்தத் திருவிளையாடல்களின் மர்மத்தைப் புரியாமலேயே உன் பால்யப் பருவத்தின் கதைகளை இரவெல்லாம் விழித்திருந்து நாள்தோறும் கேட்பேன். அப்போது உன் பிள்ளைப் பிராயத்தில் உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கேட்டு வருந்துவேன். சிறு பிராயத்திலேயே நாலு பேரிடமும் நீ் ‘புத்திசாலி’ என்ற பெயர் வாங்கியதைக் கேட்டு நான் மனம் மகிழ்வேன். பிறந்ததது முதல் நீ செய்த ஒவ்வொரு செயலும் உனக்குப் பிறர் செய்த உபசரணைகளும் என்னை மதித்து எனக்காகச் செய்யும் காரியங்களாகவே தோன்றுகின்றன...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_18

"தர்ம ராஜ்ஜியம்" என்ற சிறுகதையில், அவன் பலமுறை தன் சொந்த ஊர் ஹரிஜனக் குடியிருப்புகளில் ஊர்க்கட்டை மீறிச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ததும் உண்டு. #கு_அழகிரிசாமி_சிறுகதை18 // *யாரிடம் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஊரால் ஒதுக்கப்பட்ட ஹரிஜனத்திடமா? தீண்டாமை, தீட்டு எனச் சொல்லி சக மனிதர்களைப் பொதுவிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கும் ஊராரிடமா?* //

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_17

"விட்ட குறை" என்ற சிறுகதையில், அறிவின் எல்லை புண்ணியத்தின் எல்லை. அறிவின் எல்லை பாவத்தின் எல்லை. பாவமும், புண்ணியமும் ஒரு எல்லையில் நிற்கின்றன.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_16

"தேவையும் தெய்வமும்" என்ற சிறுகதையில், ஓர் எழுத்தாளனுக்குக் கருவிலேயே ஒட்டியிருக்கும் குணமான, சொந்தப் பத்தரிக்கை என்ற அளகாபுரி ராஜ்யத்தையும் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற நியாயமான ஆசை ராமகிருஷ்ண நாயுடுவைப் பிடித்த போது அவருக்குச் சரியாக வயசு இருப்பதைந்து. இரண்டொரு மாசங்களுக்குள் தாம் முதலாளியாகவும் பிரதம ஆசிரியராகவும், அமர்ந்து ஶ்ரீ ராம ஜெயம், கடவுள் வாழ்த்து முதலிய பீடிகைகளுடனர ‘கலா நேயன்’ என்ற ‘இனிய தமிழ் மாதாந்திர சஞ்சிகை’ வெளியிட்டதும், சஞ்சிகையின் எட்டாவது இதழ் வெளிவந்ததும் செட்டிமேட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பூர்வீக ஆஸ்தியையும் பீடித்துவிட்டதும் சுமார் பதின்மூன்று வருஷங்களுக்கு முந்திய கதை.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_15

"வெந்தழலால் வேகாது" என்ற சிறுகதையில், உங்களுக்கு நெற்றிக்கண் இருக்கும் தைரியத்தில் நீங்கள் “யோசனை எதற்கு? என்று முடிவு கட்டிவிட்டது போலவே தோன்றுகிறது. உலகத்தில் உங்கள் கண்ணால் முதல் முதலில் எரிந்து சாம்பலானது உங்கள் சிந்தனா சக்திதான்”.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_14

"மளிகைக்கடை சரஸ்வதி" என்ற சிறுகதையில், ‘வெங்க’னை வெங்கடாசலம் பிள்ளை ஆக்கியது போதாது என்று கையெழுத்துப் போடும்போது வெங்கடாஜலம் பிள்ளை என்று போடத் தொடங்கினார். அந்த வடமொழு எழுத்துச் சேர்த்தது அவருக்குச் சற்று கௌரவம் கொடுத்தது போல் தோன்றியது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_13

“சுப்பையாத் தேவரின் கனவு” என்ற சிறுகதையில், பெரிய மனிதர்கள் என்று இருப்பவர்கள் பணக்காரராயிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும் கௌரவம் என்ற மேல் பூச்சு இல்லாமல் போகாது. அந்த மேல் பூச்சில்தான் அவர்கள் வீட்டு சுப, அசுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். இந்த விதிக்கு விலக்கானவரல்ல சுப்பையாத் தேவர். அவருடைய ஜீவனத்துக்கு வேண்டிய அளவுக்கு மட்டும் மிகவும் சுருக்கமான சொத்து சுகம் இருந்த போதிலும், அம்பலக்காரர் என்ற பெரிய மனுசன் பட்டம் இருக்கையில் கல்யாணத்தை, அதுவும் ஒரே தங்கைக்குச் செய்யும் கல்யாணத்தை, வரவு செலவு பார்த்துச் செய்தால் அவ்வளவாகச் சோபிக்காது. ஆகவே கொஞ்சம் தாராளமாகவே பணத்தை, நகை நட்டு, சாப்பாடு, மேளம் என்று பலவகைகளில் இறைத்தார்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_12

“மனசும் கல்லும்” என்ற சிறுகதையில், அறிவு ஒரு நிமிஷத்தில் மாறலாம். உண்மை ஒரு கணத்தில் பொய்யாகிவிடலாம். ஆனால், ஆண்டுக்கணக்கில் காட்டிவந்த உணர்ச்சி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா? மனசை எவன்தான் கல்லாக்கியிருக்கிறான்? கல்லாக்கத்தான் முடியுமா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_11

“முருங்கைமர மோகினி” என்ற சிறுகதையில்… மனிதன் செத்துப்போன பிறகு அவனுடைய குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கும் மனித சமூகம், நல்ல பெருமாள் பிள்ளையினர ‘அத்தாகத்தி’யான நிலையைக் கண்டு, அந்த நிமிஷத்திலேயே அவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_10

“குழந்தையின் தியாகம்” என்ற சிறுகதையில்… அந்தப் பொல்லாத குழந்தை என்றோ இறந்திருக்கலாம். மதுரையிலோ, ரயிலிலோ இறந்திருந்தால் அதனுடைய மரணம் பயனற்றுப் போயிருக்கும்? தன் மகன் பெரிய வாலிபனாகி தன் துயரத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குப் பதிலாகத் தன் அறியாத இளம் பிராயத்திலேயே அந்தக் குழந்தை தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டது. இதை விடவா பெரிய தியாகத்தைப் பின்னால் சாதித்துவிடப் போகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_09

“பித்தளை வளையல்” என்ற சிறுகதையில்… மனிதனுடைய வாழ்வை தேவையும் அவசியமும் வந்து பாதித்துத் தூண்டும்போது, அவனுடைய கற்பனையும் புத்தியும் விசாலிப்பது இயற்கைதானே! உலகத்தில் சாரமும், அர்த்தமும் இல்லாமல் பொய்க்காரியங்களை, சமூகம் தெரிந்தும் கௌரவிக்கிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_08

“வள்ளியின் வாழ்க்கை”என்ற சிறுகதையில்… பனி, வெயில், பசி, தாகம் - இவற்றை உணரும் ஒரு மனித உடலை, சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! ஒரே மண்ணில், ஒரே விதமாய் பிறக்கும் மனித வர்க்கத்தின் வாழ்க்கையிலே எவ்வளவு வித்தியாசம்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_07

“வள்ளியம்மையின் அதிர்ஷ்டம்” என்ற சிறுகதையில்… ஜில்லாப்படத்தில் இடம்பெறத் தகுதியற்ற சிறு கிராமம் மணலூர். திருநெல்வேலி ஜில்லாவில், இருக்கிற இடம் தெரியாமல் சங்கரன்கோவில் ஸ்டேஷனுக்கு அரைமைல் தூரத்தில், நாகரீக வாழ்க்கைக்கு அநேக மைல்களுக்கு அப்பால் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு சிறுகுளங்களில் பெருகிய தண்ணீரால் அவ்வூரார் கொஞ்சம் நன்செய் சாகுபடி செய்து பிழைக்கிறார்கள். ஏதாவது ஒரு வருஷம் மழை கொஞ்சம் மட்டு என்றால் அதனால் ஏற்படும் கஷ்டத்தின் எதிரொலி மணலூரில்தான் கேட்கும்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_06

“பைரவி” என்ற சிறுகதையில்… அப்பொழுது கருநீல நிறமுள்ள பறவையொன்று பறந்து வந்து வற்றியுள்ள குளத்துநீரைத் தன் சிறகால் அடித்துவிட்டு ஒருவிதமான, மோகனமான குரலில் கூவிவிட்டுச் சென்றது. நீரோடு விளையாடி வெகு குறுகிய நேரத்தில் அது அனுபவிப்பது பேரின்பம்! அதைப் போலவே எங்கள் தோழமையின் ஓரிடத்துறையும் வாழ்க்கையின்பமும் வெகு குறுகிய காலத்திற்குத்தான் என்று இப்பொழுது தெரிகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_05

“விதவை” என்ற சிறுகதையில்… வீட்டை நெருங்கினான் ரகு, புகைவண்டிச் சக்கரங்கள் போல் அவன் கால்கள் விசையோடு ஓடின. அன்று, அந்த இரவிலே, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாட்டை, பாப்பா பாடுவது ரகுவின் காதில் விழுந்தது. அவன் அந்தப் பாட்டை மாறி மாறிப் பிரியத்தோடு பாடுவது பாரதி பாட்டு என்பதற்குத்தானா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_04

“வனஜம்” என்ற சிறுகதையில்… இப்பொழுது எத்தனையோ வருஷங்கள் கடந்துவிட்டன. இன்றும் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குப் போனால் எனக்கு அந்தப் பழைய வனஜமும், வனஜத்தின் பழைய காதலனாகிய என் பைத்தியக்கார உருவமும் நினைவுக்கு வருகிறது. என் பழைய உருவத்தைப் பார்த்து வெட்கம் தாங்காமல், “நல்ல பயலடா நீ! ஒரு சிறுமிக்கு முன்பாக பெரிய மனுஷ வேஷம் போட்டுக்கொண்டு அசட்டுத்தனமாக என்னென்னவோ பிதற்றிக்கொண்டு கூத்தாடிய நீயுமாச்சு, உன் காதலுமாச்சு... போ, போ” என்று என் ஞாபகத்தையே விரட்டித் துரத்துகிறேன். இரவு வீட்டுக்கு வந்து குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வனஜத்தைப் பார்த்தால் சங்கோஜமாகவே இருக்கிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_03

“கவியும் காதலும்” என்ற சிறுகதையில்.. அன்று அவன் கண்ட ஜீவனுக்குப் பெண் என்ற பெயரோடு வேறொரு பெயரும் உண்டு. “இயற்கையின் உவமைப் பொருள்”

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_02

“இரவு” என்ற சிறுகதையில்… “எனக்குள்ளேயே நான் நினைத்துக் கொண்டேன்! இரவு வந்ததும், உலகத்தின் தோற்றம் மறைய, நம்முடைய முகத்தையும் பார்க்க முடியாமல் போக, பக்குவம் அடையாத உள்ளமானது வெட்கம், மானம் முதலியவற்றை உதறி, தனிமையின் துணிவோடு கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான். மேலும் அந்த வெறியின் கிளர்ச்சியில், எந்தத் தடங்கல்களும் உண்டாகி நம் கருத்தையும் வெறிப்பாய்ச்சலையும் தடுப்பதில்லை. ஆகவே, மனிதன் கற்பித்துக் கொள்வதைத் தவிர இரவுக்கு என்று ஒரு தனித்தன்மையா இருக்கிறது?…” // இரவின் தனித்தன்மையைக் குறித்த நான்கைந்து நண்பர்களின் விவாதமே கதையின் சாராம்சம். அதில் ஒருவன், தன் நெருங்கிய நண்பனது மனைவியின் நிறம், உருவம் ஆகியவற்றை முதலில் அவலட்சணங்களாகப் பதிவு செய்கிறான். பிறகு அவளோடு தனியாக இருக்க நேர்ந்த ஓர் இரவின் இருளில் எப்படி அவளுடைய கோர சொரூபமும் , ஆபாசக் கருப்பும் எந்த தடங்கலும் செய்யாமல் அவனுடைய காம வேட்கை கிளர்ந்தெழச் செய்தன என்பதை விவரிக்கிறான். அதோடு மறுநாள் காலை வெளிச்சத்தில், “தற்போது நாம் இப்படி இந்தக் காக்காய் பூஞ்சி பெண்ணைப் பார்க்கவே அருவருப்புக் கொண்டு அவ...

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_01

“உறக்கம் கொள்ளுமா?” என்ற சிறுகதையில்… “லலிதைக்குக் கடுமையாக இருக்கிறது” என்று திக்கிக்கொண்டே பொய் சொன்னான் வந்தவன். “அவள் இறந்துவிட்டாள்” என்ற உண்மையைத்தான் அவனுடைய பொய் மறைத்து வைத்தது. நான் கனவுகண்டு நம்பிக்கையோடு எதிர்பார்த்த வாழ்க்கையின் இசையைப் பாடத் தொடங்குவதற்கு முன்பே, எனக்கு ஒத்தாசையாயிருந்த வீணையின் தந்தி அறுந்துவிட்டது.

கனாத்திறமுரைத்த காதைகள்

எழுதியவர்: சித்ரன் வகைமை: சிறுகதைகள் வெளியீடு: யாவரும் பதிப்பகம் மிகை யதார்த்த வெளியைப் பரந்த மொழி வளத்துடன் அணுகியிருக்கும் சிறுகதைகள். தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில், காமம் ஓர் அச்சுறுத்தும் கொடிய மிருகமாகப் பின்தொடர்வதை வாசிப்பினூடே நடுக்கத்துடன் உணர முடிகிறது. கனாத்திறமுரைத்த காதைகள்” என்ற தலைப்பு கதையிலிருந்து, “உன் மனம் எளிதில் உள்நுழைய முடியா ஒரு கவசமிட்டுள்ளது. என்னால் உன்னை ஊடுருவ முடியவில்லை என்பதைச் சற்று ஆற்றாமையுடனே ஒப்புக் கொள்கிறேன். ஆனால், உன் வாதைகளை நீ கடந்தாக வேண்டுமென்றால், என்னை உனக்குள் அனுமதித்துத்தான் ஆக வேண்டும். எதற்காக உன் மனதை ஒரு பெரும்பாறையாய் வடிவமைத்திருக்கிறாய்? உன் சுயநினைவு ரகசியங்களின் பொதி மூட்டையைச் சுமந்து அலுப்புறவில்லையா? அதன் முடிச்சை நான் அவிழ்க்குந் தோறும் நீ ஏன் வேறொரு சிடுக்கை உருவாக்குகிறாய். உன் வலியைப் போக்கத்தான் முயல்கிறேன். இது இருவரின் பரஸ்பர நம்பிக்கையின் பிறகே விளையும் கூட்டுச் செயல்பாடு”

பனிக்குல்லா

வகைமை: சிறுகதைகள்  எழுதியவர்: கவிதைக்காரன் இளங்கோ வெளியீடு: யாவரும் பதிப்பகம் ஏதேனும் இலக்கிய நிகழ்வில் கவிதைக்காரன் இளங்கோ உரையாற்றுகிறார் என்று தெரிந்தால், மறுயோசனையே இன்றி அந்நிகழ்வுக்குச் செல்ல முடிவு செய்து விடுவேன். கவிதை, நாவல், சிறுகதைகள் குறித்த அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வுகளின் போதான அவரது உரைகளில், அதன் மையவோட்டத்தின் ஒரு சிக்கலான சாராம்சத்தை தனித்தனி கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வானது, வாசிப்பிலும், இலக்கியத்தை அணுகும் முறைமையில் என்னளவில் பல புதிய திறப்புகளை உண்டாக்கியிருக்கின்றன. அவரது அறிமுக உரையைக் கேட்டுவிட்டு வாங்கிய புத்தகங்களும் உண்டு. உதாரணத்திற்குச் சுஜாதா செல்வராஜின் "கடலைக் களவாடுபவள்" கவிதைத் தொகுப்பு, 'ஏக்நாத்'தின் "சாத்தா" நாவல் [ சட்டென நினைவில் தோன்றியவை]. பெரும்பாலான உரைகளில் ஒருவித PSYCOLOGICAL TOUCH இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை "உளவியல்" படித்திருக்கிறாரோ எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். அவரிடம் நேரடியாகக் கேட்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. ஆனால் "பனிக்குல்லா" சிறுகதைத் தொகுப்பை வாசி...

தழல்

வகைமை: நாவல் எழுதியவர்: கிருஷ்ணமூர்த்தி வெளியீடு: யாவரும் பதிப்பகம் கிருஷ்ணமூர்த்தியின் "புனைசுருட்டு" என்று சிறுகதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். "பிருஹன்னளை, அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" , "பாகன்" என மூன்று நாவல்களும், "சாத்தானின் சதைத் துணுக்கு" , "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு" என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. இவருடைய நான்காவது நாவல் "தழல்". "பலவீனமானவர்களால் என்றும் மன்னிக்கவே இயலாது. மன்னிப்பது என்பது பலமுள்ளவர்களுக்கான நற்குணம்" என்ற காந்தியின் கூற்றோடு துவங்குகிறது நாவல். செய்யாத குற்றத்திற்காக ஊரார் முன்பு பெற்ற அப்பாவே தன்னை திருடன் எனப் பழி சுமத்தி அடித்துத் தண்டிக்கும் இரக்கமற்ற செயலால் மனம் உடைந்து போகிறான் சிறுவன். இத்தனைக்கும் யார் திருடன் (!) எனத் தெரிந்திருந்தும் [அவருக்கு மட்டுமே], ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கடக்கும் பொறுப்பற்ற அப்பாவைக் கடுமையாக வெறுக்கத் துவங்குகிறான். தினமும் இரவில், சிறுவயதில் திருடன் என்ற பட்டத்தோடு தலைகுனிந்து நின்ற அவமானம் வெவ்வேறு விதமாகக...

பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்

வகைமை: நாவல் எழுதியவர்: பாவெல் சக்தி வெளியீடு: எதிர் வெளியீடு பாவெல் சக்தியின் முந்தைய படைப்புகளான ‘நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்’, “தொல் பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள்’, ‘தீ எரி நகர மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்” ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். [புத்தகத்தின் தலைப்புகளே வாசிப்பதற்கான குறைந்தபட்ச ஈர்ப்பை உண்டாக்கிவிடும்] அவருடைய இரண்டாவது நாவல் 'பகை பாவம் அச்சம் பழியென நமக்கு பெருஞ்சித்திரச் சொற்கள்' பாவெல் சக்தியின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் சாமானியர்கள். நீதிமன்ற வளாகத்தில் கால் வைக்கத் தேர்ந்த அவர்களது வாழ்வின் மறுபக்கத்தை வக்கீலுக்கான அடுக்கடுக்கான கேள்விகளின் மூலம் புலனாய்வு செய்வது அவரது தனிச்சிறப்பு. சாமானியர்கள் ஒரு பக்கம் என்றால், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் காபந்து செய்யச் சட்டத்தை வளைக்கும் வழக்குரைஞர்களும், அவர்களுக்கு உறுதுணையாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அதிகாரிகளும் மறுபக்கம். பாவெல் சக்தியின் பெரும்பாலான கதைகளில் தொடக்கம் முதலே ஒருவகையான இ...

இரவு

எழுதியவர்: எலீ வீசல் மொழிபெயர்ப்பு: ரவி.தி.இளங்கோவன் வகைமை: சுயசரிதை வெளியீடு: எதிர் வெளியீடு இனப்படுகொலைகள் எப்பொழுதுமே ஒரு அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அரசு நேரிடையாகச் செயல்படாமல், முறையாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட கும்பலை, வன்முறையாளர்களைப் பயன்படுத்தித் தாக்குதலை, கொலைகளை, வன்புணர்ச்சிகளை நிகழ்த்துகிறது - இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பு சோபா சக்தியின் படைப்புக்களைத் தொடர்ச்சியாக வாசித்து முடித்த சிறு இடைவெளிக்குப் பிறகு வாசிக்கும் போர் மற்றும் இன அழிப்பு குறித்த நாவல் "இரவு".   நாஜி ஹிட்லர் படையின் யூத இன அழித்தொழிப்பின் ஒரு பகுதியான "ஆஸ்விட்ச்" வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த பதினைந்து சிறுவனின் சுய சரிதை.   யூதர்களின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அவர்களைப் புழுவிலும் கீழான பிறவிகளாக நடத்திய நாஜிப்படை, அவர்கள் மீது கொஞ்சமும் இரக்கமற்ற குரூரமான சித்ரவதைகளை நிகழ்த்தியிருக்கிறது. வரலாற்றில் நிரந்தரமாகப் படிந்து போன ரத்த கறை.   யூதர் என்ற ஒரே காரணத்திற்காக வதைமுகாமில் அடைபட்டு, தங்களுக்கான சவக்குழிகளைத் தாங்களே தோண்டிக் கொண்ட மனிதர்களை நினைத்துப் பா...

ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்

எழுதியவர்: த.அரவிந்தன் வகைமை: குறுங்கதைகள் வெளியீடு: குலுங்கா நடையான் எளியவும், மிகவும் நுட்பமுமான மனித உணர்வுகளையும், அவற்றின் மீதான சிக்கல்களையும் அலட்டல் இல்லாத மொழியில் குறுங்கதைகளாகப் பதித்திருக்கிறார் த.அரவிந்தன் என்னளவில் குறுங்கதை மீதும் மற்றும் அதன் வடிவம் குறித்தும் புது திறப்பை உண்டாக்கியிருக்கிறது. "ஆகாயம்" என்ற குறுங்கதை இருபத்தோராவது மாடியிலிருந்து அந்தக் குழந்தை, ஏன் கீழே விழுந்து இறந்து போனது எனத் தெரியவில்லை. ஆனால் , பால்கனி சுவருக்கு அருகில், அந்தக் குழந்தையைத் தூக்கி . இடுப்பில் வைத்துக் கொண்டு, அதன் அம்மா, எப்போதும், "அங்கே பார் , ஆகாயம் , ஆகாயம்" என்று காட்டியதை மட்டும் அறிவேன். கார்த்திக் பிரகாசம்...

கார்ல் மார்க்சும் தாணு ஆசாரியும் - தமிழவன்

நேரடி கூற்றுவியலில் இருந்து அப்பாற்படுவதோடு மட்டுமின்றி கதையின் போக்கே நிச்சயமற்ற தன்மைகளாலும், கதை மாந்தர்களின் இன்மைகளாலும் புனையப்பட்டிருக்கிறது. மேலும் வாசிப்பின் அவதானிப்பில் வாசகனாகப் புரிந்து தெளிவுற வேண்டிய பல இடைவெளிகள் விரவிக் கிடக்கிறது. இது கதையின் தலைப்பிலிருந்தே தொடங்குகின்றது. என்னளவில் தமிழவன் சிறுகதைகள் குறித்த திறப்பை இக்கதை உண்டாக்கியிருக்கிறது. அடுத்த சில தினங்களுக்கு வெவ்வேறு தருணங்களில் மாறுபட்ட மனநிலைகளில் வாசிக்க வேண்டும்.

இப்போது உயிரோடிருக்கிறேன்

எழுதியவர்: இமையம் வகைமை: நாவல் வெளியீடு: க்ரியா மருத்துவமனையில் ஆறு மாத காலம் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் படுத்துக் கிடந்ததைப் போன்ற கனமான உணர்வு. கார்த்திக் பிரகாசம்

யாம் சில அரிசி வேண்டினோம்

எழுதியவர்: அழகிய பெரியவன் வகைமை: நாவல் வெளியீடு: நீலம் பதிப்பகம் கேள்வி கேட்டால் அதிகார அமைப்பிற்கு அறவே பிடிப்பதில்லை. அதிலும் நிரந்த வருமானமும், நிலையான வாழ்வாதாரமுமின்றி அன்றாடத்தின் பொழுது நிச்சயமற்ற பொருளாதார சூழல் ஈனும் குண்டூசி அளவிலான கரிசனத்தினால் இன்னும் உயிரோடு உலவிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட பாமரன் கேட்டால்? அவ்வாறு கேள்வி கேட்கப்படுவதை, தம் அடிப்படை கட்டமைவின் விறைப்புத் தன்மைக்கு நேர்ந்த கடும் அவமானமாகக் கருதுகின்றது அதிகார அமைப்பு. மேலும் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கிளை அதிகாரம் கேள்விக்குள்ளாகும் போது, நியாய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே மரத்தின் பல கிளைகளாய் விற்றிருக்கும் இதர அதிகாரங்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தின் குரலாய் கூட்டுச் சேர்ந்து "உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்ற ஒருவிதமான அருவருப்புத் தன்மையோடு சாமானியனின் கழுத்தை நெரிக்கின்றன. இதன் மறைமுக தொனி, “நீயெல்லாம் எங்கள கேள்வி கேக்குற அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா” என்பதே. பொது சமுகத்தில் அதிகாரத்திற்கென்று கட்டமைக்கப்பட்டிருக்கும் பவிசு விளைவிக்கும் எரிச்சலே, நீ எப்படி என்னைப் பார்த்து கேள...

BOX கதைப் புத்தகம்

எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள் கை, கால்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்ட சிறு சிறு பிள்ளைகளினது உலகில், குழந்தைத்தனம் நிறைந்த அப்பா, அம்மா விளையாட்டு நீர்த்துப்போய், அந்த இடத்தில், "நீ ராணுவம், நான் இயக்கம்" எனச் சண்டை போட்டு விளையாடுமளவிற்குப் போர் என்னும் பேரழிவு நிகழ்த்திய இனியொரு காலத்திலும் மீட்ட முடியாத இழப்பின் நிஜச் சாட்சியங்களாக இருக்கிறார்கள் குழந்தைகள். போர் முடிந்த பிற்பாடும் தொடரும் இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களையும், அவர்தம் ஆக்கிரமிப்புகளையும் பேசுவதோடு மட்டுமல்லாமல், சாதிய ஒடுக்குமுறைகளையும் ஆழமாகப் பதிவு செய்கிறது நாவல். மேலும், கார்த்திகையாக அமையாள் கிழவி இறக்கும் பகுதி வலியுடன் கூடிய மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது. ஷோபாசக்தியைத் தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருக்கிறேன்."கொரில்லா"வில் வரும் ரொக்கி ராஜ், இயக்கத்திலிருந்து வெளியேறியதும் புலம்பெயராமல், ஒருவேளை நாட்டிலேயே இருந்திருந்தால், அவன் "BOX" நாவலில் வரும் சகோதரம் ரேமன் பக்ததாசாக இருந்திருப்பான். அதேபோல, "ம்" நாவலில் வரும் நிறம...

[ம்]

எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள் துப்பாக்கி சுடு[ம்] பயிற்சியில் இலக்குகளாக இருத்தப்படு[ம்] வைக்கோல் பொ[ம்]மைகளுக்குப் பதிலாக, உயிருள்ள அப்பாவி மக்களை நிற்க வைத்த குரூரப் பேரினவாதத்தின் குருதி குடிக்கும் பேயாட்ட வன்முறை ஒருபக்க[ம்] என்றால், தன்னதிகாரத்தின் எல்லையை விரிவாக்கி, தத்தம் சுயாதிக்கத்தைப் பிரகடனப்படுத்திடு[ம்] மு[ம்]முரச் செயல்பாடுகளினால், ஒத்த கருத்துடன் ஒருங்கிணைத்து செயல்பட முடியாத இயக்கங்களு[ம்], அமைப்புகளு[ம்], 'அவன் அந்த அமைப்பைச் சேர்ந்தவன்' , 'இவன் இந்த இயக்கத்தைச் சார்ந்தவன்' என சந்தேகத்தின் பேரில் தங்களது சொந்த[ம்] மக்களையே கருணையின்றிக் கொன்றழித்த போராளிக் குழுக்களின் வரலாற்றுத் தழு[ம்]புகள் மறுபக்க[ம்]. அவையாவு[ம்] வெறுமனே "[ம்]" கொட்டிக் கடந்திடும் கதைகள் அல்ல. காரண[ம்], ஒரு நிலத்தில் நிகழும் போர் என்பது வெறுமனே சுடுபவனுக்கு[ம்], சுடப்படுபவனுக்கு[ம்] இடையேயான இழப்புகளையும், விளைவுகளையு[ம்] உள்ளடக்கியது மட்டு[ம்]மல்ல. பாவப்பட்ட அந்நிலத்தில் குழந்தைகள் பிறக்காமலேயே இறக்கின்றனர். நேசிக்கப்படாமலேயே மரிக்கிறது மன...

கொரில்லா

எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள் இலங்கை - இந்திய ராணுவத்தினராலும், தமிழ்ப் போராளிக் குழுக்களாலும் ஏற்பட்ட கொடுமைகளினால் மனம் சிதைந்துபோன யாக்கப்பு அந்தோனிதாசன், தொடர்ந்து தாய்நாட்டில் அச்சமின்றி உயிரோடு வாழ்வதற்கான உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில், பயண முகவர்களின் உதவியோடு வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மார்க்கம் வழியாகப் பிரான்ஸை அடைந்து, ஏற்கனவே மூன்று முறை நிராகரிக்கப்பட்ட அரசியல் தஞ்சம் கோரும் அந்நாட்டில் தங்குவதற்கான அகதி விண்ணப்பத்தோடு தொடங்குகிறது நாவல். தமிழீழத்திற்குத் தன்னால் இயன்ற ஏதாவது செய்திட வேண்டும் என்ற தீவிர முனைப்பின் உந்துதலால், புலிகள் இயக்கத்தில் இணைந்து, உடலையும் மனதையும் கடுமையான சிரமத்திற்கு உட்படுத்திப் பயிற்சி பெற்றுக் களத்தில் இறங்குகிறான் ரொக்கி ராஜ். நாவலின் புனை கதாபாத்திரங்களோடு வாழ்வின் நிஜப் பாத்திரங்களும், போர் நடவடிக்கைகளும் அதன் பேரிலான படுகொலைகளும் கதையின் போக்கிலேயே பெரும் வலியோடும் வேதனையோடும் பதிவாகியுள்ளன. எதிர்பாராதவிதமாக, இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவரை ரொக்கி ராஜ் தாக்கிவிடுகிறான். தன்மீது எந்தத் தவறும் இல்லை என்ற தன்...

இச்சா

எழுதியவர்: ஷோபாசக்தி வகைமை: நாவல் வெளியீடு: கருப்புப் பிரதிகள் கண்டி ரஜ வீதியின் சிறைக் கொட்டடியில் அடைபட்டிருக்கும் பெண்ணொருத்தி, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் எழுதுகிறாள். முந்நூறு வருடச் சிறைத் தண்டனையில் மீதமிருக்கும் சொற்ப நாட்களைக் கடக்கும் பொருட்டு, தனது நினைவறையில் நிரந்தரமாகப் பதிந்துபோன சுவடுகளைக் காகிதத்தில் மீட்டெடுக்கிறாள். இலுப்பங்கேணி என்னும் கிராமத்தில் பிறந்த வெள்ளிப்பாவை என்ற சிறுமி, காலம் கையளித்த தகிக்கும் வெப்பச் சூழலின் அழுத்தத்தினால் ‘ஆலா’ என்னும் பெயரில் சிறுவர் போராளியாகப் புலிகள் இயக்கத்தில் இணைகிறாள். களப் பயிற்சிகளை எளிதில் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்படுவதாலும், மேலும் சிங்களத்தில் சரளமாகப் பேசவும், பத்திரிகைகளில் வெளியான செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்திடும் அளவிற்குச் சிங்களத்தில் மொழித் திறன் கொண்டிருந்த காரணத்தினாலும், ஆலாவை ‘கரும்புலி’யாக்குகிறது இயக்கம். உடலையே ஆயுதமாக்கி மாயும் தற்கொடை(லை)த் தாக்குதலின் மூலம்  மாட்சிமை மிக்க மரணத்திற்கு ஆய்த்தமாக்குகிறாள் ஆலா. இலங்கை அமைச்சர், மற்ற பிற அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் ச...

மாகே கஃபே

எழுதியவர்: அரிசங்கர் வகைமை: நாவல் பதிப்பகம்: எதிர் வெளியீடு பாண்டிச்சேரியின் நிலவியல் அமைப்பை அடித்தளமாகக் கொண்டு வாழ்வென்னும் இருத்தலின் போராட்டத்தை அதன் சாராம்சத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் அரிசங்கர். தோற்றுக் கொண்டே இருக்கும் மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான் அல்லது வாழ்க்கை துரத்திக் கொண்டே இருக்கிறது. தோற்பதற்கோ/வாழ்க்கையின் துரத்தலுக்கோ பயந்து அவன் வாழ்வின் கடைசி நாள் வரைக்கும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவே கட்டாயப்படுத்தப்படுகிறான். இந்த ஓட்டத்தில், என் மொழிக்காரன், என் ஊர்க்காரன், என் சாதிக்காரன், என் நாட்டுக்காரன் என எல்லா வகையான அலங்கார மேற்பூச்சு சங்கதிகளுக்குமே மறைமுக எல்லைக் கோடு உண்டு. இப்படியாகப்பட்ட இருப்புச்சார்ந்த போராட்டத்தில் பல கதாபாத்திரங்களை உலவவிட்டு, அவர்தம் மன விசாரணைகளின் மூலமாகவும், அனுபவ செறிவுகளின் மூலமாகவும் ஒரு விஷயத்தை நமக்குள் ஆழமாக விதைக்கிறது நாவல். "எப்பாடு பட்டாவது வாழ்வின் கடைசி நாள் வரையிலும் வாழ்ந்துவிடுவதே வெற்றி" என்பதே அது". கார்த்திக் பிரகாசம்...

பற்சக்கரம்

எழுதியவர்: எஸ்.தேவி வகைமை: நாவல் வெளியீடு: ஸீரோ டிகிரி பலவீனமான பொருளாதாரத்தின் படிக்கட்டுகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அன்றாடம் தத்தளிக்கும் மக்களிடம் நேரடியாகச் சென்று சுலபமான வேலை, சிறப்பான வசதி, நல்ல சாப்பாடு, பயிற்சி காலத்திலேயே சம்பளம் மேலும் மிக முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு எனப் பயிற்சியளித்த தரகர் குழுவின் மூலமாக நயவஞ்சகமாக மூளைச் சலவை செய்து பணியில் அமர்த்தி, பின்பு குறைவான சம்பளம், சிறை போன்ற கட்டுப்பாடு, உழைப்புச் சுரண்டல், உடல் சுரண்டல், நோய் என அவர்களை இரக்கமின்றி சீரழித்த கொங்கு மாவட்டங்களில் உள்ள பஞ்சாலை முதலாளிகளால் "சுமங்கலித் திட்டம்" என்ற மங்கலகரமான(?) பெயரால் தொடங்கப்பட்ட நவீன கொத்தடிமை திட்டம் குறித்து துணிச்சலாகப் பேசியிருக்கின்றது எழுத்தாளர் தேவி எழுதியுள்ள 'பற்சக்கரம்' நாவல். ஏன் பெண்களை மட்டும் வேலைக்குச் சேர்க்கிறார்கள்? அதிலும் திருமணமாகாத அல்லது திருமணமாகிக் கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் குறிவைக்கிறார்கள்? அதற்குப் பின்னுள்ள முதலாளி வர்க்கத்தின் தந்திரத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. ஆலையில் வேலை செ...