Skip to main content

Posts

Showing posts from 2019

அலங்கார பொய்

ஆராத கற்பனைப் பசிக்குப் பொய்யே தீனி  அலங்கோல உண்மையைக் காட்டிலும்     அலங்கார பொய்க்கு அசைந்திடும்  காதுகளே அதிகம்  இருப்பினும்   பொய் பொய்யாகவே  இருக்கும் வரையில்  உள்ள சுவாரசியம்  உண்மையாகும் போது  இருப்பதில்லையென்பது  உண்மை கார்த்திக் பிரகாசம் ... 

கண்காட்சி

நண்பனின் திருமண ஆல்பம் புரட்டுகிறேன் கண்களைக் குளிர்ச்சியாக்கும் வண்ணம் தொடையில் வைத்தால் வழுக்கிச் செல்லும் நைலான் மாதிரியான அட்டைகள் அட்டையின்மேல் முழுவதும் இல்லை ஆங்காங்கே வெல்வெட் அலங்காரங்கள் கோணல் மாணல் இல்லாமல் துல்லிய கோணத்தில் பதிய தலைக் கீழாய் நின்று மயிர்ப் பிய்த்து மல்லாக்கப் படுத்து இன்னும் எப்படியெல்லாமோ வித்தையைக் கொட்டியிருக்கிறான் புகைப்படக்காரன் பளீரென்று வெளிச்சத்தை தெளிக்கும் மஞ்சள் விளக்கும் முகத்திலுள்ள மாசு மருக்களை மூடி மறைக்கும் அதிநவீன ஆடிகளும் அவர்களின் முகத்தில் ஏதோ அவசரத்தையும் அசௌகரித்தையும் அறைந்திருக்கக் கூடும் பார்வையும் புன்னகையும் பதற்றத்தினால் யதார்த்தமாக இல்லை தொடுவது போல் தொட்டும் சாய்வது போல் சாய்ந்தும் ஊட்டுவது போல் ஊட்டியும் பொய் கோபம் போல் கோபம் காட்டியும் கொஞ்சுவது போல் கொஞ்சியும் பதிய வைக்கப்பட்டுள்ள படங்களில் கண்காட்சியாய் துறுத்தி நிற்கிறது செயற்கைத் தனம் யதார்த்தமென்று நம்பவைக்க எடுக்கப்பட்ட யதார்த்தமில்லா படங்களை என்னவென்று சொல்ல ஆங்கில வார இதழைப் போல் சடசடவென புரட்டி முடித்துவிட்டேன் கார்த்திக் பிரகாசம்...

அருவருப்பு

இவர்களுக்கு என்னப் பிரச்சனை  தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை  முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு என்று  தெளிவாக எழுதி வைத்துவிட்டு தானே  தற்கொலை செய்துக் கொண்டேன்  பிறகு ஏன் ஆளாளுக்கு ஒரு காரணம்  கற்பித்தவாறு இருக்கிறார்கள்  கேட்கக் காதும் ஆட்ட மண்டையும் கிடைத்துவிட்டால் போதுமே அந்த வெள்ளைச் சட்டைக்காரன் சொல்கிறான்  'எனக்குக் கள்ளக் காதலன் உண்டாம்  வயிற்றில் பிள்ளை உண்டாயிற்றாம்  அதை மறைக்கவே' அரக்குச் சேலைக்காரி புலம்புகிறாள் 'புருஷன் புல்லனாக இருந்தால் பொம்பளைங்க கதி இதான்' முன்னாள் காதலன்  'இவள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள் அரிப்பெடுத்தவள் என்றறிந்தே விலகிவிட்டேன்' பெருமூச்சு விடுகிறான் பத்திரிக்கைக்குத் தெரிந்தால் இன்னும்  என்னென்ன எழுதுவார்களோ இவர்கள் செய்திடாத தற்கொலைக்குத் தகுதியென நினைக்கும் காரணங்களை  என் நிணத்தின் மீது வீசுகிறார்கள் இம்மனிதர்களுக்கு மத்தியில்  பிணமாய்க் கிடப்பதும் கூட அருவருப்பாய் இருக்கிறது கார்த்திக் பிரகாசம்....

பிரபஞ்சன் வருந்துகிறார்

பிரபஞ்சன் வருந்துகிறார், 'பெரும்பாலும்  பெண்களின் மகிழ்ச்சி  தொலைப்பாளர்கள் கணவர்களாக தந்தையர்களாக சகோதரர்களாகவே இருக்கிறார்கள்' சரி தான். ஆணுக்கான பதவிகள் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் அடையாளமாக தரித்திருப்பவை வெளியில் பாசாங்கு காட்டி பவிசாக நகர்பவை உறவில் அதிகாரம் ஒருபோதும் உகந்ததாய் இருக்கலாகாது கணவனாய் தந்தையாய் சகோதரனாய் வாழ்வதில் என்ன இருக்கிறது ஓர் நண்பனாய் இருந்துவிட்டு போவோம் கார்த்திக் பிரகாசம்...

ஆம்புலன்ஸ்

எத்தனையோ முறை அலறிக் கொண்டே சாலைகளை விலக்கியோடும் ஆம்புலன்ஸை அச்சத்தோடு  விழித்திருக்கிறேன் அந்த அலறல் சத்தம் மரணத்திற்கு மிக அருகில் சென்றுவிட்ட ஒர் உயிரின் அபாயக் குரலின் எதிரொலியாய்  செவிகளை ஊசிமுனையால்  குத்திவிட்டுச் செல்லும் வெளிக்கு பாதிமட்டும் காட்டும் கண்ணாடி வேனுக்குள் பளீரென்ற வெள்ளையொளி  விரவியிருக்கும் பிரியமானவரின் மரணத்தை  இன்னும் சிலகாலம்  தள்ளிப் போடும் முயற்சியில்  கவலையை அணிந்துக் கொண்ட  ஓர் உருவத்தின் கண்கள் சோகத்திலும் பரபரப்பது  தெளிவாகத் தெரியும் உடனே மனதிற்குள் மரணத்திற்கான ஒத்திகை நடக்கும் மடியில் என்னைக் கிடத்தியிருக்கும் தெளிவற்ற  அவ்வுருவம் ஏதேதோ சாயல்களில் என்னைக் கண்டு கதறும் கண்ணீர் வடிக்கும் கண்ணீரைத் துடைக்கும் தூக்கியடிக்கும் நெஞ்சைத் தடவி தலையைக் கோதிவிடும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் சுகமாக பிரியும் பாரங்கள் இலகுவாகும் மயிரைவிட உடல் லேசானதாகும் மரணம் ஒருபோதும்  சொல்லிக் கொண்டு வருவதில்லை ஆனால் எதையோ உணர்வித்துச்  செல்கிறது கண்ணீரை சுமப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட அவ்வெள்ளை ஊர்தி கடந்துச் சென்ற ஒவ...

பார்வையற்ற பலூன்கள்

மருமகனுக்கு ஊதிக் கொடுத்த பலூன்கள் வீடெங்கும் பற்பல வண்ணங்களில் பறந்தவாறிருக்கின்றன பாவம் அவைகளுக்குத் தெரியாது அவன் விடுப்பு முடிந்து திரும்பிச் சென்றுவிட்டான் என்று ஒருவேளை தெரிந்தால் சிரிப்புச் சத்தம் கேளாமல் கலையிழந்து வெற்று  கட்டடமாக நிற்கும் இவ்வீட்டை போல் அவையும் வாடி வற்றி சுருங்கிவிடக் கூடும் நல்லதாய் போயிற்று பலூன்களுக்கு நிறமுண்டு பார்வை இல்லை ஆதலால் பறக்கின்றன வெற்று கட்டடத்தின் சுவர்களில்  அவனின் சிரிப்புச் சத்தத்தை  உயிர்ப்பித்தபடி... கார்த்திக் பிரகாசம்...

நட்சத்திரங்கள்

வானில் நட்சத்திரங்கள்   காணாதது பெரிய குறையாக இல்லை கடற்கரை மணலில்  நிறைய குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருக்கின்றனர்  கார்த்திக் பிரகாசம்... 

துளி

மழைப் பொழுதில் வாசிக்கும் கவிதைகள் இனிமையானவை கார்த்திக் பிரகாசம்...

மன்றாடும் மழை

தூறலுக்கும் சாரலுக்கும் குடை பிடித்து நீர்புகா அங்கியணிந்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் கார்த்திக் பிரகாசம்...

மனுசங்க

'நீங்க நாடாரா.?' "இல்லைங்க" 'நாய்க்கரா.?' "இல்லைங்க" 'தேவரா.?' "இல்லைங்க" 'கோனாரா.?' "இல்லைங்க" 'கவுண்டரா.?' "இல்லைங்க" 'செட்டியார் முதலியாரா.?' "இல்லைங்க" 'பள்ளு பறையா.?' "இல்லைங்க" 'யாருங்க நீங்க.?' "மனுசங்க" 'அப்போ நாங்க யாராம்.?' "அதான் தெரியலைங்க... யாருங்க நீங்க" கார்த்திக் பிரகாசம்...

மயிர்கள்

மீசையிடம் தாடிக் கேட்டது நீயும் நானும் ஒன்றாகத் தானே பிறந்து வளர்ந்தோம் நீ வீரத்துக்கு நான் மட்டும் சோகத்துக்கா.? முறுக்கினைத் தளர்த்திவிட்டு மீசை சொன்னது வீரமும் சோகமும் மயிற்றில் இல்லை இருக்கும் இடம் தான் வேறே தவிர நாமிருவரும் மயிர்களே எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்துவிடும் வெறும் மயிர்களே... கார்த்திக் பிரகாசம்...

ஊமை

எவ்விடத்திலும் எச்சூழ்நிலையிலும் எளிதாய் சென்று தன்னை நிலை நிறுத்துகிறது பொய் ஊமையாகிட்ட உண்மைகளினால்... கார்த்திக் பிரகாசம்...

தோற்றவன்

கனவில் ஓர் பாராட்டு விழா தோற்றவர்களெல்லாம் மேடையில் வீற்றிருக்கிறார்கள் ஒன்றிலும் ஜெயித்தவர் ஒருவர் கூட இல்லை அரங்கத்தில் இதுவரையில் பலமுறை தோற்றவர்களும் உடனடியாக தோற்கயிருப்பவர்களும் வரிசை வரிசையாக அமர்ந்திருக்கின்றனர் ஆனால் எப்படி எல்லாரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் எவருடைய முகத்திலும் துளிக்கும் கவலை இல்லை எனக்கோ ஆச்சர்யம் தோற்ற பிறகு வருத்தமில்லாமல் உங்களால் எப்படி சிரிக்க முடிகின்றது கேட்டே விட்டேன் அதற்கும் அவர் சிரித்தார் நண்பா..! நாங்கள் தோற்றுவிட்டோம் உண்மை தான் ஆனால் நாங்கள் முயற்சிக்கிறோம் தொடர்ந்து முயற்சிப்போம் வெற்றியோர் அனுபவம் முயற்சியோர் வழிமுறை தோல்வியே பாடம் நாங்கள் பாடம் கற்கிறோம் மறுபடியும் புன்னகை அப்போது தான் முகத்தைப் பார்த்தேன் அது என் முகம் உற்று நோக்கினால் அரங்கம் முழுவதும் என் முகங்களே கார்த்திக் பிரகாசம்...

ஏதேதோ

ஏதோ எழுத உட்கார்ந்து ஏதேதோ எழுதிவிடுவதை போலவே சமயங்களில் வாழ்க்கையும்...!!! கார்த்திக் பிரகாசம்...

ஊனமுற்ற வாழ்க்கை

வாடகை வருடாவருடம் வரையறை இல்லாமல் ஏறிக் கொண்டிருக்கிறது அது ஓர் அறை ஓர் பாத்ரூம் ஓர் சமையலறை என்பதனாலான வீடு என்ற ஒன்றிற்கான வாடகையா இல்லை ஒட்டுமொத்த உலகப் பரப்பின் ஒரு பகுதிக்கான வாடகையா தெரியவில்லை சம்பளம் நத்தையே தோற்றுவிடும் வேகத்தில் உயர்கையில் வாடகையோ நசுக்கியே கொன்றுவிடும் வெறியில் வேடிக்கைக் காட்டுகிறது ஊனமுற்ற இவ்வாழ்க்கைத் தொடர்ந்து ஊனமாகிக் கொண்டே உதிர்கிறது நான் அணிந்து நைந்து வேண்டாமென்று தூக்கியெறிந்த சட்டையை உடுத்தி வளர்ந்த இளையவன் தான் புதிதாய் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அழைத்திருக்கிறான் நேரில் வரமுடியவில்லையென்று எனக்கும் மனைவிக்கும் அழைப்பிதழை தனித்தனியாக வாட்சப்பில் அனுப்பியிருக்கிறான் அழைப்பிதழை படித்தவாறே என்னைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாள் மனைவி அந்தப் பார்வையில் பாய்ந்து வந்த முட்கள் இரத்தம் வழிவதைப் பொருட்படுத்தாது என் கண்களைக் குத்திக் கிழித்தன அதிலிருந்து தப்பிக்க பிள்ளைகளைக் கவனித்தேன் கண்டிப்பாக போக வேண்டுமென்று அவர்கள் இப்போதே அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எனக்கோ எப்படியாவது இந்த இரவைக் கடந்துவிட்டால் போதும் என்றிருக்கிறது கார்த்திக் பி...

போலி புன்னகை

திருமணத்தின் போது முதன்முறையாக அம்மாவும் அப்பாவும் ஒன்றாக நின்று எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் ஈரங்களின் தொடர் ஈரத்தினால் அரித்திட்ட மரச் சட்டத்தில் தூசி ஒட்டடைகளின் பேராதரவுடன் பழுப்பேறிய ஆணியின் கடைசி ஊசலாட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது அம்மாவும் அப்பாவும் அப்படியொரு பொருத்தமான துணைவர்கள் என்று அப்புகைப்படத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது அப்பா ஒல்லி உயரம் அம்மா கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் குண்டு ஆனால் கலையான முகம் அப்பாவின் முகத்தின் துளிக்கும் சிரிப்பில்லை அம்மாவின் இதழ்களிலோ லேசாக வழிந்தது புன்னகையை போன்ற ஏதோவொன்று ஆனால் புன்னகைக்கான சாயலேதும் அந்த முகத்தில் இல்லை அது புகைப்படத்திற்கான போலி புன்னகை என்றுத் தெளிவாய் தெரிகிறது போலியாயினும் புன்னகைக்கு மட்டும் தனி மதிப்பு இருக்க தான் செய்கிறது அம்மாவின் போலி புன்னகையும் அழகாய் இருக்கிறது கார்த்திக் பிரகாசம்...

அன்பான துணைவனுக்கு

அன்பான துணைவனுக்கு, 'அன்பான கணவனுக்கு' என்றுத் தெரியாமல் எழுதி அழித்துவிட்டேன். தெரியும். "கணவன்" என்றுச் சொன்னால் உனக்குப் பிடிக்காது. கணவன் என்ற சொல்லை ஒரு அடக்குமுறையை ஆணாதிக்கத்தைக் குறிக்கும் குறியீடாகவே நீ பார்க்கிறாய். "கணவன்" "மனைவி" என்ற அடக்கியும், பெருமையாக அடிமைப்பட்டும் கிடக்கும் பதவிகளில் தூய்மையான அன்பும் உண்மையுமில்லை. எனவே "துணைவன்" "துணைவி" என்பதே நமக்குப் பொருத்தமானச் சொற்கள் என்றுக் கூறுவாய். ஒருகணம் மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் பூரிக்கிறது. உத்தியோகம் நிமித்தமாக உன்னை பிரிந்து வந்து முப்பது நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் இந்த முப்பது நாட்களை வருடக்கணக்காய் எண்ணிக் கடந்து வந்திருக்கிறோம் என்ற உண்மை என்னையும் உன்னையும் தவிர வேறாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விதிமுறைகளற்ற இவ்விளையாட்டினை இயற்கை இப்போது நம் வாழ்க்கை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. விளையாட்டில் பங்கேற்க முடியாமல் அசந்தர்ப்பமாக நீயும் நானும் வெறுமனே வேடிக்கைப் பார்க்கும்படி ஆகிவிட்டது. வானளவு தொழிற்நுட்பங்கள் வளர்ந்த...

விலை

இங்கு எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கின்றது அது பணமாகவோ பொருளாகவோ தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை சமயங்களில் உணர்வாகவோ உறவாகவோ கூட இருக்கலாம் கார்த்திக...

தனிக் கடவுள்கள்

எனக்கென்று தனிக் கடவுள்கள் உண்டு நான் பிறக்கையில் அல்லது அதற்கும் கொஞ்சம் பின்தங்கி அவர்கள் பிறந்தார்கள் நான் இறக்கும் போது அல்லது அதற்கும் கொஞ்சம் முன் அவர்களும் இறந்து விடுவார்கள் கார்த்திக் பிரகாசம்...

அதனாலென்ன

அப்பா அம்மா இறந்தது தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறது குழந்தை.. அதனாலென்ன அழுது மட்டும் இப்போது என்ன மாறிவிட போகிறது கார்த்திக் பிரகாசம்...

பசி

வற்றிய வயிற்றை வார்த்தைகள் நிறைக்காது என்று நன்கறிந்தும் வயிற்றுடன் ஆறுதல் பேசினேன் இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பதைக் காட்டிலும் துயரமாக இருந்தது அது நீ வேறு நான் வேறா கொஞ்சம் பொறுத்துக் கொள் ஏதாவது சில்லறைகள் தேறுமா பார்க்கிறேன் போன வாரம் கழற்றிப் போட்ட மேல் சட்டை பாக்கெட்டில் ஏதாவது.? நீ தான் மேல் சட்டையில் பாக்கெட்டே வைப்பதில்லையே..! நண்பர்கள் யாராவது வந்துவிடுவார்கள் நம்பு பேசப் பேச மொத்த உடலும் வயிறாக மாறி பசியால் கதறத் தொடங்கியது ஒரு கட்டத்தில் நான் பேசுவதை நிறுத்திவிட்டேன் பின்பு என்ன நடந்ததென்று தெரியவில்லை கார்த்திக் பிரகாசம்...

முட்கள்

பாதத்தைக் கிழித்தெடுத்த முட்களெல்லாம் என் பாக்கெட்டில் பத்திரமாக இருக்கின்றன கார்த்திக் பிரகாசம்...

நாலு இட்லி

நாலு இட்லி எழுபத்தி நாலு ரூபாயா..? சரி எனக்குப் பசிக்கவில்லை அப்புறம் வருகிறேன் கார்த்திக் பிரகாசம்...

நான் சொன்னேனா...?

ஆசைகளைப் பெருக்கிக் கொண்டாய் தேவைகளைப் பெருக்கிக் கொண்டாய் மனதை மட்டும் சுருக்கிக் கொண்டாயே நான் சொன்னேனா...? கார்த்திக் பிரகாசம்...

குப்பை

குப்பைகள் வெளியே சிதறிக் கிடக்க, காலியாக இருந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால் அவன் ஒளிந்துக் கொண்டான். வீட்டு வாசலில் யாரோ இருவர் நின்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அசிங்கமான வார்த்தைகள். கேட்க முடியவில்லை. குரலை உற்றுக் கவனித்த போது எட்டு மாதத்திற்கு முன்பு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த கேசவனும், செல்வராஜும் என்றுத் தெரிந்தது. அவனுடைய மனைவி வாசற்படியில் படபடப்புடன் நின்றிந்தாள். "யம்மா.. மொதல்ல ஒம் புருஷன வெளிய வரச் சொல்லு" கேசவன் கத்தினான். "அவரு வீட்ல இல்லிங்க" உடைந்த குரலில் வார்த்தைகள் வந்தன. "என்னம்மா.. எப்ப வந்துக் கேட்டாலும் இதையே சொல்ற... என்ன புருஷனும், பொண்டாட்டியுமா சேர்ந்துக்கிட்டு ட்ராமா பண்றீங்களா" "இத பாரும்மா. வீட்டுக்குள்ள வந்து பண்ட பாத்திரத்தெல்லாம் தூக்கிட்டு போன அசிங்கமா போய்டுமேனு பாக்கறேன். ஒழுங்கு மரியாதையா அந்த நாதாரி பயல" பெரும்கோபம் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் செல்வராஜ். அடுக்கு மாடி வீடுகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக கரண்ட் இல்லை போலிருக்...

அம்மாவின் காதலன்

காலையில் இருந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. வெகுநாட்களுக்குப் பிறகு வாசலில் பெரிய ரங்கோலி கோலமாகப் போட்டு, அமர்க்களமாக கலர் பொடிகள் தூவி மத்தியில் சாணியை பிள்ளையாராக மாற்றி அமர வைத்திருந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தை முழுவதும் துவட்டாமல் துண்டுடன் சேர்த்துக் கூந்தலைச் சுற்றிக் கொண்டை போட்டிருந்தவள்,இத்தனை நாளாய் ஒளித்து வைத்திருந்த ஏதோவொரு அழகை இன்று அனிச்சையாக அள்ளித் தெளித்தாள். நிரந்தரமாக பதிந்துவிட்ட அந்தக் கருவளையத்தை மறைத்துக் காட்ட பெரும் சிரமப்பட்டிருப்பாள் போலிருக்கிறது. பெரும் வெற்றிக் கிட்டிருக்கிறது. மஞ்சள் பூசிய முகத்தில் முன்னெப்போதும் கண்டிராத குதூகலமும், பிரகாசமும் பொங்கி வழிந்தன. தேங்காய் சில்லுகள் மிதக்கும் வெண்டக்காய் புளிக் குழம்பு, முட்டைகோஸ் கூட்டு, அவரைக்காய் பொரியல், கத்திரிக்கா முறங்கா சாம்பார், ரசம், அப்பளம் என சமையற்கட்டில் இருந்து மிதந்து வந்த வாசம் வீடு முழுவதும் பரவி தூசி துரும்பென யாவற்றுக்கும் வந்தனம் சொல்லியது. "இன்னைக்கு ஏதாவது விஷேசமா மா" 'இல்லடா கிருஷ்ணா' "அமாவாசை பௌர்ணமி ஏதாவது" 'அதெல்லாம் ஒண்ணுமில்லடா...

நிறைவுற

அழுவதற்கும் சிரிப்பதற்கும் உன் வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது ராகா..!!! கார்த்திக் பிரகாசம்...

ஏகாங்கி

தயவுசெய்து எழுப்பிவிடாதீர்கள் நான் இன்னும் உறங்கவே இல்லை கார்த்திக் பிரகாசம்...

மவராசி

சுருட்டி வைத்த நைந்த பாயாய் ஒரு ஓரமாய் சுருண்டிருக்கிறாள் கிழவி பருத்த ஆடிக்குள் பதுங்கியிருக்கும் கண்களினூடே பலமுறை உடைந்து ஒட்டுப் போட்ட அவ்வுருவத்தைக் கண்டான் கிழவன் தோல் சுருங்கிய தேகத்தில் உள்ளங்கை ரேகையாய் உடல் முழுவதும் வரி வரியாய் வளைந்தும் நெளிந்தும் ஓடும் கோடுகள் ஏழு பிள்ளைகளைச் சுகமாய் தாங்கிய (அதிலொன்று கருவிலேயே சிதைந்துவிட்டது) கனத்த வயிறென்றவொன்று இப்போது அங்கில்லை ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு அக்குளில் சொறிந்து விடுகிறாள் கிழவி வடிவிழந்து வற்றிப் போய் தொங்குகின்றன முலைகள் தேங்காய்நார் போல் நரைத்த முடிகள் விரைத்து நிற்கின்றன எழுந்துச் சென்று நிலைக் கண்ணாடியின் முன்நின்று தன்னுருவத்தைக் கண்டு மனதிற்குள் சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டான் கிழவன் மவராசி இவளுக்கு முந்தி நா போய் சேந்தரனும் கார்த்திக் பிரகாசம்...

ராணி

அழகான பேருல. யாரு பாட்டி எனக்கு இந்தப் பேர வச்சது. எவளோ ஆச ஆசையா வச்சிருப்பாங்க. நான் ராணி மாதிரி வாழணும்னுதான இந்தப் பேர வச்சிருப்பாங்க. ஆனா இந்தப் பேரச் சொல்லிக் கூப்டா எனக்குச் சந்தோஷமாவே இல்ல பாட்டி. யாராவது என்ன ராணின்னு கூப்புடும் போது ராணி மாதிரி நெனப்பு ஒருநாளும் வந்தது இல்ல. யாரோ யாரையோ கூப்புட்ற மாதிரி இருக்கும். அதுவும் அந்த செட்டியார் அம்மா, "ஏய் ராணி. கக்கூஸ சரியா கழுவுனியா இல்லையா... எப்புடி நாத்தம் அடிக்கிது பாரு. போ போய் நல்லா பினாயில் ஊத்தி இன்னொரு மொற சுத்தமா கழுவி வுடுன்னு" சொல்றபோ, பண்றதெல்லாம் அடிமை வேல இந்த லட்சணத்துல பேரு மட்டும் ராணின்னு எனக்கே என்மேல வெறுப்பா இருக்கும். 'யாரு பாட்டி இந்தப் பேர வச்சது' கோவம் கோவமா வருது. நேத்து அந்த முதலியார் வீட்டம்மாகிட்ட, "அம்மா பசிக்குது. வயித்துக்கு ஏதாவது போட்டுட்டு பாத்திரம் வெளக்கட்டுமான்னு கேக்றேன். அதுக்கு அந்தம்மா, இங்க எல்லா பாத்திரமும் கழுவாம கொட்டிக் கெடக்கு. மலையாட்டம் வேல இருக்கும் போது உனக்கெல்லாம் எப்படிதான் சாப்புட தோணுதோ. மொதல்ல வேலைய முடி அப்புறம் சாப்டுக்குலாம். 'பேரு ராணின்னு வச...

மனதோடு

கடற்கரைக்குச் சென்றுவிட்டு திரும்பும் போதெல்லாம் காலோடு மணல் ஒட்டிக் கொண்டு வருகிறதோ இல்லையோ மனதோடு கவிதை ஒட்டி வந்துவிடுகிறது...! கார்த்திக் பிரகாசம்...

ஏதுமற்ற ஏதோவொன்று

நீ பேசுகிறாய் உன் வார்த்தைகள் வறண்டே ஒலிக்கின்றன நீ பார்க்கிறாய் உன் பார்வையில் பாசாங்கே பரவுகிறது நீ சிரிக்கிறாய் உன் சிரிப்பில் லயிக்கும் ஈரமே இல்லை நீ அருகில் இருக்கிறாய் உன் மனமோ எங்கோ தொலைவிலே திரண்டிக்கிறது மொத்தத்தில் இங்கே நீயில்லை அங்கே நானில்லை கார்த்திக் பிரகாசம்...

எப்பொழுதும் போல

காக்காவும் புறாவும் ஒரே கிளையில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன மரம் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது எப்பொழுதும் போல கார்த்திக் பிரகாசம்...

தனிப்பெரும் துணை

எதைப் பற்றியும் யாரைக் குறித்தும் கவலைப்படாத நாட்கள் அவை. காலையில் சீக்கிரம் எழுவதென்பது எப்போதுமே நடக்காத ஒன்று. தூக்கம் தெளிந்து நானாக எழும் வேளையே காலை. "அந்த"க் காலை வேளையில் சட்டைப் பையில் நோட்டாக இருந்தால் ஒரு பொட்டலம் பட்டச் சோறு. சில்லறையாக இருந்தால் ஒரு டீ இரண்டு சால்ட் பிஸ்கட். அதுதான் அன்றைய நாளுக்கான ஆகாரம். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு நண்பர்கள் யாராவது அலுவலகத்திலிருந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். பணம் தர முகம் சுளிக்காத நண்பனாயிருந்தால் உரிமையுடன் கூடுதலாக ஒரு ஆம்லேட் இல்லையென்றால் நாலு இட்லி மட்டும். வேலைத் தேடி வேலைத் தேடி அலுத்திருந்தது. இல்லாத உடம்பு இன்னும் இத்துப் போகத் தொடங்கியது. தாடியைத் தடவிக் கொள்வதிலும், சுயஇன்பம் காண்பதிலுமே பெரும்பாலான பகல் பொழுதுகள் கரைந்தன. 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே', "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" பாடல் வரிகள் சோகத்தின் வடிகாலாகவும் அதே வேளையில் புது தெம்பைத் தருவதாகவும் இருந்தன. கடல் பேரன்பு. கடலலை பெரும் தத்துவ ஆறுதல். சென்னையில் வசிப்பதில் மிக முக்கியமா...

உயிரிழந்த புத்தகங்கள்

விற்காமல் தேங்கிக் கிடக்கும் அந்தக் கவிதைப் புத்தகங்களில் ஓராயிரத்தியொரு காதல்களும் ஒடுக்கிச் சிதைத்த பெருவலிகளும் ஏங்கிக் கிடந்த ஏக்கங்களும் தூக்கியெறிந்த பிரிவுகளும் முதுகுடைத்த துரோகங்களும் பகீர ஆளில்லா இன்பங்களும் கலைஞனின் குமுறல்களும் உணர்வற்று தூசி அழுக்குகள் உருமாற்றிய சவ அட்டைகளால் மூடப்பட்டு முகமிழந்த நிரந்தர அநாதையாய்க் கிடக்கின்றன கார்த்திக் பிரகாசம்...

கோபம் அந்நியம்

அதீத கோபத்தில் இருக்கும் போது அந்நிய மொழியில் திட்ட ஆரம்பித்து விடுகிறாள் நல்லாதாய் போய்விடுகிறது எனக்கு ஒன்றுமே புரிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

ஆண்மை

நீ ஆண்மையென நினைக்கிறதானவொன்று உன் "குறி"யில் இல்லை அதனை நிரூபிக்க வேண்டிய இடம் என் "யோனி"யும் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

இந்த முறையும்

வருகைக்காக வாசலை பார்த்திருந்திருந்தார்கள் அம்மாவும் அப்பாவும் "இந்த முறையும் வர முடியவில்லை" என்ற கடுதாசி தான் வந்தது... கார்த்திக் பிரகாசம்...

காமத்தோடு கைக்கோர்த்து

காமம் கடந்த காதல் தான் உன்னதமானதென்று காமத்தைக் காதலிலிருந்து கரைத்தொதுக்க எண்ணுகிறார்கள் சிலர் புரியவில்லை காதலில் காமத்தை ஏன் கடக்க வேண்டும் கண்ணே...! இந்து மதத்தில் இருந்து சாதியை விலக்க முடியுமா...? காமத்தைக் கடப்பது காதலிலிருந்து விலகுவது என்றுதானே பொருள் பிறகேன் காதலைத் தெய்வத் தன்மையோடு போற்றும் அதே நேரத்தில் காமத்தை ஒதுக்கி ஓரம்கட்டி வைக்க வேண்டும் உள்ளபடிக்கு சொல்கிறேன் காமத்தைக் கடக்கும் காதல் நமக்கு வேண்டாம் கண்ணே... வா...!!! காமத்தோடு கைக்கோர்த்தவாறே காதலிப்போம்...!!! கார்த்திக் பிரகாசம்...

கவிதையென்று

கவிதையென்று நான் சொல்லவில்லை வாசித்தவர்கள் வாசித்ததில் வாழ்ந்தவர்கள் வாழ்ந்ததை ரசித்தவர்கள் ரசித்தததை உச்சி முகர்ந்து அனுபவித்தவர்கள் அவ்வரிகளைக் கவிதையென்று அழைத்தனர்...!!! கார்த்திக் பிரகாசம்...

தற்கொலைக் கனவுகள்

ஒவ்வொரு இரவும் விதவிதமாக தற்கொலைக்கு முயல்வதாய் அவனுக்குக் கனவுகள் வரும் மனதை வேறெதற்கோ திசைத் திருப்பினாலும் அதன் பாதைத் தற்கொலை முற்றத்திற்கே மீண்டும் இட்டுச் செல்லும் தற்கொலைக் கனவைக் கொல்ல முடியாமல் வியர்த்துக் கொட்ட வெடுக்கென்று திடுக்கிட்டு விழித்தெழும்போதெல்லாம் இதயத்தின் படபடப்பில் இதற்குத் தற்கொலையே செய்துக் கொள்ளலாம் என்றுத் தோன்றும் கார்த்திக் பிரகாசம்...

சலிப்புத் தீர்ந்ததடி சகி

எத்தனையோ அடி உயரத்தில் பறக்கிறாள் பிறந்தது முதல் பூட்டியிருந்த அவளுடைய சிறகுகள் ஒருவழியாக தன் திறனறிந்து முதல் முறையாக பறக்கின்றன முகில் கூட்டங்கள் முன்னொதுங்கி நின்று வரவேற்கின்றன இனி காலம் அவளுக்குமானது கார்த்திக் பிரகாசம்...

ஓர் எழுத்தாளனின் ஆன்மா

வாழ்நாள் முழுவதும் எந்த அங்கீகாரத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்தேனோ எந்தவொன்றுக்காக உறங்கும் போதும் உறங்கிடாமல் ஆசைப்பட்டேனோ இன்றது இனிதே நடக்கிறது புரியவில்லை புதிதாக ஒன்றுமில்லை என்றுக் கண்டுக்கொள்ளாதவர்களலெல்லாம் இதோ என் திறமையை மெச்சுகிறார்கள் கவிதையை நீட்டியபோது இளக்காரமாய் இளித்தவர்கள் இன்று சொற்களுக்கு இடையேயுள்ள இடைவெளியையும் உற்றுக் கவனிக்கிறார்கள் எழுத்திலிருக்கும் சிரத்தையின்மையின் சிரத்தையை மனம்விட்டு சிலாகிக்கிறார்கள் யதார்த்த சொல்லாடலில் விரிந்திருக்கும் ரசனையை வியக்கிறார்கள் நானெழுதிய வரலாறும் பண்பாடும் நுட்பமாகக் கையாளப்பட்ட என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அந்த நாவலை ஆராய்ச்சிப் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள் அரசு விருதும் அறிவித்திருக்கிறார்கள் பல வருடங்களுக்கு முன்பு நான் துரத்தியடிக்கப்பட்ட அதே வளாகத்தில் இன்னும் சிலநாட்களில் பாராட்டு விழா ஏற்பாடாகிறதென்று அறிகிறேன் ஒருவேளை போன வாரம் மாரடைப்பு ஏற்பட்டு நான் இறக்காமல் இருந்திருந்தால் அப்பாராட்டு விழாவில் பங்குக் கொண்டிருக்கவே விரும்புவேன் கார்த்திக் பிரகாசம்....

காலம்

மாற்றோ மருந்தோ துறவோ அவசியமில்லை யார் இல்லாவிட்டாலும் யாராலும் வாழ இயலும் காலமதைக் கவனித்துக் கொள்ளும் ஏனென்றால் காலமே மாற்று காலமே மருந்து காலமே துறவு கார்த்திக் பிரகாசம்...

தவிப்பு

எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... மனுசன சாகாடிப்பற உண்டாவுற வலிய விட மனுச நோகடிப்பற உண்டாவுற வலிதான் ஜாஸ்தி பிறகேன் என்னைத் தொடர்ந்து காயப்படுத்தியவாறே இருக்கிறாய்... நான் உன்னைக் காயப்படுத்தவே இல்லை நான் காயப்படுவதாக நினைத்து நீயேதான் உன்னைக் காயப்படுத்திக் கொள்கிறாய்... நீ சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்... நீ காயப்படாமல் இருக்கவே தவிக்கிறேன் நீ வேற்றொருவரால் காயப்பட்டாலே என்னால் சகிக்க முடியாது இதில் என்னாலேயே காயப்பட்டால்... அந்தத் தவிப்பே என்னை உருக்குலைக்கிறது இந்த அன்பு தான் எவ்வளவு கொடூர சுகமானது உன் மடியில் என்னைச் சாய்த்துக் கொள்... கார்த்திக் பிரகாசம்...

ஜெயித்ததில் தோற்றவள்

"எல்லாம் நன்றாகப் போகிறது" என்று நம்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் எதையுமே நான் உற்றுக் கவனிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கவில்லை. அதனால் நிழலுலகில் கண்மூடித்தனமாகவும் நிஜ வாழ்வில் பார்வையிருந்தும் குருடியாகவுமே வாழ்ந்திருக்கிறேன் - ஏமாந்திருக்கிறேன். கண்களைத் திறக்காமலேயே எதிரிலிருப்பது என்னவொரு ரம்மியமான இயற்கைக் காட்சியென்று பேரானந்தத்தில் குதூகலித்தவாறு திளைத்திருக்கிறேன். அதை அப்படியே ஆழ்மனதிற்கும் கடத்தி அது உருவாக்கி வைத்திருக்கும் மாய சிறைக்குள்ளே சுதந்திர கீதம் பாடிக் கொண்டு சுதந்திர காற்றைச் சுவாசிப்பதாய் நினைத்து எரியூட்டப்பட்ட பிணங்களின் வாடையைச் சுமந்து வரும் சுடுகாட்டுக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆதவனின் வரிகளைப் போல், நம்ப வேண்டியதை விடுத்து நான் நம்ப விரும்புவதை மட்டுமே இத்தனை நாளாய் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இப்போது தான் என் புத்திக்கு உரைக்கிறது. இதோ எதிரே மேசையில் இருக்கும் அந்த வெள்ளைத் தாள் எனது ஒரேயொரு கையெழுத்தை எதிர்நோக்கிக் காற்றில் சடசடத்துக் கொண்டிருக்கிறது எப்போதோ நான் வாசித்தக் கவிதையை ஞாபகப்படுத...

அந்தவொரு தருணம்

"தலையில் மல்லிகைப் பூ. கன்னங்களில் ரோஸ் பவுடர். உதட்டில் அடர் நிறத்தில் சாயம். பெரும்பாலும் சிவப்பு அல்லது ரோஸ். கருப்பு நிற ஜாக்கெட். சிவப்புக் கலர் சேலை. கையில் ஒரு ஹேண்ட் பாக்" இந்தக் கோலத்தில் தான் பெரும்பாலும் என்னைப் பார்த்திருப்பீர்களென்று தெரியும். என்னைக் கடக்கும் போதெல்லாம் உங்களின் முகபாவனைகளைக் கவனித்திருக்கிறேன். அது பெரும்பாலும் இந்த இரண்டில் எதுவோவொன்றாக தானிருக்கும். ஒன்று சாக்கடையில் மிதக்கும் செத்த எலியைப் பார்ப்பது போன்ற அருவருப்பான பார்வை. இன்னொன்று தெருவினோரத்திலிருக்கும் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் பசியால் 'மியாவ் மியாவ்' என்றுக் கத்தியிருக்கும் பூனையைப் பார்ப்பது போன்ற "நான் இரக்கமானவன்" எனும் பார்வை. ஆச்சரியம் என்னவென்றால் இதில் முன்பொரு காலத்தில் என்னுடன் படுத்தவர்களும் உண்டு. யோனியைத் தேடி வந்தவர்களுக்கு முகம் நினைவில் இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை ஆனால் அவர்களின் முகங்களை என்னால் சொல்ல முடியும். என்னுடன் படுத்த ஒவ்வொருவரின் முகத்தையும். சதைப் பிண்டமென - கொடூரமாக அழுத்தி - வெறியுடன் மிதித்து - குரல் வளையை நெறித்து பிராண்டிய அவ...

கண்ணீர்த் தடங்கள்

நேர் வெயில் நெடுநெடுவென நெற்றியில் ஏறிக் கொண்டிருந்தது. மரம் துளிக்குக் கூட அசையவில்லை. அசலூரில் உத்யோகம் பார்க்கும் மகனின் வரவுக்காக காத்திருக்கும் பெத்தவளைப் போல காற்றை எதிர்பார்த்து மீளாத துயரத்தில் சரிந்திருந்தன கிளைகள். நிழலை விரிக்க அவற்றிடம் கொஞ்சமும் திராணியில்லை. நுதத்தைச் சுருக்கிக் கொண்டு - நடக்கும் தோரணையில் தெருவில் ஊர்ந்துச் செல்லும் மனித உருப்படிகளின் கண்களில் தழும்பியபடி - அலைகளற்ற கானல் கடலொன்று அவ்வப்போது தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது. நெடுநாட்களுக்கு முன்னர் பக்கத்துத் தேசத்துக்குப் பறந்துவிட்ட பறவைக் கூட்டம், பிறந்த மண்ணுக்கு இன்னமும் திரும்பியிருக்கவில்லை. "எங்கப் போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்" ஆளக் காணோம். 'பசிவேற வயித்தக் கிள்ளுது' மதிய சாப்பாட்டிற்கு வராத கணவனைத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தாள் அழகம்மா. "நேரங் கெட்ட நேரத்துல வந்து சாப்புட வேண்டியது அப்றம் சாப்பாடு சேரல ஜீரணம் ஆகலனு ஏப்பம் ஏப்பமா விட்டுக்கிட்டு ஏகத்துக்கும் என்னைய புடிச்சித் திட்ட வேண்டியது. இதே வேலையா போச்சு இந்த மனுசனுக்கு. எத்தனத் தடவ சொல்றது. கேட...

கூடல்

வார்த்தைகளில்லா கவிதையை நீ முன்மொழிந்தாய்  இறுதியில் தூரிகையின்றி ஓவியமொன்றை தீட்டிவிட்டோம்...! கார்த்திக் பிரகாசம்...

உயிர்த்தல்

நாம் வாழ்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் சண்டையிடுவோம் பிணக்குக் கொள்வோம் கெஞ்சுவோம் உடனே ஒன்றுக் கூடுவோம் மதிப்போம் கொஞ்சுவோம் முத்தமிடுவோம் அணைத்துக் கொள்வோம் உடலின் புதிர்களை ஒன்றாக ஆராய்வோம் நான் நானாகவே இருக்கிறேன் நீ நீயாகவே இரு ஆனால் நாம் நாமாக இருப்போம் வாழ்த்தலுக்கும் உயிர்த்தலுக்கும் காதலே அடிப்படை காதலிப்போம் வாழ்தலின் சுகத்தை அனுபவிப்போம் தீரா பயணத்தின் பாதையைக் கூட்டாக கண்டடைவோம் கார்த்திக் பிரகாசம்...

குடை

மழையில் உங்களை நனைந்திடாமல் காத்ததற்காய் நெஞ்சையும் நிறத்தையும் நீர்த்திடும் சுட்டெரிக்கும் வெயிலில் என்னை விரித்து வைத்து பலியாக்குகின்றீர்கள் பாவம் செய்...

சின்னச் சின்னக் கொலைகள்

அடுத்தமுறை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் தயைக் கூர்ந்து என்னைக் கண்டதுண்டமாக வெட்டி வீசிவிடுங்கள் மனைவியோடோ காதலியோடோ அலைபேசியில் அன்பை முத்தங்களாகவும் காதலை இதயங்களாகவும் நீங்கள் பறக்கவிட்டுக் கொண்டிருக்கையில் நான் உங்களுக்குத் தெரியாமல் அதை நோட்டமிட்டவாறு இருந்திருக்கிறேன் நீங்கள் தவறவிட்ட ரூபாய்த் தாள்களை உங்களிடம் சொல்லாமல் யாரும் கவனித்திடாத வேளையில் அதனை என் சட்டைப் பைக்குள் அமுக்கிவிட்டு கமுக்கமாக வந்திருக்கிறேன் பணம் எடுக்க ஏடிஎம் வாசல் வரிசையில் நிற்கையில் உங்கள் கடவு எண்ணைக் கவனிக்காதவனைப் போல் நான் நடித்துத் தான் கொண்டிருந்தேன் அந்த நடைபாதையிலும் நின்ற இடத்திலும் நீங்கள் முகம் சுளிக்கும்படி எச்சிலைக் காறித் துப்பிவிட்டுத் திரும்பி பார்க்காமல் சென்றது நானே தான் வங்கியில் கடன்பட்டும் வட்டி கட்டியும் வாங்கி நிறுத்தியிருக்கும் உங்களது புதிய வாகனத்தில் ஆணியால் வரி வரியாய் இழுத்துவிட்டு அல்பச் சுகம் காணும் அடியனும் நானே தான் ஆடை விலகியிருப்பதை அறியாமல் வேலையில் நீங்கள் கவனமாக இருக்கையில் திடீரென யாரோ கவனிக்கும் பிரக்ஞை ஏற்பட்டு உடனே சரி செய்து சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட...

கலவி

புணர்தல் மட்டுமல்ல உள்ளங்கை ஈரமாகக் கரங்களை இறுகக் கோர்த்திருத்தலும் கலவியிலேயே சேரும்...! கார்த்திக் பிரகாசம் ..

ஷர்மிளாவும் கலையரசியும்

யாராவது என்னைப் பார்த்து "எந்தப் பள்ளியில் படிக்கிற" என்றுக் கேட்டால், "மாநகராட்சி நடுநிலைப் பள்ளி" என்றுச் சொல்லுவேன். பின்பு அவர்கள், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியா..? அது எங்க இருக்கு.. "லாரி மார்க்கெட்டுகிட்ட காந்தி செல இருக்குல்ல".. அங்க. "ஓ.. அந்த ஓட்ட பள்ளிக்கூடமா.. ஏன்டா ஓட்ட பள்ளிக்கூடத்துல படிக்கிறேன்னு சொல்லவேண்டியது தானா. அதவிட்டுட்டு மாநகராட்சியாம் நடுநிலை பள்ளியாம்" ஓட்ட பள்ளிக்கூடம். அப்படித்தான் ஊரில் எல்லோரும் சொல்வார்கள். செவ்வாய் பேட்டை ரோட்டில் நேராகப் போனால் நடுவில் ஒரு லாரி மார்கெட் வரும். லாரி மார்க்கெட்டிலிருந்து சாலை மூன்றாகப் பிரியும். அதில் எந்தப் பக்கத்தை நோக்கி நடப்பது போல் காந்தி கையில் தடியோடு நிற்கிறாரோ அந்தச் சாலையில் நடந்தால் நூறு மீட்டரில் இடதுபுறத்தில் அரசுப் பள்ளிக்கான அத்தனை அடையாளங்களோடும் எங்கள் பள்ளி இருக்கும். அப்பாவைத் திட்டியவாறே விண்ணப்ப படிவம் நிரப்பி, கட்டணமாக இருபத்தி ஐந்து ரூபாய் செலுத்தி அந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் அம்மா என்னைச் சேர்த்துவிட்டதை நினைவுக் கறைகள் இன்னும் ஞாபகம் வைத்துள்ளன. அப்...

நான் காதலிக்கப்படுகிறேன்

பேரன்பே உருவாய் பிறந்திட்ட பெண்ணினால் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான் காதலிக்கப்படுகிறேன் என்ன ஒரு உணர்வு இருக்கும் இரு விழிகளோடு இன்னொன்று இணைந்தது போல பறக்கவில்லை காதல் பாடல்களுக்குக் குதிக்கவில்லை மாறாக இயல்புநிலையில்தான் இருக்கிறேன் எதார்த்தமாகவே இதயம் துடிக்கிறது நிம்மதியைச் சுவாசிக்கத் தந்து நிம்மதியாய் சுவாசிக்க வைக்கிறது வேதனையை வெளியேற்றுகிறது மகிழ்ச்சியாய் வியர்க்கிறது காதலிக்கப்படும் மனித ஆத்மா இப்படித்தான் இருக்குமா.? அவள் பெண்தான் தேவதை அல்ல ஒருவேளை தேவதையாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னைக் காதலிப்பதனால் அவள் தேவதையாகிவிடவில்லை தேவதையாக இருப்பதனாலேயே அவள் என்னைக் காதலிக்கிறாள் நான் காதலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் கார்த்திக் பிரகாசம்...

டிரைவர்

முன்னே செல்லும் வாகனத்தின் பின்புறம் இப்படி எழுதியிருந்தது பெண் தேடும் போது கேவலமாகவும் ஆம்புலன்சில் போகும் போது கடவுளாகவும் தெரிபவன் டிரைவர் பின்னிருந்த வாகனத்தின் ஓட்டுநர் படித்து சில நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு கண்களைக் கவிழ்த்து விரிய விரும்பா இதழ்களை மேலாகக் குவித்து இடதுபுறமாக இழுத்து இறுதியில் இதழ்களை இயல்பாக்கினார் புன்னகையின் போர்வையில் என்னவென்று சொல்லமுடியாத ஏதோவொன்று இதழ்களின் ஓரத்தில் வழிந்தது அதன் மறைவில் இருவரும் முகம் தெரியாத நண்பர்களாகியிருந்தனர். கார்த்திக் பிரகாசம்...

மாயசுகம்

இது ஏதோ அறிகுறியா.? இல்லையென்றால் எப்போதோ படித்த அந்தக் கவிதை ஏன் இப்போது ஞாபகத்திற்கு வர வேண்டும்...? ஆட்கள் அரவமற்ற தனிபெரும் அருவியில் தானுமொரு துளியாகாமல் தள்ளிநின்று பறந்துவரும் சிறுமழைச் சாரலின் ஆலாபனையில் பாறையின் முதுகில் கண்களை மூடி அமர்ந்திருக்கும் மாயசுகம். மீண்டுமொரு முறை அன்றைய  நானாகிவிட்ட நான். கார்த்திக் பிரகாசம்...

இவர் தான் ஆசிரியர்

அடுத்ததாக நல்லாசிரியர் விருது பெற்றுள்ள நம் பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு.நௌசுத் கான் அவர்கள் பேசுவார்கள். உதவி தலைமையாசிரியர் அப்பெயரைக் கூறியதும் மாணவர்களின் கரவொலியில் மேடையே அதிர்ந்தது.வரவேற்பு பலகையில் அவரின் பெயரைத் தன் நெஞ்சில் தரித்திருந்த பட்டுத் துணிகள் காற்றில் அசைந்தாடின.அனைவரின் விழிகளும் ஆசிரியரின் உருவத்தைப் பருக வியப்புடன் விரிந்திருந்தன. அவர்களின் செவிகள் தானாகவே கூர்மையாகியிருந்தன. ஆசிரியர் எழுந்து மைக்கின் அருகில் வந்தார். "ஹெ ஹ் ஹெம்" என்று தொண்டையைக் கனைத்தார். கைகளை உயர்த்தி மாணவர்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அன்பு மாணவ மணிகளே, நான் நல்லாசிரியர் விருதுப் பெற்றுள்ளதற்குப் பலரும் பாராட்டிப் பேசினார்கள். வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி மாலைகள் மரியாதையாக. மாணவ முத்துகளே..! முதலில் விருதென்ற ஒன்றை என் வாழ்வில் நான் பெருமையாகக் கருதுவதில்லை. எனக்கு பெருமையெல்லாம் நீங்கள் தான். உங்கள் வளர்ச்சி தான். விருது வாங்க வேண்டும் என்பது என் நோக்கமுமல்ல. அதற்காக நான் உழைக்கவுமில்லை. என் மாணவச் செல்வங்களை சமூகத்தில் சிறந்தவர்க...

இன்றும் இப்படித்தான்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டுச் சென்றாள்.பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.ஒரு பையன் தெருமுக்கில் நேற்று கழுவிய அதே காரை இன்றும் கழுவிக் கொண்டிருந்தான்.பெருமூச்சுடன் புகையைக் கக்கி முதல் அடியை தயங்கியபடி எட்டு வைத்தது அரசாங்கப் பேருந்து. குளித்தும் பவுடர் பூசியும் மறைந்திடாத தூக்கத்துடன் சொக்கிக் கொண்டிருந்த முகங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் வழக்கம் போல் தனக்குள் நிறைத்தபடி முறைத்தது கல்லூரிப் பேருந்து. செத்த எலியின் உடலை தன் அலகால் கொத்தி இழுத்துக் கொண்டிருந்தது ஒரு காகம். இடிப்பது போல வந்து மயிரிழையில் எனக்கே உயிரை விட்டுச் சென்றது ஆட்டோ. இன்றும் இப்படித்தான் இயங்கத் தொடங்கியது நகரம் . கார்த்திக் பிரகாசம்...

அத்தம்மா

"பொம்பளையாட்டமா பேசறா... அக்கன்பக்கத்துல வாழணுமே; நாளைக்கு மூஞ்ச பாக்கணுமே; ஆத்ர அவசரத்துக்கு நாலு பேரு வேணுமேன்னு யோசிக்காம கொஞ்சங்கூட வாய்க் கூசாமல பேசறா அவ... என்ன மனுசியா இருப்பாளோ... மானங்கெட்டவ".. வாசலில் இருந்து வசவை வடித்துக் கொண்டே கண்ணைக் கசக்கியபடி வீட்டிற்குள் வந்தது அத்தை. விசாலம் அத்தை. பெயரைப் போலவே மனசும் விசாலம். அப்பழுக்கற்றவள். பருவ புரிதல்கள் உடலுக்குள் ஊடுருவத் துவங்கவதற்கு முன்னமே திருமணத்திற்குத் தீர்மானிக்கப்பட்டவள். ஆனால் அத்திருமணத்தின் தெளிவுகள் கண்முன்னே தென்படுவதற்குள்ளாகவே கணவனை இழந்துவிட்டாள்.இதே போல் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஒருநாள் வீட்டிற்கு வந்தவள் அதன்பின் எங்கள் வீட்டை விட்டு ஒருநாளும் சென்றதில்லை. வீட்டினுள்ளேயே இருப்பாள். எந்நேரமும் ஏதாவதொரு புத்தகத்தையோ, பேப்பரில் எழுதி வைத்த துணுக்குகளையோ வாசித்துக் கொண்டிருப்பாள். பிடித்த வரிகள் என்றால் தன் குறிப்புச் சேகரிக்கும் தொகுப்பில் எழுதிக் கொள்வாள். அர்த்த ராத்திரியில் எழுப்புகின்ற அச்சமூட்டும் துக்கக் கனவாய் அமைந்துவிட்ட தன் தங்கையின் திருமண வாழ்க்கையை எண்ணி அப்பா வேதனைப்படாத நாளில்லை. நன்கு...