Skip to main content

"No Selfie Zone"

அழகுடன் கூடிய ஆபத்தான இடங்கள்; சுற்றுலா தளங்கள்; குறுகிய சாலை வளைவுகள்; கொண்டை ஊசி வளைவுகள் போன்ற இடங்களில் அதிக கவனமாக இருப்பதற்காக, இது "Accident Zone" என்று அறிவிப்புபலகை பொதுவாக வைக்கப்பட்டிருக்கும்...

அந்த காலமெல்லாம் இப்பொழுது மலையேறிப் போய் "No Selfie Zone" என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது...

"எல்லாம் சிவமயம்" என்பது மாறி "எல்லாம் செல்பிமயம்" என்று உலகமே உருண்டுக் கொண்டிருக்கின்றது...

ஆரம்பத்தில் ஆனந்தமான வரமாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த செல்பி, இன்று அதிரடியான சாபமாய் மாறத் தொடங்கியுள்ளது...

ஆம்... பெரும்பாலனோர் வித்தியாசமான மற்றும் புதுமையான முறையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, அது பெரும் ஆபத்திலோ அல்லது விபத்திலோ முடிவடைவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...

கடந்த வருடம் ஜனவரி மாதம், தாஜ்மஹாலைக் கண்டுரசிக்க காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்த 20 முதல் 22 வயதையொத்த இளைஞர்கள் சிலர், வேகமாக வந்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்நின்று செல்பி எடுக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

சில மாதங்களுக்கு முன்பு, ஒகேனக்கலில் இயற்கையை ரசிக்க பரிசலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, பரிசலின் ஒரே முனையை நோக்கி எல்லோரும் குவிய, பாரம் தாங்காமல் பரிசல் நீரில் மூழ்கியது... இதில் பரிசலில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்...

சென்னையில் நேற்று, மின்சார ரயிலில் படியில் தொங்கிக் கொண்டே பயணித்த இளைஞன் ஒருவன், படியில் தொங்கியபடியே செல்பி எடுக்க முயன்று, ஓடும் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்தான்...

இதுப்போல இன்னும் நிறைய எதிர்பாராத விபத்துக்கள் செல்பியினால் நாள்தோறும் நிகழ்ந்துக் கொண்டேயுள்ளன...

இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், "தி வாஷிங்டன் போஸ்ட்" என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஆய்வில், "கடந்த வருடத்தில் செல்பி எடுக்க முயன்ற காரணத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிகையில், உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது"... மொத்த எண்ணிக்கையில் பாதிக்குப் பாதி மரணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது...

அதே போல, செல்பிக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மற்றொரு ஆய்வுக் கூறுகிறது...

இதை தவிர்க்க, செல்பி எடுக்க தூண்டும் உணர்வைக் குறைக்க, "ஆண்ட்டி செல்பி மாத்திரைகள்" சந்தைக்கு வந்துள்ளன... இதை குடித்தால் செல்பி எடுக்கத் தூண்டும் உணர்வு கட்டுப்படுத்தப்படுமாம்... புற்று நோய், காச நோய், சக்கரை நோய் போல செல்பியும் ஒரு நோயாக பரவி வருகிறது... சொல்லப்போனால் மற்ற நோய்களை விட, இது வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக இருக்கிறது...

பெற்றோர்களை சக்கரை நோயிலிருந்தும், பிள்ளைகளை செல்பி நோயிலிருந்தும் காக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உருவாகிக் கொண்டிருக்கிறது...

அதி தீவிரம் அடைய விடாமல், இப்பொழுதில் இருந்தே செல்பி நோயை வளர விடாமல் குறைப்போம்... ஆபத்தான இடங்களில் விபரிதமான முயற்சிகளை தவிர்ப்போம்... உயிரிழப்புகளைத் தடுப்போம்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...