Skip to main content
அன்புள்ள அப்பாவிற்கு,

நான் பிறந்தது முதலே என்னை ஒரு சுமையாகத் தான் கருதி வந்துள்ளீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... நான் பெண்ணாகப் பிறந்தது தவறா..? இல்லை உங்களுக்கு பெண்ணாகப் பிறந்தது தான் தவறா ..? என்று பலமுறை சிந்தித்து இருக்கிறேன்... ஆனால் முழுமையாக சிந்திக்க முடியாமல் இரண்டுமே பெருந்தவறு என்ற முடிவுக்கு வந்த பல இரவுகள் என் வாழ்க்கையில் இன்னும் இருட்டாக இருக்கின்றன...

நான் பெண்ணாகிப் போன போது, எனக்கு செலவாகிப் போகிறது என்று வருந்தினீர்கள்... இவள் வயதுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள் என்று என் காதுபடவே பேசினீர்கள்.. ஆனால் மாமியார் வீட்டில் மரியாதையாக சீர் செய்யவில்லை என்று அவர்களிடம் மல்லுகட்டி நின்றீர்கள்.. நான் பெண்ணாகப் பிறந்துவிட்ட அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க, பிள்ளை எப்படி வெட்கப்படுகிறது பாரு.." என்று என் அம்மா மற்றவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி விழியோரம் வழிந்த கண்ணீர்த் துளிகளினால் என்னை ஆசிர்வாதம் செய்தாள்... ஒருவேளை அவளும் இந்த வேதனைகளை அனுபவித்திருப்பாளோ என்னவோ...

வயதுக்கு வந்துவிட்டாய்.. இனி படிப்பெல்லாம் வேண்டாம் என்றீர்கள்.. படிக்கும் ஆர்வம் இருந்தாலும், அப்பா நம் பாதுகாப்புக்காகத் தானே சொல்கிறார் என்று பெருமிதம் கொண்டேன்... ஆனால் அடுத்த சில நாட்களிலேயே வேலைக்குப் போகச் சொன்னீர்கள்... அம்மா நெஞ்சு பொறுக்காமல், ஏன்...? எதற்கு...? அவள் வேலைக்குப் போக என்ன அவசியம்..? என்று கேட்டாள்... எதிர்த்து கேள்விக் கேட்கிறாயா..? என்று நீங்கள் அறைந்ததில் அவளின் இடது காது கேட்காமலேயே போய்விட்டது.. அந்த பயத்திலேயே நான் கேள்வி ஏதும் கேட்காமல் வேலைக்கு வந்துவிட்டேன்...

சென்னையில் இங்கு, ஒரு துணிக்கடையில் வேலை செய்துக் கொண்டிருக்கிறேன்... நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன... மாதந்தோறும் ஒரு நாள் கண்டிப்பாக போன் செய்து விடுவீர்கள்.. சம்பளம் போட்டுவிட்டார்களா... அனுப்பி விட்டாயா என்று கேட்டுவிட்டு உடனே போனைத் துண்டித்து விடுவீர்கள்.. ஒரு நாள் கூட, "நீ நல்லா இருக்கியா.. சாப்பிட்டியா... வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா" ன்னு ஒரு வார்த்தை கேட்டதில்லை...

நான் கதறி அழாத நாட்கள் இல்லை.. கண்ணீர் படாமல் என் தலையணை எனக்கு தாலாட்டு பாடியதில்லை... அழுது அழுது, தலையணை நினைந்து நினைந்து, அதன் கணம் பன்மடங்கு கூடிவிட்டது... மென்பஞ்சு தலையணை இன்று பெரிய பாரங்கல் போல் சுமக்கிறது.. என் கண்ணீர் மென்பஞ்சையே கல்நெஞ்சம் ஆக்கிவிட்டது.. ஆனால், உங்கள் கல்நெஞ்சத்திற்கு அது புரியவில்லை..

உங்கள் அன்பிற்காக காத்திருந்து காத்திருந்து நான் காணாமல் போய்விட்டேன்... உங்கள் பாசத்தைத் தேடித் தேடி, நான் தொலைந்து விட்டேன்...

அடுத்த ஜென்மத்திலாவது, நீங்கள் விரும்பிய ஆண்மகனாக நான் பிறக்காமல், நான் விரும்பும் அப்பாவாக நீங்கள் இருக்க, அந்த ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...

இப்படிக்கு.,
மகள்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...